“தொழிற்சங்க உரிமைகளை மூர்க்கமாக ஒடுக்கியவர் எம்.ஜி.ஆர்”: காக்கைச் சிறகினிலே ஆசிரியர் வி.முத்தையா

‘காக்கைச் சிறகினிலே’ ஆசிரியர் வி.முத்தையா (வயது 67) அவர்களுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ‘சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது’ வழங்கி கௌரவித்துள்ளது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் தமிழியல் ஆளுமைக்கான ‘சிலம்புச் செல்வர் மபொசி விருதுக்கு’ அவரை தேர்வு செய்துள்ளன. கூட்டுறவுத் துறையில் 35 ஆண்டுகாலம் பணியாற்றியவர். தனது தொழிற்சங்க அனுபவங்களையும் பத்திரிகை அனுபவங்களையும் கூறுகிறார். நேர்காணல் செய்தவர்: பி.பீட்டர் துரைராஜ்.

கூட்டுறவுத் துறைக்கு எப்படி வந்தீர்கள்?

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வீரமார்த்தாண்டன் புதூர் எனக்குச் சொந்த ஊர். கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி படித்து இருந்தேன். 1974இல் சென்னைக்கு வேலைதேடி வந்து மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆறுமாத காலம் எரிவாயு நிரப்பும் ஒப்பந்தப் பணியாளராகப் பணி புரிந்தேன். பின்பு 1975ஆம் ஆண்டு டியுசிஎஸ் என்கிற திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்தில் கணக்காளராகச் சேர்ந்தேன்.

இயல்பிலேயே இருந்த தன்னூக்கம் என்னை தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபடச் செய்தது. வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களில் 25 தொழிலாளர்கள் ஒன்றுசேர்ந்து சென்னை நகரம் முழுவதும் சைக்கிளிலேயே நான்கு நாட்கள் பயணித்து எல்லாக் கடைகளுக்கும் போய் தொழிலாளர் பிரச்சினையைப் பேசினோம். அதைத் தொடர்ந்து நடந்த சங்கப் பேரவையில் புதியவர்கள் பொறுப்புக்கு வந்தார்கள். பூ.சி.பாலசுப்பிரமணியம் செயலர் ஆனார். 9 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களில் நானும் ஒருவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

தொழிற்சங்க அனுபவங்களைச் சொல்லுங்களேன்…

1981ஆம் ஆண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்துநாள் ஒட்டுமொத்த விடுப்புப் போராட்டம் ஒன்றை தொடங்கினோம். டியுசிஎஸ் பொறுப்பில் ரேஷன் கடை, மண்ணெண்ணெய், மளிகை, எரிவாயு விநியோகம் என சென்னையில் இருந்த அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. புதிய பணியாளர்களை நியமிக்க அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். காவல்துறையைக் கொண்டு எங்கள் போராட்டத்தை மூர்க்கமாக ஒடுக்க அரசு முடிவெடுத்திருந்தது.

அப்போது கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளராக இருந்த மரியாதைக்குரிய பிரகாசம் அவர்களும் தொழிலாளர் துறை துணை ஆணையாளராக இருந்த செல்லத்துரை அவர்களும் தந்த ஆலோசனையின்படி மூன்றாவது நாளே போராட்டத்தை முடித்துக்கொண்டு நாங்கள் பணிக்குத் திரும்பிவிட்டோம்.

அடையாளம் தெரியாதவர்களை வைத்து ரேஷன் கடைகளை சூறையாடும் நிலைமையெல்லாம் இருப்பதாக உணர்ந்ததால் அந்தப் போராட்டத்தை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவந்தோம். மாதவரத்தைச் சார்ந்த சி.கெ.மாதவன் எங்கள் சங்கத்தின் தலைவர். சங்கம் தொடங்கிய 1952ஆம் ஆண்டிலிருந்து தொழிலாளிகள்தான் தலைவர் பொறுப்பிலும் இருந்தார்கள்.

1978ஆம் ஆண்டுதான் வெளியிலிருந்து சி.கெ.மாதவன் அவர்களை தலைவர் பொறுப்புக்குக் கொண்டு வந்தோம்.போராட்டத்தை ஒத்திவைத்து பணிக்கு செல்ல வேண்டிய நிலை குறித்து அவர் ஆற்றிய எழுச்சிமிகு உரையை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை.

