பா. ரஞ்சித்தும் சோழர்களும்

வாசுகி பாஸ்கர்

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பகுதிக்கு சமீபத்தில் ஒரு நிகழ்வுக்குச் சென்று திரும்பிய இயக்குனர் பா.ரஞ்சித்தின் உரையின் ஒரு பகுதி மட்டும் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது, அது இராஜராஜ சோழன் காலத்தில் பிடுங்கப்பட்ட நிலம் தொடர்பான கருத்து. அவர் பேசியதில் இரண்டு முக்கியமான அம்சம் உள்ளது, அந்த இரண்டுக்குமே நெருங்கிய தொடர்புமுள்ளது, இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பினால் உருவாகும் மும்முனை மௌனம் சுவாரசியமானது. ரஞ்சித் பேசியதில் குறிப்பிடத்தக்க இரு முக்கிய அம்சங்கள்;

1 . இராஜராஜ சோழன் காலத்தில் பிடுங்கப்பட்ட நிலம்

2 . சைவ மடங்களிடம் குவிந்துக்கிடக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நில மீட்பு

தமிழ்த்தேசியம், திராவிடம், பார்ப்பனீயம் – என்னும் இந்த மூன்று முனைகள் தத்தம் காரணங்களுக்காக தேர்வின் அடிப்படையில் மௌனம் காத்தாலும், இந்த விவகாரத்தை பொறுத்த மட்டில் அவற்றுக்குள் இருக்கும் ஒற்றுமை பரந்துபட்ட தளத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை. இதை நேர்மையோடு அணுகி அறத்தொடு பேச முடியுமேயானால், அது தலித் தரப்பிலிருந்தோ அல்லது பழமைவாத கருத்துகளையும் ஜனநாயகமற்ற போக்கையும் நிராகரிக்கும் முற்போக்கு இடதுசாரி தரப்பிலிருந்தோ மட்டுமே சாத்தியம். சம்மந்தப்பட்டவர்களை குற்றங்சாட்டும் நோக்கமின்றி, இதை தரவுகளின் படி பரிசீலித்து விவாதத்திற்குள்ளாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

வழக்கம் போல இக் கருத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தான் வரலாற்றில் முதன்முதலாக சொல்லியிருப்பதை போல கண்டங்களும் எதிர்வினைகளும் வந்த வண்ணமிருக்கின்றன. தலித்துகளிடமிருந்து நிலங்கள் பிடுங்கப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட வரலாற்றை ஒரு தலித் பேசுவதற்கு ஆயிரமாண்டு கால வரலாறு தேவையில்லை, ஐம்பதாண்டுக் கால தமிழக அரசியலே போதுமானதாக இருந்தாலும், ரஞ்சித் வெளிப்படுத்திய கருத்துக்கள் அவர் தம் சொந்த அனுமானத்திலிருந்து வெளிப்பட்டவை அல்ல, மாறாக அது ஆய்வுகளின் அடிப்படையிலானது.

பார்ட்டன் ஸ்டெயின், நொபோரு கரோஷிமா, ஒய்.சுப்புராயலு, சுரேஷ் பி. பிள்ளை, நா. வானமாமலை, மே. து. ராசுகுமார் உள்ளிட்டவர்களின் ஆய்வுகளும், “சோழர்கள் ஆட்சியொன்றும் பொற்கால ஆட்சியல்ல” என்பதை ராஜ் கௌதமன், அ. மார்க்ஸ், து.ரவிக்குமார், போ.வேலுசாமி, ஸ்டாலின் ராஜாங்கம் உள்ளிட்டவர்கள் பல சந்தர்ப்பங்களில் எழுதி வந்தவை தான்.

என் இந்த பதிவு மேற்சொன்ன அறிஞர்கள் எழுதியவற்றை மேற்கோளிட்டு, “இராஜராஜ சோழன் ஆட்சிக்காலம் எப்படி இருந்தது?” என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவும் நோக்கமல்ல, இணைய வாசிப்பு மட்டுமே அதற்கு உதவாது, இணையத்தில் வரலாற்றை சுருக்கி விடவும் முடியாது, ஆனால் இந்த விவாதங்கள் எந்தெந்த முனைகளில் இருந்து மழுங்கடிக்கப்படுகின்றன, “அதையொட்டிய மௌனங்கள் ஏன்?” என்பது விவாதிக்கப்பட வேண்டியவை.

