மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்
முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மாநில அரசின் நிதிநிலை அறிக்கை கிட்டத்தட்ட அனைவராலும் பெரிதாக பேசப்படுகிறது. பெண் கல்வியில் இருந்து பெரியாரின் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்படுவது வரை பெரும்பாலான பட்ஜெட் அறிவிப்புகள் வெகுசன மக்களால் கொண்டாடப்படுகிறது.
தமிழக அரசின் இந்த வருடத்து பட்ஜெட்டின் பெரும்பாலான அறிவிப்புகள் இப்படி பெரிதாக கொண்டாடப்படும் வேளையில் ‘கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் மையமாக மேம்படுத்தப்படும்’ என்கிற அறிவிப்பு மட்டும் பகடியாக, கேலியாக பேசப்படுகிறது. மிக முக்கிய அரசியல் விமர்சகர்கள் கூட “இது எதிர்கட்சிகளுக்கான அறிவிப்பு” என்று இந்த திட்டத்தின் நோக்கத்தை வேடிக்கையாக்குகிறார்கள். உண்மையில் வருத்தமாக இருக்கிறது.
அதிகரிக்கும் மனநல பிரச்சினைகளின் தீவிரத்தை நாம் இன்னும் உணரவில்லை என்பதையே இது காட்டுகிறது. மனநல பிரச்சினை என்பது யாருக்கோ, எப்போதோ வரக்கூடிய பிறழ்வு என்ற எண்ணமே இன்னும் நமக்கு இருக்கிறது. ஆனால் உண்மையில் நாம் எல்லோருமே ஏதேனும் ஒரு மனநல பிரச்சினையை சமீப காலங்களில் எதிர்கொண்டு வருகிறோம், அதன் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
15 வயதிலிருந்து 30 வயது வரை உள்ளவர்களில் நடக்கக்கூடிய தற்கொலைகள் இந்தியாவில்தான் மிக அதிகம். இவர்கள் எல்லாம் யாரோ அல்ல நம் கண் முன்னே இருப்பவர்கள், நமது வீட்டில் இருப்பவர்கள், நமது நண்பர்களாக இருப்பவர்கள், நம் கூடவே வசிப்பவர்கள்.
ஊரடங்கு காலத்திற்கு அதிகரிக்கும் மனநல பிரச்சினைகளை உலகம் அச்சத்துடன் கவனித்து வருகிறது. ஏராளமான குழந்தைகள் இதுவரை இல்லாத வகையில் பல புதிய மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளிகள் மூடல், அதிகரிக்கும் டிஜிட்டல் சாதனங்கள் பயன்பாடு, ஆன்லைன் விளையாட்டுகள் என அவர்களது மனநிலை பல்வேறு காரணங்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர்கள் மட்டும் இல்லாமல் இளைஞர்களிடம் புதிதாக உருவாகியிருக்கக்கூடிய அதீத மனச்சோர்வும், மனப்பதட்டமும், கணவன் மனைவி உறவில் உருவாகியிருக்கக்கூடிய சிக்கல்களும், முதியவர்களின் புதிய மனநல பிரச்சினைகளும் இந்த காலத்தில் அதிகரித்திருக்கின்றன.
பொருளாதார சுமைகள், வேலையிழப்பு, உறவு சிக்கல்கள், எதிர்காலத்தின் மீதான நிச்சயமின்மை, அதிகரிக்கும் போட்டித்தேர்வுகள், மாணவர்களின் மனநிலைக்கு எதிரான புதிய கல்வி கொள்கைகள், பொருளாதார திட்டங்கள் என அத்தனையும் சேர்ந்து பொது சமூகத்தின் மனநிலையை பெரிதளவு பாதித்திருக்கின்றன. சமீபத்தில் அதிகரித்திருக்கும் தற்கொலைகள், போதை பொருள் பழக்கங்கள், விவாகரத்துகள், குற்ற சம்பவங்கள் போன்றவையெல்லாம் ஆரோக்கியமற்ற மனநிலையின் வெளிப்பாடே!
இதற்கெல்லாம் நம்மிடம் என்ன தீர்வு இருக்கிறது?
எப்போதும் போல “கவுன்சிலிங் மையங்கள் அமைக்கப்படும்” என்ற ஒற்றை அறிவிப்போடு அரசாங்கள் தனது கடமையை முடித்துவிடுகின்றன. மனம் தொடர்பான அறிவியல் பூர்வமான பார்வை இன்னும் இல்லாததன் விளைவாகவே “கவுன்சிலிங்” என்பது அத்தனை பிரச்சினைக்குமான சர்வலோக தீர்வாக முன்வைக்கப்படுகிறது. நாமும் “Fancy” ஆன அந்த அறிவிப்பை கேட்டு பிரச்சினை தீர்ந்து விட்டதாக நினைக்கிறோம். உண்மையில் எந்த பிரச்சினையும் தீரவில்லை, கவுன்சிலிங் தருகிறோம் என்று சொல்லிவிட்டு நாம் வேறு வேளைகளை பார்க்கப்போய்விடுகிறோம் அவ்வளவே!