எங்கள் போராட்டம் முடிந்த ஆறுமாதத்திற்குப் பிறகு மதுரையில் உள்ள பால்பண்ணைத் தொழிலாளர்கள் போராட்டம் தொடங்கினர். அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாதவரம் பால்பண்ணைத் தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். இரவோடு இரவாக 1200 பேரை வேலைநீக்கம் செய்து காலையில் புதிய ஆட்களை பணிக்கமர்த்தினார்.

எனவே, டியுசிஎஸ்ஸிலும் ஆவினிலும் தொடர்ந்து கோரிக்கைகளுக்காக போராட்டங்கள் நடந்தன. நாங்கள் போடும் கோரிக்கை நோட்டீசை அவர்கள் பால்பூத் முன்பு ஒட்டுவார்கள். அவர்கள் போடும் நோட்டீசை நாங்கள் டியுசிஎஸ் கடைகள் முன்பு ஒட்டுவோம். இந்தக் கடைகள் சென்னை நகரம் முழுவதும் மக்களோடு நேரடி தொடர்பு கொண்டவை.

இந்த இரண்டு சங்கங்களுக்கும் மாதவன்தான் தலைவர் என்பதால், அவரை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என்பதற்காகவே 1200 தொழிலாளர்களை எம்ஜிஆர் பணிநீக்கம் செய்தார். சிகெஎம் தலைமையில் ஊர்வலம் என்றால் ஆயுதம் தாங்கிய போலீஸ் பந்தோபஸ்துக்கு வரும். அவ்வளவு வலிமையாய் தொழிற்சங்கங்கள் செயல்பட்ட காலம் அது.

உங்களை வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்தார்களாமே!

அரசுத் துறைகளிலேயே ஊழல் மலிந்த துறை என்றால் அது கூட்டுறவுதான்.ஆளும் கட்சியின் ஆசீர்வாதம் இருந்தால் எது வேண்டுமானாலும் நடக்கும். கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 1987ல் போராடி வந்தோம். அப்போது டியுசிஎஸ் சங்கத்தின் தனி அலுவலராக இருந்த கூட்டுறவுச் சங்க இணைப்பதிவாளர் திரு. ஆர்.எஸ்.நடராஜன் அவர்களோடு முரண்பாடு ஏற்பட்டது. அவர் பெரிய ஊழல் அதிகாரி. ஒரு பொய்யான குற்றச்சாட்டில் என்னைக் கைது செய்வதற்கு காவல்துறை மூலம் முயற்சி செய்தார்.

பின்பு சங்க நடவடிக்கைகளை முடக்க வேண்டும் என்பதற்காகவே நான் உட்பட ருக்மாங்கதன், வேணு என சங்க முன்னணித் தோழர்கள் 15 பேரை சட்ட விதிமுறைகளை மீறி வேலைநீக்கம் (டிஸ்மிஸ்) செய்தார். அப்போது ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டு இருந்தது.

தேர்தல் முடிந்து 1989ல் திமுக அரசு பொறுப்புக்கு வந்தவுடன் கூட்டுறவுத் துறையில் அவர் செய்த ஊழலை விசாரிக்கச் சொல்லி கலைஞரிடம் மனு கொடுத்தோம்.உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். ஓய்வு பெறும் நாளன்று அவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். நான்கைந்து வருடங்களில் இறந்தும் விட்டார். வழக்கு நிலுவையிலேயே இருந்ததால், இறக்கும்வரை ஓய்வூதியப் பலன்கள் அவருக்குக் கிடைக்கவில்லை. பொதுவாக ஊழல் அதிகாரிகள் நேர்மையான தொழிற்சங்கங்களை விரும்புவதில்லை என்பதுதான் எனது அனுபவம்.

கூட்டுறவு அமைப்பை மேம்படுத்த நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன?

நுகர்வோர், பால், விவசாயி, மீன், நெசவாளி என ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான கூட்டுறவு அமைப்புகள் தமிழ்நாட்டில் உள்ளன. இது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. திமுக, அதிமுக ஆட்சியில் தனி அலுவலர்களை நியமித்து கூட்டுறவு அமைப்பையே நாசப்படுத்தி விட்டார்கள். உண்மையான பயனாளிகளை மட்டுமே கூட்டுறவு அமைப்புகளில் சேர்க்க வேண்டும். வி.பி.சிங் அரசு கொண்டுவந்த மாதிரிக் கூட்டுறவுச் சட்டத்தை அமலாக்க வேண்டும். அதன்படி கூட்டுறவு அமைப்புகளில் ஏற்படும் நட்டத்திற்கு நிர்வாகக்குழு இயக்குநர்களையும் பொறுப்பேற்கச் செய்யமுடியும்.