1. தமிழ்த்தேசியம்

ஒரு அரசியலை முன்னெடுப்பதற்கு கோட்பாடுகளை தாண்டி சில அடையாள உருவகங்கள் தேவைப்படுகிறது, இங்கே தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் சோழர் காலத்தையும் இராஜராஜனையும் தமிழ் அரசியலின் குறியீடாக்கி, சமகால அரசியல் போக்கை வரலாற்றிலிருந்து வேறுபடுத்தி தமிழர் அரசியலாக முன்னிறுத்த சோழ வரலாறும் இராஜராஜனும் தேவைப்படுகிறது. நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தெலுங்கு பேசும் சாதிகள் பெற்ற அதிகாரம் தான் தமிழகத்தின் மொத்த சீரழிவுக்கும் காரணமென முன்னிறுத்தவும் இவர்களுக்கு சோழர்கள் ஆட்சி தேவைப்படுகிறது.

2. திராவிடம்

திராவிட அரசியலின் தொடக்க காலந்தொட்டு சைவம் / தமிழ் / வெள்ளாள / தெலுங்கு சாதிகளுக்கு உள்ள வரலாற்றுத் தொடர்பு முக்கியமானது. திராவிட அரசியலின் பார்ப்பன எதிர்ப்பென்பது ஆதிக்கத்திற்கு எதிரானது என்று மட்டுமே நாம் புரிந்துக்கொள்ள வேண்டியதில்லை, திராவிட அரசியலை ஆதரிப்பவர்கள் எல்லோருமே அக்கரணம் கொண்டே ஆதரிப்பவர்களும் அல்ல. அது பார்ப்பனர்களுக்கும் – வெள்ளாள நிலவுடமைச் சாதிக்கு எதிரான அதிகாரப் போட்டியாகவும் வரலாறு இருந்திருக்கிறது. பெரியாருக்கும் சைவ வெள்ளாளர்களுக்கும் நடந்த வாக்குவாதங்கள், முரண்பாடுகள் தனிவொரு நீண்டக் கட்டுரையாக எழுதக்கூடியவை. பார்ப்பனரை எதிர்க்கும் வரை முற்போக்கு வேடமிட்டுச் சிரிக்கும் வெள்ளாள சாதியினர், அவர்களுக்குள் இருக்கும் ஆதிக்கத்தனத்தையும், சமூக அதிகாரத்தையும், பிற்போக்குத்தனங்களையும், நிலங்களையும் கேள்விக்குட்படுத்தினால் சீற்றம் கொள்வார்கள், அந்தச் சீற்றத்திற்கு பெரியாரும் தப்பவில்லை என்பது வரலாறு.

3 . பார்ப்பனர்கள்

சோழர் ஆட்சிக்காலத்தில் எல்லா விதமான சுகபோக வாழ்க்கையையும் அனுபவித்தவர்கள் பார்ப்பனர்கள், தமிழகத்தில் பார்ப்பன வைதீகம் ஆழமாக கோலூன்றிய காலமாக சோழர் காலத்தை குறிப்பிடலாம். சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள், கொடுக்கப்பட்ட நிலங்கள் என எல்லாமே வைதீகத்திற்குட்பட்டவை. சதுர்வேதி மங்களம் என்றழைக்கப்படும் பகுதி சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊர், “சதுர்”என்றால் நான்கு, நான்கு வேதங்கள் ஓதும் பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலமாதலால் சதுர்வேதி மங்களம் என்று அழைக்கப்பட்டது. பல நூற்றாண்டுகள் கடந்து பிரிட்டிஷ் வருகையையொட்டி நிலங்களை வைத்து இனி பிழைக்கலாகாது என்றெண்ணிய பார்ப்பனர்கள் நிலங்களை விற்று நகரங்களிலும், கல்வி கற்றும் முன்னேறும் வேலையைத் தொடங்கினார்கள், அதனாலவே பிரிட்டிஷ் சர்காரில் முக்கிய பதவிகளை முன்கூட்டியே பெறும் நிலைக்கு முன்னேறினார்கள்.

