ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் என்ற எந்த விபரமும் தெரியாது என விசாரணை ஆணையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்திடம் கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த சந்தேகங்களை ஜெயலலிதா சார்ந்த கட்சியினர் எழுப்பியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளிப்படையாக ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி வருகின்றனர். அந்த மர்மம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த அதிமுக ஆட்சியில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த விசாரணை ஆணையம் தொடங்கியது. இடையில் பல மாதங்களாக விசாரணை நடைபெறவில்லை.
இந்தநிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பேரில் தற்போது மீண்டும் விசாரணை தொடங்கி உள்ளது.
ஏற்கனவே ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக 154 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி முடித்து உள்ளது. அவர்கள் அனைவரது பதில்களும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சசிகலா தரப்பினர் கேட்டுக்கொண்டதன் பேரில் அப்பல்லோ டாக்டர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. டாக்டர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது.
இந்தநிலையில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா உறவினர் இளவரசி ஆகியோருக்கு ஆறுமுகசாமி ஆணையம் அழைப்பாணை அளித்து இருந்தது.
ஏற்கனவே 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஓ.பன்னீர்செல்வம், இன்று ஆறுமுகசாமி ஆணைய அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் ஆணைய விசாரணை முன்பு நேரில் ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதை தவிர மற்ற உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என ஓ.பன்னீர் செல்வம் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது வாக்கு மூலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரெயில் நிகழ்வில் கலந்து கொண்டபோது ஜெயலலிதாவை பார்த்ததாகவும் அதற்கு பின்னர் அவரை பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
2016 செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் தனக்கு தெரியாது எனவும் சொந்த ஊரில் இருந்த போது நள்ளிரவு நேரத்தில் தன் உதவியாளர் மூலம் தெரிந்து கொண்டதாகவும், மறுநாள் பிற்பகலில் அப்போலோ மருத்துவமனை சென்று அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்ததாகவும் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதை தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது. எனவும் கூறிய பன்னீர்செல்வம், ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர் என்ற எந்த விபரமும் தனக்கு தெரியாது எனக் கூறியுள்ளார்.
துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் விசாரணை ஆணையம் அமைக்கும் கோப்பில் தானும் கையெழுத்திட்டுள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இரண்டாம் கட்ட தலைவராக இருந்த பன்னீர்செல்வம் தனக்கு எதுவுமே தெரியாது எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.