மயிலாடுதுறையில் பழைய இரும்புக் கடையில் இலவச பள்ளிப் பாடப் புத்தகங்களை விற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையில், முத்துவக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான பழைய இரும்புக் கடையில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான இலவச பள்ளிப் பாடப் புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக புகார் எழுந்தது. இதனையடுத்து கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தபோது 2019 – 20ஆம் ஆண்டுக்கான சுமார் 5 ஆயிரம் பாடப் புத்தகங்கள் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பள்ளிக்கூடங்களை பூட்டி பாடப்புத்தகங்களை விற்றுப்பிழைப்பு நடத்துவதுதான் அதிமுக அரசின் சாதனையா? எனக் கேள்வி எழுப்பியுள்ள இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகங்கள் கையில் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.