இம்மூன்றையும் இணைப்புள்ளியாக கொண்டு இதன் உள்ளீடுகளை இணைத்துப் பார்த்தால்,

தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் நாயக்கர் ஆட்சிக்காலத்தை counter செய்வதற்காகவே, சோழர் ஆட்சிக்காலத்தில் பார்ப்பனர்களும், அவர்களுக்கிணையாக அதிகாரத்திலிருந்து வெள்ளாளர் ஆதிக்கத்தைப் பற்றிப் பேசுவதில்லை. தலித் சமூகத்தவர் அடிமைகளாக்கப்பட்டதும், அடிமை முறையினை சட்டமாக்கியதும், கூலிகளாக்கப் பட்டதையும் பேசாமல், அந்த வரலாற்றை மறக்கடித்து நல்லதோர் தமிழ்ச் சமூகத்தை உருவாக்கி விட முடியாது. அப்படி உருவான கூலிச்சமூகங்களை சுரண்டித்தின்னது பார்ப்பனர்கள் மட்டுமல்ல, வெள்ளாள நிலவுடமைச் சமூகத்தாரும் தான்.

அதே போல சோழர்கள் ஆட்சியில் கணிசமாக நிலங்களோடும் அரசு பட்டங்களோடும் அதிகாரமாயிருந்த வெள்ளாளர்கள், சோழர் ஆட்சியின் முடிவில் பெரும் நிலக்கிழார்களானார்கள். நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் அது தொடர்ந்தது, திராவிட அரசியல் சார்புடைய வெள்ளாள சாதியினர் பலர், சோழர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை பேசுவார்களேயொழிய, சோழர்கள் காலத்திலும் நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் சர்வ அதிகாரம் பொருந்தியவர்களாக இருந்த வெள்ளாளர்களை பற்றியோ, தெலுங்குச் சாதியினரை பற்றியோ பேச மாட்டார்கள். இது பற்றியான விவாதங்கள் வருகிற போது Diplomatic ஆக நழுவி, மேலோட்டமான கருத்துக்களை முன் வைப்பார்கள். தெலுங்கு சாதிகளின் ஆதிக்கத்தை குறித்து திராவிட அரசியலை கேள்வி கேட்கும் தமிழ் தேசியவாதிகளும், வெள்ளாள சாதி குறித்து கேள்விகேட்பதில்லை. பார்ப்பனர்களை அதிகார போட்டிக்காக மட்டுமே எதிர்க்கும் வெள்ளாளச் சாதிகளும் அரசியல் காரணங்களுக்காக தெலுங்கு சாதிகளை தங்களுடன் இணைத்துக்கொண்டது வரலாறு.

சோழர் ஆட்சிக்கால தொடர்பில் இப்படி நேரடியாகவே ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்திருப்பதால், அவரவர் தமக்கு வசதிப்பட்ட வரலாற்றை பேசிக்கொள்கிறார்கள், மறைக்கிறார்கள். ஆனால் சோழர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை தலித்துகளை “இழி பிறவிகள்” என்றும் சொல்லும் கல்வெட்டுகளும், அடிமைப்படுத்தப்பட்ட வரலாறும் எங்கும் விரவிக்கிடக்கிறது.

இதையெல்லாம் கடந்து தமிழக அரசியல் சூழலில் இராஜ ராஜ சோழனை “திராவிட ஐகானாக” மாற்ற முனைந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர் மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி. இராஜராஜன் பெயரில் விருது அறிவித்தார், 1000 வது ஆண்டு விழாவில் அதுவரையில் இல்லாமல் பட்டு வேஷ்டி சட்டையோடு தோன்றினார், மனு நீதியின் படி ஆட்சி நடத்திய சோழனுக்கு சிலை வைத்தார், சோழர் பெருமை பேசினார்.

