கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, வன்னியர் இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர் கவாய் அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக அரசு சட்டம் இயற்றியது. இதன் பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு திமுக அரசு அரசாணை வெளியிட்டு சட்டத்தை அமல்படுத்தியது. இந்த சட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், ‘சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும் என்று கேள்வியெழுப்பினர். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு தந்தது செல்லாது” எனத் தீர்ப்பளித்து வன்னியருக்கான இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பிலும், பாமக சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில், நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை மீறாமல் 10.5 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உள்ஒதுக்கீடு வன்னியர் உட்பட 7 பிரிவினருக்கானது என்றும் தெரிவிக்கப்பட்டது.