திமுகவின் முன்னணி பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் மறைவுக்கு கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைமைக் கழக முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவரும், தி.மு.கவின் முன்னோடிகளில் ஒருவருமான மதுரை தீப்பொறி ஆறுமுகம்நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு (5-11-2016) மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
தீப்பொறி ஆறுமுகம் தனது பதினைந்தாவது வயதிலேயே தந்தை பெரியாரின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி, பெரியாரால் அப்போதே பாராட்டப்பட்டவர். அவருடைய பேச்சைக் கேட்டு, பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் அவருக்கு “தீப்பொறி” என்ற அடைமொழியைக் குறிப்பிட்டு, பின்னர் காலப் போக்கில் “தீப்பொறி” என்றாலே அவரைக் குறிப்பிடும் அளவிற்கு பெயர் பெற்று விட்டார்.
“மிசா” கைதியாகவும் தீப்பொறி ஆறுமுகம் சிறைவாசம் அனுபவித்தவர். தீப்பொறி ஆறுமுகத்தின் பேச்சினைக் கேட்பதற்காகவே தனி கூட்டம் கூடுவதுண்டு. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திமுக சார்பில் கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் செல்கிறார். தீப்பொறி ஆறுமுகத்தின் மறைவு குறித்து பெரிதும் வருந்துவதோடு, அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாய் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.