உற்பத்தியாகும் இடத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, நுகர்வோருக்கு மலிவாக விற்பனை செய்யவேண்டும். தும்கூரில் புளி வாங்கினார்கள். குல்பர்காவில் துவரம் பருப்பு வாங்கினார்கள். நெல்லூரில் அரிசி வாங்கினார்கள். இப்போது இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு வியாபாரிகளிடம் பொருளை வாங்குகிறார்கள். இதனால் நுகர்வோருக்கும் பலனில்லை; விவசாயிகளுக்கும் பலனில்லை; கூட்டுறவு அமைப்புகளுக்கும் பயனில்லை. கூட்டுறவின் நோக்கமே சிதைந்து கொண்டிருக்கிறது.

‘காக்கைச் சிறகினிலே’ ஆசிரியர் வி.முத்தையா
‘காக்கைச் சிறகினிலே’ ஆசிரியர் வி.முத்தையா

கூட்டுறவுத் துறையில் ஊழியராக இருந்த உங்களுக்கு பத்திரிகைத் துறையில் ஆர்வம் வந்தது எப்படி?

தொழிற்சங்கப் பணிகளில் முனைப்பாகச் செயலாற்றி வந்த்தால் தினமணியில் பணியாற்றி வந்த சந்தான கிருஷ்ணன், சுகதேவ், இராயப்பா போன்ற பத்திரிகையாளர்களின் நட்பு எனக்கு ஏற்பட்டது. எங்கள் தொழிற்சங்கம் சார்பில் ‘போரணி’, ‘போர்க்களம்’, ‘போர்க்குரல்’ என்கிற பத்திரிகைகளை அவ்வப்போது நடத்தி வந்தோம். திராவிட இயக்க ஆய்வாளர் திரு. க.திருநாவுக்கரசு அவர்களிடமிருந்து (இவர் டியுசிஎஸ்சின் முன்னாள் பணியாளர்) ‘நக்கீரன்’ இதழுக்கான உரிமையை வாங்கி 1980ல் நடத்தினோம். அதற்கு க.சுப்பு அவர்கள் ஆசிரியராக இருக்க ஒப்புக்கொண்டார். நக்கீரன் இதழை புலனாய்வு இதழாகக் கொண்டுவந்தோம்.

திமுக சார்பாக வில்லிவாக்கம் தொகுதியில் நின்று அவர் தோற்கடிக்கப்பட்டிருந்த சமயம் அது. அந்தவகையில் முதல் முதலாக புலனாய்வு பத்திரிகையை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது நாங்கள்தான் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியும். மாதம் இருமுறை இதழாக ஆறு மாதங்கள் கொண்டுவந்து விட்டோம். கட்சி சாராமல் நடத்தினோம். அதிமுகவை எதிர்த்து காங்கிரசை எதிர்த்து திமுகவை விமர்சித்து பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது.

‘நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக’ என்று சொல்லி திமுக காங்கிரசோடு ஓரணியில் இருந்த நேரம் க.சுப்பு திமுகவில் இருந்த காரணத்தால் அவரால் கட்சியின் நெருக்கடியைத் தாங்க முடியவில்லை. சுதந்திரமாக பத்திரிகையை நடத்தவும் முடியவில்லை. ஆனால் பத்திரிகையை எங்களிடம் விட்டுக்கொடுக்கவும் அவருக்கு மனமில்லை. இந்த நிலையில் அவரோடு சேர்ந்து இயங்க எங்களால் முடியவில்லை. எனவே ‘நக்கீரன்’ இதழை அவரிடம் கொடுத்துவிட்டு நாங்கள் வெளியேறி விட்டோம்.

அதோடு உங்கள் முயற்சியை கைவிட்டு விட்டீர்களா?

இல்லை. நக்கீரனுக்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு அடுத்த பத்திரிகை ஆரம்பிக்கும் ஆசை வந்தது. எனவே இளவேனில், க.சந்தானகிருஷ்ணன், கேரள மணி, வேணு (டியுசிஎஸ்), மீனாட்சிசுந்தரம் இவர்களோடு சேர்ந்து தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். பொதுநலத்தில் ஆர்வம் உள்ள நண்பர்களை ஒருங்கிணைத்து ஒரு பொது அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது சுற்றுப்பயணத்தின் நோக்கம்.

