‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்

ஏஐடியுசி – பால்வள ஊழியர் சங்க துணைத்தலைவரான, ஆர்.பாளையம் ஆவின் நிறுவனம் பற்றியும்,தனது தொழிற்சங்க அனுபவம் பற்றியும் இந்த நேர்காணலில் பேசுகிறார் – பீட்டர் துரைராஜ்

கேள்வி : ஆவின் நிறுவனம் பற்றி சொல்லுங்களேன் ?

பதில் : சென்னை நகர மக்களுக்கு மலிவாகவும்,தரமாகவும் பாலை வழங்க வேண்டும் என்ற தேவை எழுந்தது. இதற்காக 1962 ல் மாநிலஅரசு ‘தமிழ்நாடு அரசு பால்பெருக்குத் துறை’ ஐ உருவாக்கியது.பாலை கொள்முதல் செய்து ,வீடு வீடாக விநியோகம் செய்தார்கள்.1972 ம் வருடம் திமுக அரசு பால்வளத்துறையை பால்வளக் கழகமாக (Dairy Development Corporation) மாற்றியது. நான் 9.9.1971 ல் பணிக்கு சேர்ந்தேன்.

கேள்வி: நீங்கள் 17 ஆண்டு காலம் வேலை நீக்கம் செய்யப்பட்டு இருந்தீர்களே?

பதில் : மதுரை பால்வள தொழிலாளர்கள் 15 பேரை தமிழக அரசு வேலை நீக்கம் செய்தது. அவர்களை மீண்டும் வேலைக்கு எடுக்க வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் 19.11.1980 அன்று செய்தோம்.பேச்சு வார்த்தை நடக்கவில்லை. வேலைநிறுத்தம் 16 நாட்கள் நீடித்தது. ஆகவே 1130 பேரை தமிழக அரசு வேலை நீக்கம் (டிஸ்மிஸ்) செய்தது.ஏற்கெனவே ‘உலகவங்கிக் கடன் வேண்டும் என்றால் வலுவான தொழிற் சங்கம் இருக்கக் கூடாது’ என்று அது நிபந்தனை விதித்து இருந்தது. அந்தச் சூழலில் தமிழக அரசும் இதைச் சாக்காக வைத்து, தொழிற்சங்கத்தை பலவீனப்படுத்த எங்களை வேலை நீக்கம் செய்தது. நாங்கள் 1.1.81 அன்று பேரணி நடத்தினோம்.அதில்110 பேர் கைதாகி 23 நாட்கள் சிறையில் இருந்தோம்.ஏற்கெனவே முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக சி.கெ.மாதவனோடு (அவர்தான் சங்க தலைவர்) சேர்ந்து 16 பேர் சிறையில் இருந்தார்கள்.சிறையில் இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தோம்.

பின்பு முதலமைச்சரைச் சந்திக்க இராமாவரம் தோட்டத்திற்கு குசேலருடன் சென்றேன்.’சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது’ என்று எம்ஜிஆர் சொல்லி விட்டார். அவையெல்லாம் மறக்கமுடியாத அனுபவங்கள்.

கேள்வி: நீங்கள் சுப்பராயன் தேர்தலில் நிற்க பாராளுமன்ற தேர்தலுக்கு காப்புத் தொகை செலுத்தினீர்களாமே !

பதில்: இப்போது மட்டுமல்ல; கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின் போதும் தோழர் சுப்பராயனுக்கு எங்கள் சங்கம் காப்புத் தொகை கட்டியது. எம்ஜிஆரினால் வேலை நீக்கம் செய்யப்பட்ட பால்வளத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரி எம்.அப்பாத்துரை, அழகிரிசாமி, ஜி.பழனிசாமி, ரகுமான்கான்(திமுக), முகமது இஸ்மாயில்(ஜனதா), இளைய பெருமாள்(காங்) போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்தார்கள். தோழர். கே.சுப்பராயன் திமுக ஆட்சியின் போது சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் 1987 ம் ஆண்டு கொடுத்தார். இதனால் வேலை நீக்கம் செய்யப்பட்ட 1170 பேரில் 390 பேருக்கு 1989 ல் மீண்டும் வேலை கிடைத்தது. 1997 ல் மீண்டும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த விடுபட்ட மற்ற தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்கச் செய்தார். சி.கெ.மாதவனுக்குப் பிறகு தோழர் மூர்த்தி எங்களுக்கு வழிகாட்டி வருகிறார். அப்போது (1981)மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்த வி.பி.சிந்தனோ,அதன் பிறகு அதே வில்லிவாக்கம் தொகுதியில் தேர்ந்து எடுக்கப்பட்ட டபுள்யூ.ஆர்.வரதராஜனோ எங்களுக்காக குரல் எழுப்பவில்லை.

