டி. தருமராஜ்
பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு குறித்து எதையுமே எழுதப்போவது இல்லை என்று தான் முடிவு செய்திருந்தேன்.
ஆனால், எனது நண்பர்கள் அடையும் மனக் கலக்கம் என் விரதத்தைக் கலைத்திருக்கிறது.
எதையுமே எழுதுவதில்லை என்று தீர்மானித்திருந்ததற்கு சில காரணங்கள் இருந்தன. அவை இன்னமும் உயிரோடு இருக்கின்றன.
தீர்ப்பு வழங்கப்பட்டதும் ஒரு நாத்திகக் கிறித்தவனான எனக்கு பொக்கென்று இருந்தது. இந்தப் பொக்கை என்னால் விளக்க முடியவில்லை. எனக்கு என்ன தோன்றுகிறது என்பதே எனக்கு விளங்காமல் இருந்தது.
சில நெருக்கடியான நேரங்களில் இப்படி தோன்றக்கூடும். அதை, வெறுமை, ஆயாசம், இயலாமை என்று எப்படி சொல்லிப் பார்த்தாலும் சரியாக வரவில்லை. ஆனால், எதுவோ இன்னமும் மிச்சமிருப்பது போலவும், அது உங்களோடு உங்களை தின்று கொண்டிருப்பது போலவும் படும் உணர்வு.
நமது நண்பர்கள் சிலரும் கூட இதே மாதிரியான உணர்வுகளால் தாக்கப்பட்டிருப்பதை அவர்களின் பதிவுகளும் கட்டுரைகளும் காட்டுகின்றன.
அதனால், அவர்களுக்கு ஒரு இலவச தப்பித்தல் வழிமுறையைச் சொல்லித்தரலாம் என்பதே இப்பதிவின் நோக்கம்.
ஒரு இஸ்லாமியராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ அல்லது பெளத்தர் போன்ற வேறு சமய அடையாளங்களுடனோ அல்லது பகுத்தறிவுவாதியாகவோ அல்லது நாத்திகராகவோ இந்தத் துயரத்தை நீங்கள் கடக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இதைக் கடப்பதற்கு மிக எளிய சூத்திரம் –
கண்ணை மூடிக் கொண்டு, நீங்களும் அந்தப் பெரும்பான்மை இந்துக்களில் ஒருவர் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
நினைத்த மறுகணத்திலிருந்து உங்கள் மனம் இறகு போல இலகுவாவதை உணர்வீர்கள்.
அந்த இனம் புரியாத அழுத்தம் இப்பொழுது உங்களை விட்டு விலகிச் செல்வதை நீங்கள் கண்கூடாகப் பார்க்க முடியும்.
ஒரு இந்துவாக, அந்த த் தீர்ப்பை எதிர் கொள்வது எல்லாவற்றிலும் எளிது என்பதை நீங்களே இப்பொழுது உணரத் தொடங்குவீர்கள்.
இந்துவாக உணரும் நீங்கள் இந்தப் பிரச்சினையை கடப்பதற்கான வழிமுறைகள் மிகத் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றன.
- ராமர் கோவில் கட்டப்படுவது குறித்து பெருமை கொள்ளுதல்.
- அல்லது சஞ்சலப்படுதல்.
- அல்லது வெட்கப்படுதல்.
- அல்லது கோப ப்படுதல்.
- அல்லது ஆவேசப்படுதல்.
- அல்லது நியாயப்படுத்துதல்.
நீங்கள் இந்துவாக இல்லாத பட்சத்தில் இதில் எதையும் நீங்கள் செய்ய முடியாது என்பது தான் இன்றைய நிலவரம்.
டி. தருமராஜ், பேராசிரியர்; எழுத்தாளர்.