மு. கருணாநிதி இக்காரியங்களை செய்வதற்கு முன்பே வரலாற்று ஆய்வாளர்களும், மார்க்சிய சிந்தனையாளர்களும், Subaltern விளிம்பு நிலை கருத்தியலின் படி புதிய கண்ணோட்டத்தில் மன்னராட்சி கால ஆதிக்கத்தையும், அடக்குமுறையையும், அடிமைத்தனத்தையும், ஜனநாயகமாற்றத் தனத்தையும் பேசத் தொடங்கி விட்டனர், அதன் பின்னும் இராஜராஜ சோழன் மோகத்தில் தன்னையே ராஜராஜனாக நினைத்து கருணாநிதி செய்ததெல்லாம் தனியே ஆய்வுக்குட்படுத்த வேண்டியவை. அதிமுக அரசும் திமுக அரசும் போட்டி போட்டுகொண்டு இக்காரியங்களில் கவனம் செலுத்தியவையானாலும், விளிம்பு நிலை அரசியலை முற்போக்கு கண்ணோட்டத்தோடு அணுகும் அரசியலெல்லாம் அறிந்த கருணாநிதி இதைச் செய்தது விந்தை.

அதனால் தான் கவிஞர் இன்குலாப் “கண்மணி ராஜம்” என்னும் கவிதையில்

ராஜராஜனின் சிலைக்காக வருந்துகிறார்
ராஜராஜனின் சிலையின் உள்ளே
நரம்புகள் உண்டா? நாளங்கள் உண்டா?
சிலையாகுமுன் ஜீவித்திருந்த இம்மன்னண்
என்ன செய்து கிழித்துவிட்டானாம்?”

என தன் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார்.

அரசு பாடத்திட்டத்திலிருந்த இந்த இன்குலாபின் கவிதையை மு. கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் நீக்கப்பட்டதென்றும், எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியில் திமுகவின் சம்மதத்தோடு நீக்கப்பட்டதென்றும் இருவேறு தகவல்கள் கிடைக்கின்றன, எது எப்படியாயினும் அது யாரால் நீக்கப்பட்டது என்பதல்ல விவாதம்.

இராஜ ராஜ சோழன் குறித்த விமர்சனத்தை சமூக தளத்தில் வைக்கவே முடியாதளவு விமர்சனமற்ற மன்னனாக உருவகப்படுத்தியதில் அரசுக்கும் மு. கருணாநிதி போன்ற சமூகத்தளத்தில் முக்கிய பங்காற்றிய ஆளுமைக்கும் இருக்கும் தொடர்பு கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் தான் ஆதாரபூர்வமாகக் கூட நிலங்களை பற்றியும், ஆயிரமாண்டு முன்னே வாழ்ந்த மன்னராட்சி காலத்தின் கொடுமைகளையும் பேச முடியாத சூழலில் சமூகத்தை நிறுத்தியிருக்கிறோம்.

காலத்தின் அவசியமாக இதை ஆய்வுக்குட்படுத்த வேண்டிய தமிழக பகுத்தறிவாளர்களோ, பார்ப்பனியத்தை எதிர்ப்பதாக அவ்வப்போது தங்களை சமாதானப்படுத்துக்கொண்டார்கள், ஒரு வகையில் அது அவர்களின் அரசியலுக்கான வசதியும் கூட. ஜனநாயகவாதிகளையும், இதை பேச வேண்டிய கட்டாயத்திலுள்ள தலித்துகளை தவிர இதை வேறாரும் பேசுவதற்கில்லை.

