ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், கட்சியை மறு சீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளம், பாஜக, திரினாமுல் காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு கட்சிகளின் தேர்தல் வெற்றிகளுக்கு பிரச்சார வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் காங்கிரஸ் எப்படிப்பட்ட வியூகம் அமைத்தால் 2024 தேர்தலில் வெல்ல முடியும் என யோசனை கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற நேரு குடும்பத்தினர் அக்கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து நீங்க வேண்டும் என பல அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், பிரசாந்த் கிஷோர் நேரு குடும்பம் வெளியேறினாலும் அக்கட்சியை மீண்டும் உயிர் பெற வைக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் மறு அவதாரம் எடுக்க வேண்டும் எனவும் அதன் அடிப்படையை சரி செய்ய வேண்டிய நேரம் இது எனவும் கூறியுள்ள அவர், காங்கிரசின் ஆன்மா, கருத்துக்கள் மற்றும் சித்தாந்தங்கள் அனைத்தும் சரியானவைதான். ஆனால், மற்றவை எல்லாம் மாற்றப்பட வேண்டும் என அந்தப் பேட்டியில் சொல்கிறார்.
காங்கிரஸ் இன்று தனது செயல் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தினாலே 2024 தேர்தலில் பாஜகவிற்கு சவால் விட முடியும். கிழக்கு மற்றும் தென்னிந்தியாவை உள்ளடக்கிய சுமார் 200 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக இன்னும் 50 இடங்களுக்கு மேல் பெற முடியாமல் திணறி வருகிறது எனவும் பிரசாந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை நடத்தவில்லை. உட்கட்சி ஜனநாயகத்தின் சாயல் கூட அவர்களிடம் இல்லை என்றும் ஒரு குறிப்பிட்ட மையத்திலேயே அதிகாரம் நிலைக்கொண்டிருப்பதாகவும் பிரசாந்த் விமர்சித்துள்ளார். அடித்தளத்தில் உள்ள தலைவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படாதவரை எதையும் சாதிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
எந்தவொரு கட்சியும், குறிப்பாக காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக தேசிய அளவில் உருவெடுக்க விரும்பினால், அவர்கள் 10, -15 ஆண்டுகாலத்துக்கான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அந்தப் பேட்டியில் பிரசாந்த் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார்.