அப்போது பத்திரிகையாளர் இரா.ஜவகர் அவர்களிடம் ‘வசந்தம் வருகிறது’ என்ற பத்திரிகை(title) இருந்தது. அதை வாங்கி ‘வசந்தம்’ என்ற பெயரில் நடத்தினோம். ‘வருகிறது’ என்பதை சிறிய எழுத்துக்களில் போட்டுவிடுவோம்.சென்னையிலேயே 4000 பிரதிகள் விற்பனை ஆகும். அப்போது வடசென்னை, தென்சென்னை என இரண்டு முகவர்கள்தான் இருந்தார்கள். வாசகர்களின் தேவையை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆசிரியராக தாம்பரம் வழக்கறிஞர் எஸ்.சி.சிவாஜி இருந்தார்.

எங்கள் வளர்ச்சியைப் பார்த்து, நாங்கள் கணக்கு வைத்திருந்த கனரா வங்கியின் மேலாளர், இதனை பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாற்றினால் வங்கிக் கடன் தருவதாகச் சொன்னார். எனவே ‘டான் பப்ளிகேஷன்ஸ்’ (இரஷ்யா – தான் நதி) என்று கம்பெனியாக பதிவுசெய்ய ஆவணங்களை தயார் செய்தோம். ஆனால் இதில் ஆசிரியராக இருந்த சிவாஜிக்கு விருப்பம் இல்லை. அதனால் அந்த முயற்சியில் சிறிது தொய்வு ஏற்பட்டது.

அந்தச் சமயத்தில்தான் திமுக எம்பியாக இருந்த கம்பம் நடராஜன் இறந்ததையொட்டி நடந்த பெரியகுளம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. ஆட்சியிலிருந்த அதிமுக தொகுதி முழுவதும் வளர்ச்சிப் பணிகளை முழுவீச்சில் செய்தது. தெருவெங்கும் குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டன;பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. எனவே ‘இனி ஒரு எம்.பி எப்போது சாவார்’ என தலையங்கம் எழுதியிருந்தோம். காவல்துறை நெருக்கடி தந்தது. மேலும் சண்முகம் செட்டியார் எனச் சொல்லிக்கொண்டு ‘வசந்தம்’ என்கிற பெயர் தனக்கானது என சொல்லிக்கொண்டு ஒருவர் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவ்வளவுதான்! அத்தோடு அந்த இதழும் நின்று போனது.

காக்கைச் சிறகினிலே இதழைத் தொடங்கிய வரலாற்றைச் சொல்லுங்களேன்!

2010ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். அப்போது எங்கள் சங்கத்திற்கு ஏ.எம்.கோபு தலைவராக இருந்தார். அவர் ஏஐடியுசி அலுவலகத்தில் வந்து நான் பணிபுரிய வேண்டும் என்று அழைத்தார். இதற்கிடையில் நண்பர்கள் கூடுமிடம் ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக திருவல்லிக்கேணியில் ஒரு அறை எடுத்தோம். மாலைப் பொழுதுகளும் விடுமுறை நாட்களிலும் நிறையப் பேசுவோம் விவாதிப்போம்.

வைகறை, க.சந்திரசேகரன், இரா.எட்வின் போன்ற நண்பர்களுடன் இணைந்து காக்கைச் சிறகினிலே இதழைக் கொண்டுவந்தோம். 2011 அக்டோபரில் முதல் இதழ் வெளியானது. மறு ஆண்டே ‘கரிசல் விருது’ கி.ராஜநாராயணன் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து பல விருதுகள். தற்போது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயம் சுதேசிமித்திரன் தமிழ் இதழ் விருது வழங்கி மகிழ்வித்திருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் எங்களது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

One thought on ““தொழிற்சங்க உரிமைகளை மூர்க்கமாக ஒடுக்கியவர் எம்.ஜி.ஆர்”: காக்கைச் சிறகினிலே ஆசிரியர் வி.முத்தையா

  1. டியுசிஎஸ் -ல் பணியில் சேர்ந்த பிறகு தொழிற்சங்கம் மூலமாக திரு.முத்தைய்யா அவர்கள் எனது நீண்ட நாள் நண்பர். அவர் தொழிலாளர் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் பெரும் பாடுபட்டவர். அவரோடு இணைந்து பல தொழிற்சங்க மாநாடுகளில் கலந்துள்ளேன். தற்போது சமூக நல்லிணக்கத்திற்காகவும், தமிழுக்காகவும், பத்திரிக்கை நடத்திவருவது பாராட்டத் தக்கதாகும். மேலும் அவர் பணி சிறக்க வாழ்த்துகள்!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.