நெடுங்காலமாக இந்த மன்னராட்சிக் காலம் குறித்த விமர்சனங்களும், விவாதங்களும் தமிழ்ச்சூழலில் இல்லாதமையாமல், அது பொற்காலமென்னும் கருத்து பள்ளிக்கூடத்திலிருந்து சமூக, அரசியல் தளம் வரை பரந்துகிடந்தமையால், பல்வேறு சாதிகளும் அந்த பொற்காலத்தின் ஆட்சியை தான் சார்ந்த சாதியின் சாதனையாக உருமாற்றிக்கொள்ள தங்களை சோழ வம்சத்தோடு இணைத்துக்கொள்ளும் போக்கு தொடங்கியது. எந்த சமூக மக்கள் சாதி ரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் இந்த கொடுங்கோல் மன்னராட்சி காலத்தை எதிர்க்க வேண்டுமோ, யார் சுரண்டப்பட்டார்களோ, அவர்களே முன்னேறிய சாதிகளின் ஆண்டை பெருமைகளை பார்த்து அந்த மாயையில் விழுந்தது தான் பெருந்துயரம், “இந்நிலைக்கு எந்த வரலாறு துணை போனது?” என்பது தான் என் பதிவின் சாராம்சம்.

ஆய்வுகளாகவும், தரவுகளாகவும் பல புத்தகங்களில் இருக்கும் வரலாற்றுத் தரவுகளை பேச முடியாத சூழலில் தான் நாம் சமூகநீதி சமூகத்தை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம், மீண்டும் முதல் பத்திக்கு போகிறேன், பா. ரஞ்சித் வெளிப்படுத்திய கருத்துக்கள் ரஞ்சித்தின் கருத்துக்கள் அல்ல, ஆனால் அதை ஒவ்வொரு காலத்திலும் யாரவது ஒருவர் பேசியே தீர வேண்டும், இதையெல்லாம் பேசுபொருளாக்க முடிகிற இடத்திலிருந்து இவ்விவாதத்தை பா.ரஞ்சித் தொடக்கி வைத்திருக்கிறார், இது வரலாற்றை கிளறும், மீள வைக்கும், பேசுபொருளாக்கும், அது தான் முக்கியம், பேச முடியாத நிர்பந்தத்திலிருப்பவர்கள் குறைந்தபட்சம் பேசுகிறவர் பேசட்டும் என்றாவது இதை கடக்க வேண்டும்.

காலத்தை கடத்தி விட்டால் வரலாறு மறையுமென்பவன் மூடன், காலம் கூடக்கூட வரலாறு புதிய வேகத்தோடு மீளும், துரோகத்தையும் இழந்ததையும் பேசினால் தான் எதை பெற வேண்டுமென்பது விளங்கும், பேசுவோம், நாம் பேசுவோம்.

வாசுகி பாஸ்கர், எழுத்தாளர்; செயல்பாட்டாளர்.

One thought on “பா. ரஞ்சித்தும் சோழர்களும்

  1. //பெரியாருக்கும் சைவ வெள்ளாளர்களுக்கும் நடந்த வாக்குவாதங்கள், முரண்பாடுகள் தனிவொரு நீண்டக் கட்டுரையாக எழுதக்கூடியவை. பார்ப்பனரை எதிர்க்கும் வரை முற்போக்கு வேடமிட்டுச் சிரிக்கும் வெள்ளாள சாதியினர், அவர்களுக்குள் இருக்கும் ஆதிக்கத்தனத்தையும், சமூக அதிகாரத்தையும், பிற்போக்குத்தனங்களையும், நிலங்களையும் கேள்விக்குட்படுத்தினால் சீற்றம் கொள்வார்கள், அந்தச் சீற்றத்திற்கு பெரியாரும் தப்பவில்லை என்பது வரலாறு.//

    அரைவேக்காட்டுத்தனமான எழுத்து… போகிற போக்கில் எந்த ஆதாரமும் இல்லாமல் உள்நோக்கத்தோடு சேற்றை வாரி இறைத்திருக்கிறார் வாசுகி பாஸ்கர் … பெரியார் சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டோரை தீண்டத்தகாதவர்களாய் நடத்தியதை எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறார் .. சூத்திரன் என்பதை ஏற்றுக்கொள்வதில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று இருக்க முடியாது என்பதையும் நிறுவியிருக்கிறார்..

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.