கேள்வி : 17 வருடம் வாழ்க்கையை எப்படி ஓட்டினீர்கள் ?

பதில் : மீண்டும் வேலைக்காக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,அதிகாரிகளைச் சந்தித்தல்; தொழிலாளர் நீதிமன்றம், உயர்நீதிமன்ற வழக்குகள் என என்னுடைய பெரும் பகுதிநேரம் கழிந்தது. 1987 முதல் 1996 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி செயலாளராகவும் இருந்தேன். பால்பண்ணை தொழிலாளர்கள், நண்பர்கள் உதவி செய்தனர்.சி.கெ.மாதவன்தான் கூட்டுறவு துறை தொழிலாளர் சங்க தலைவராக இருந்தார்.அதில் இருந்த சீனு, வேணு, முத்தையா (டியுசிஎஸ்) போன்றவர்களை என்னால் மறக்கவே இயலாது. பல்லாவரம் ரவி அவ்வப்போது உதவி செய்வார். நான் மனச் சோர்வு அடையாமல் இருக்க இவர்கள் எல்லாம் முக்கியமான காரணமாகும்.ஒரு பிரச்சினை யில் காவல்துறை எங்கள் மீது 307 (கொலைமுயற்சி வழக்கு) போட்டுவிட்டது. இதற்காக குரோம்பேட்டையில் இருந்து, கட்சி வழக்கறிஞர் அங்குசாமி எழும்பூர் நீதிமன்றத்திற்கு வருவார்.சாட்சிகளாக வந்திருப்பவர்களுக்கு அவர் வடை,டீ வாங்கிக் பொடுப்பார். அதுவே 200 ரூபாய் வரும்.அவர் என் பையில் நூறு ரூபாய் வைத்து விட்டுச் செல்வார். ரவி சேகர் என்ற வழக்கறிஞர் நாங்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு எங்களுக்காக செஷன்ஸ் கோர்ட்டில் வாதாடினார்.

பால்வள ஊழியர் சங்க துணைத்தலைவரர் ஆர். பாளையம்

கேள்வி : பால் உற்பத்தியை பெருக்க ஏதும் ஆலோசனை சொல்லியிருக்கிறீர்களா ?

பதில் : ‘தமிழ்நாடு பால்வள அனைத்து ஊழியர் சங்கம்’ என்பது ஏஐடியுசி அமைப்பு.ஆவின் பாலை கலப்படம் செய்து வைத்தியநாதன் என்பவர் சிறைக்கு சென்றார் என்பது உங்களுக்கு தெரியும். இவர் ஆவின் நிறுவனத்தில் மீண்டும் காண்டிராக்ட் எடுக்க முயற்சி செய்து வருகிறார்.ஆளுங்கட்சி பிரமுகர்களும் இவருக்கு ஆதரவு தருகிறார்கள்.இவருக்கு காண்டிராக்ட் மீண்டும் தரக்கூடாது என்று தோழர்.மூர்த்தி கடிதம் எழுதி யுள்ளார்.

இந்தியாவிலேயே பொதுமக்கள் மாதந்தோறும் முன்கூட்டியே பணம் கட்டி,அட்டை வாங்கி பாலை தினந்தோறும் பெற்றுக் கொள்வது தமிழ்நாட்டில் மட்டும்தான் நடைபெறுகிறது. அந்த அளவுக்கு ஆவின் நிறுவனம் சாதாரண மக்களின் நல்ல பேரை சம்பாரித்து உள்ளது. அதற்கு ஏற்றபடி ஆவின் நிறுவனம் நடந்து கொள்ள வேண்டும்.12.75 இலட்சம் பால் தினமும் விற்பனை ஆகிறது. அதில் 7.5 இலட்சம் வாடிக்கையாளர்கள் பால் அட்டை முன்கூட்டியே வாங்கி விடுகின்றனர். மீதி விற்பனை முகவர் மூலமாக நடைபெறுகிறது.

கேள்வி : தனியார் பால் விற்பனையும் அதிக அளவில் நடைபெறுகிறதே ?