என்ன தான் தீர்வு?
மனநலம் தொடர்பாகவும், அதிகரிக்கும் மனநல பிரச்சினைகள் தொடர்பாகவும் நாம் இன்னும் அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு தனி நபரின் மனநிலையில் அவரின் உயிரியல் காரணிகளுக்கும் (Biological determinents), சமூக காரணிகளுக்கும் (Socila determinants) உள்ள தொடர்பை அறிவியல் பூர்வமாக நிறுவ வேண்டும். அப்போதுதான் ஒரு சமூக இடறுகளினால் தனி நபரின் மனநலம் பாதிக்கப்படுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும். கல்வி தொடர்பான புதிய கொள்கைகள் எப்படி மாணவர்களின் மனநிலைக்கு எதிரானதாக இருக்கிறது என்பதை அறிவியல் பூர்வமாக நிறுவினால்தான் அரசாங்கத்திற்கு அதை பரிந்துரை செய்ய முடியும்.
மனநலம் தொடர்பாகவும், அதிகரிக்கும் மனநல பிரச்சினைகள் தொடர்பாகவும், அதன் புதிய சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் நாம் உலகத்தரமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆராய்ச்சிகளை இதுவரை நாம் முன்னெடுக்கவே இல்லை.
மருத்துவத்துறையில் மனநலத்துறை தான் சமீபத்தில் பெரிதும் வளர்ச்சியடைந்து வரும் துறையாக இருக்கிறது. பல புதிய சிகிச்சை முறைகள், மரபணு சோதனைகள் என அதில் ஏராளமான ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. ஆனால் அதை பற்றியெல்லாம் நாம் இன்னும் யோசிக்க கூட இல்லை. இன்னமும் மனநலத்திடங்களுக்கு சரியான நிதி ஒதுக்கப்படுவதில்லை அப்படி ஒதுக்கப்படும் நிதியும் ஒன்றிய அரசின் இரு நிறுவனங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த நிறுவனங்கள் அப்படி என்ன சாதித்தன என்று பார்த்தால் ஒன்றும் இல்லை.
நேற்றைய தமிழக அரசின் அறிவிப்பின் போது கூட பெங்களூருவில் உள்ள தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனத்தை (NIMHANS) போல கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என நிறைய பேர் சொன்னார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. நாம் ஏன் அவர்களை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்? அங்கு மக்களுக்கு பயன்படும் வகையில் ஆக்கப்பூர்வமாக என்ன நடந்திருக்கிறது? இந்த கொரொனா காலகட்டத்தில் என்ன விதமான ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது? இரண்டாம் அலை நேரத்தில் “இறப்பு செய்திகளை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் அது மக்களின் மன நிலையை பாதிக்கும்” என்று ஒன்றிய அரசிற்கு களங்கம் வராமல் பார்ர்த்துக்கொள்ளும் வேலையை தவிர அவர்கள் கொரோனா காலகட்டத்தில் வேறு எதுவும் செய்யவில்லை. அதனால் நாம் அவர்களை முன்மாதிரியாக கொள்ள தேவையில்லை.
மாறாக ஒரு ‘State of Art’ மனநல மற்றும் நரம்பியல் மையத்தை உருவாக்குவோம், அதி நவீன மனநல சிகிச்சைகள், ஆராய்ச்சிகள், திட்டங்களை உருவாக்குவோம். மனநலம் தொடர்பான புதிய அறிவியல் கருத்துகளை உருவாக்குவோம், மனநல சேவைகளை தமிழகத்தின் கடைக்கோடி மனிதர்களுக்கும் கொண்டு செல்வோம், நவீன அறிவியலின் பலனை கடைசி மனிதர்கள் வரை கொண்டு சேர்க்கும் புதிய திட்டங்களை, கொள்கைகளை உருவாக்குவோம். அப்படி கிடைக்கும் புரிதல்களை, சாதனைகளை, தரவுகளை சர்வதேச மருத்துவ அறிவிலுக்கு பரிந்துரை செய்வோம். நாம் யாரையும் மாடலாக கொள்ள தேவையில்லை, நாமே இதில் மற்றவர்களுக்கு மாடலாக இருப்போம். மனநலத்துறையிலும் ஒரு தமிழ்நாட்டு மாடல், திராவிட மாடலை உருவாக்குவோம்.
மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்