பதில்: ஆவின் நிறுவனம் தரும் கமிஷனை விட அதிகமான கமிஷனை தனியார் பால் நிறுவனங்கள் தருகின்றன. எனவே, தனியார் பாலை விற்பதில் கடைக்காரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.மத்திய சர்க்கார் ஏற்கெனவே 10,000 லிட்டர் வரை விற்பனை செய்யத்தான் தனியார் பால் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து இருந்தது. அதை ஒரு இலட்சம் லிட்டர் வரை விற்பனை செய்ய அனுமதி அளித்துவிட்டார்கள். பாலை இறக்குமதி செய்ய போடும் வரி குறைவு.ஆனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய அதிகம் வரி செலுத்த வேண்டும். இப்போது மலேசியா,சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு ஆவின் நிறுவனம் பாலை ஏற்றுமதி செய்கிறது. இதற்கான வரி அதிகம் என்றால் இயல்பாகவே பால் உற்பத்தி குறையத்தானே செய்யும்.டில்லியிலும் ஆவின் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இப்போது ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருக்கும் காமராஜ் என்பவர் ஆவின் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஆர்வமாக செயல்படுகிறார். தரமற்ற தனியார் பால் நிறுவனங்கள் மீது தமிழக அரசின் சுகாதாரத்துறை கறாறான நடவடிக்கை எடுப்பதில்லை. அப்படி எடுத்தால் தரமற்ற தனியார் பால் விற்பனை என்பது குறையும்.பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜியை பாராட்ட வேண்டும். அவர்தான் முதலில் தனியார் பால் நிறுவனங்கள் தரமற்ற பாலை உற்பத்தி செய்கின்றன என்பதை பகிரங்கமாக அறிவித்த அமைச்சர்.

கேள்வி: ஆவின் நிறுவனம் இலாபத்தோடு இயங்கி வருகிறதா ?

பதில் : “பால் என்றால் ஆவின் – கலப்படம் இல்லாதது ” என்று நாங்கள்தான், சங்க மலரில் முதலில் எழுதினோம். அந்த வசனத்தைதான் இன்று ஆவின் நிறுவனம் மக்கள் மத்தியில் கொண்டு சென்று இருக்கிறது.ஆவின் நிறுவனத்தால் பொதுமக்கள் மட்டும் இல்லாமல் விவசாயிகளும் பலன் பெற்று வருகிறார்கள்.ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு இலவசமாக பால் தரும் திட்டத்தை காமராஜ் (அய்ஏ.எஸ்) மேலாண்மை இயக்குனராக இருக்கும்போது அமலாக்கினார். சுனில்பாலிவால் ஓய்வு ஊதிய திட்டத்தை கொண்டுவந்தார்.

ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி நெய்,பால்கோவா,நறுமணப் பால்,மைசூர் பாகு,குலாப் ஜாமுன்,பால்பவுடர், வெண்ணெய், பன்னீர் போன்ற உப பொருட்களையும் விற்பனை வருகிறது.மருத்துவ மனைகள்,பேருந்து நிலையங்களில் ஆவின் பாலகம் வைக்க அனுமதி அளித்தால் விற்பனை பெருகும். கோயம்புத்தூர் இரயில் நிலையத்தில் இருந்த ஆவின் பாலகம் அகற்றப்பட்டு இப்போது தனியார் நிறுவனம் கடை வைத்துள்ளது. சுங்கச்சாவடிகளில் ஆவின் பாலகம் வைக்க அனுமதி அளித்தார்கள். அதோடு அங்குள்ள கழிப்பறைகளையும் பராமரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள். அதனால் ஆவின் பாலகம் அமைக்க முடியவில்லை.

ஆவின் நிறுவனத்தில் நிகழும் சேதாரம், திருட்டு இவற்றை குறைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தில்லியில் உள்ள ‘மதர் டைரி’ நிறுவனத்தில் பணியாற்றும் மேலாண்மை இயக்குனர், பொது மேலாளர் ஆகிய இரண்டு பேருக்கு மட்டுமே கார் வசதி உண்டு.ஆனால் இங்கு பல அதிகாரிகளுக்கு ஆவின் நிறுவனம் கார் வசதி செய்துள்ள து.கண்காணிப்பு அதிகாரியாக ஒரு உயந்த பதவியில் இருக்கும் காவல்துறை அதிகாரி இருக்கிறார். அவருடைய ஓட்டுநர், உதவியாளர் என இவர்களுக்கு ஆகும் செலவை ஆவின் செய்கிறது. பல தேவையற்ற பதவிகள் தலைமை அலுவலகத்தில் (பொறியியல், திட்டம், கால்நடை சார்ந்த உயர் பதவிகள்) உள்ளன. இவையெல்லாம் ஆவின் இலாபத்தை விழுங்குகின்றன.

மாதவரம்,மதுரை,ஈரோடு என மூன்று இடங்களில் தீவனப் பிரிவு இயங்கி வந்தது.இதனால் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தீவனம் கிடைத்து வந்தது. தீவனத்தை விற்பனை செய்ய சந்தை இருக்கிறது. அதற்கான தொகையை பாலின் விலையில் இருந்தே கழித்துக் கொள்ளலாம். இந்த தீவனப் பிரிவை மீண்டும் இயக்க வேண்டும்.

குழந்தைகள்,முதியோருக்கு என கொழுப்பு நீக்கிய பாலை ஆவின் வழங்குகிறது. இவையெல்லாம் நன்மை பயக்கும் செயல்களாகும்.

கேள்வி: இப்போது அரசாங்கம் பாலின் விலையை லிட்டருக்கு ஆறு ரூபாய் கூட்டியிருக்கிறது.இதைக் குறைக்க ஏதும் ஆலோசனை கூறுகிறீர்களா ?

பதில்: ஆவின் நிறுவனம் தேவையற்ற நிர்வாகச் செலவுகளையும்,தேவையற்ற பதவிகளையும், சேதாரத்தையும்(wastage) குறைத்தாலே பால் விலையை உயர்த்த வேண்டியதில்லை. ஆவின் நிறுவனம் நடத்திவந்த தீவனப் பிரிவு நல்ல இலாபத்தோடு இயங்கி வந்தது. தனியார் தீவன உற்பத்தியாளர்கள் தலையீட்டின் பேரில், அதை பால்வளத்துறை மூடிவிட்டது.இதனால் மிக மலிவான விலைக்கு விவசாயிகளுக்கு தீவனம் கிடைத்து வந்தது நின்று விட்டது. அதனால்தான் அவர்கள் கொள்முதல் விலையை அதிகம் கேட்கிறார்கள். இதனை மீண்டும் இயக்கினால் விவசாயிகளும் பலன் பெறுவர். அல்லது அரசு மானியம் வழங்க வேண்டும்.

கேள்வி: சிறப்பாக செயல்பட்ட பால்வளத்துறை அமைச்சர் என்றால் யாரைச் சொல்லுவீர்கள் ?

பதில்: கண்ணப்பன், ப.உ.சண்முகம், குழந்தைவேலு, கே.ஏ.கிருஷ்ணசாமி, வி.வி.சாமிநாதன், மதிவாணன், சுந்தரம், கே.என்.நேரு,ராஜா முகமது என பலர் இருந்திருக்கின்றனர். அவர்களில் எனக்கு பிடித்த அமைச்சர் இராஜா முகமது. அவர் 1979, 80 களில் அமைச்சராக இருந்தார். 700 தொழிலாளர்கள் அவர் அமைச்சராக இருந்தபோதுதான் நிரந்தரப்படுத்தப்பட்டார்கள். இது ஒரு பெரிய சாதனை. அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவார். அவர்கள் சொல்லுவதை அப்படியே கேட்க மாட்டார்.

கேள்வி: நீங்கள் எப்போதுமே சிவப்புத் துண்டோடு இருக்கிறீர்களே !

பதில்: என் அப்பா சென்னைத் துறைமுகத் தொழிலாளி. அய்யங்கார் சங்கம் என்று சொல்லப்பட்ட ஏஐடியுசி சங்கத்தில் இருந்தவர்.
சி.கெ.மாதவன் நான்காம் வகுப்புதான் படித்தவர். அவரை ஒரு ‘தொழிற்சங்க பல்கலைக்கழகம்’ என்று சொல்ல வேண்டும். அவர் 1976 ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகி ‘உழைக்கும் மக்கள் மாமன்றம்’ வைத்திருந்தார். நான் 1976 ஆம் வருடத்தில் இருந்து அவர் 1992 ஆம் ஆண்டு இறக்கும் வரை சி.கெ.எம்- மோடு இருந்தேன். அவரோடு சேர்ந்து நாங்கள் 35 பேர் 1984 ல் மாதவரம் பால்பண்ணை பேருந்து நிலையத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் தோழர். தா.பாண்டியன் முன்னிலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டோம். அன்று முதல் இந்த சிவப்பு துண்டை அணிந்து வருகிறேன். இதுதான் எனது அடையாளம். எனக்கு பெருமிதமாகவும் இருக்கிறது.

One thought on “‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்

  1. பாளையம் தோழருக்கு எனது நல்வாழ்த்துகள்! நல்லபல தலைவர்களாலும், அமைச்சர்களாலும் நிரவகிக்கப்பட்ட பால்வளத்துறை போன்ற பல துறைகள் தமிழகத்தை இந்தியாவில் முதல்மூன்று இடங்களில் வகித்த பெருமை பெற்றுள்ளது. அந்நிலை தொடரவேண்டுமென்பதே என்போன்ற தமிழ் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.