டி. அருள் எழிலன்
காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் நிலையில், காஷ்மீரில் நிலவும் அமைதியின் உண்மையான பொருளை இந்த ஊடகங்கள் பதிவு செய்து வருகின்றன.
இரு பிரசவங்கள்
ரஸியா :
“எங்கள் கனவுகள் அனைத்தும் நொறுங்கிவிட்டன. இது அல்லாஹ்வின் விருப்பம் ஆனால், நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை” வெளிறிய தன் முகத்துடனும் இருண்டுபோன கண்களுடனும் விரக்தி உருவாக்கிய மென்மையுடனும் சொல்கிறார் பிலால் மாண்டூ.
ஸ்ரீநகரின் லால் டெட் மகப்பேறு மருத்துவமனையின் மனைவி ரஸியாவுக்கு குழந்தை பிறக்க இருப்பதாலும், அந்த புதிய உயிரின் வருகைக்காகவும் அவர் சூழலையும் கடந்து உற்சாகமாக இருந்தார்.
காஷ்மீர் 5-ஆம் தேதி முழுமையாக மூடப்பட்டது. எட்டாம் தேதி ரஸியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வீட்டில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் மகப்பேறு மருத்துவமனை உள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்று 12 மணி நேரம் பிலால் காத்திருந்தார். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது. வீட்டின் அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்ற போது அவர்கள் லால் டெட் மருத்துவமனைக்கு உடனே செல்லுமாறு கூற பெரும் போராட்டத்திற்குப் பிறகு ரஸியா லால் டெட் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.
காஷ்மீரில் மோடி அரசு உருவாக்கிய அசாதரண நிலை ரஸியாவுக்கு கிடைக்க வேண்டிய மகப்பேறு மருத்துவத்தை தாமதிக்க குழந்தை இறந்து விட்டது. காலதாமதம் என்ற ஒற்றை பதிவோடு குழந்தை இறப்புக்கான காரணம் குறிக்கப்பட்டது. ரஸியாவுக்கும் அது தலைப்பிரசவம் குடும்பமே எதிர்பார்த்த அந்த குழந்தை இறந்து விட்டது.
இன்ஷா:
ஆகஸ்ட் 4-ஆம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் முழுமையான ஊரடங்கு உத்தரவை மோடி அரசு அறிவித்தது. தொலைபேசிகள், ஏ.டி.எம் மையங்கள், கடைகள், பெட்ரோல் நிலையங்கள், வாகனங்கள் என அனைத்தும் முடக்கப்பட்டன. தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் என சுமார் 500-க்கும் அதிகமானவர்கள் சிறை வைக்கப்பட்டார்கள். மக்கள் வீடுகளுக்குள் சிறை வைக்கப்பட்டார்கள். தெருவுக்கு தெரு சோதனைச்சாவடிகள்.மக்கள் வீடுகளில் இருந்து வெளியில் வர அனுமதிக்கப்படவில்லை.
ஆட்டோ ஓட்டுநரான இர்பான் ஷ்மத் ஷேக்கின் மனைவி இன்ஷாவுக்கு 26 வயது தலைப்பிரசவம். மருத்துவர்கள் குறித்த நாளில் மருத்துவமனையில் டெலிவரிக்காக போய் அட்மிட் ஆவது பற்றிய கவலையில் இருந்தார். வீட்டில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் லால் டெட் மருத்துவமனைக்குச் சென்று அட்மிட் ஆக வேண்டும். அவரை அழைத்துச் செல்வதாக உறுதியளித்த ஆட்டோ ஓட்டுநர் நிறைமாத கர்ப்பிணியான இன்ஷாவை ஏற்றிக் கொண்டு கிளம்பிய வுடன் போலீஸ் நிறுத்தி ஆட்டோவை நகர்த்த அனுமதி மறுக்கிறது. கர்ப்பிணி பெண்ணை நடந்து செல்லுமாறு கட்டளை இடுகிறது.
வேறுவழியின்றி இன்ஷா நடக்கத்துவங்குகிறார். சில அடிகள் எடுத்து வைத்தவுடன் அடுத்த சோதனைச்சாவடியில் வேறு வழியில் செல்லுமாறு கூறுகிறார்கள். நடப்பவர் கர்ப்பிணி பெண் என்ற பார்வையோ, அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்ற இயல்பான மனித நேயமோ இல்லை.
6 கிலோ மீட்டர் நடந்த நிலையில் சாலையிலேயே இன்ஷாவுக்கு டெலிவரி ஆகிவும் என்ற நிலையில் அவரது தாயும், சகோதரியும் அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்து விடுகிறார்கள். அடுத்த 15 நிமிடத்தில் இன்ஷா ஒரு பெண்குழந்தையை ஈன்றெடுக்கிறார்.
வசதிகள் எதுவுமற்ற அந்த மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் உடலில் போர்த்த துணிகள் கூட எதுவும் இல்லை. இன்ஷா ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்று மூன்று நாட்களாகி விட்டது. தன் மனைவிக்கு குழந்தை பிறந்தது இன்னும் கணவர் இர்பான் அஹ்மத் ஷேக்கிற்கு தெரியாது.
காரணம் அவரை தொடர்பு கொண்டு சொல்வதற்கான ஒரு வழியும் இல்லை. இந்திய அரசால் காஷ்மீரில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சுதந்திரம் இதுதான். காஷ்மீரில் கடந்த 5-ஆம் தேதி முதல் பிறக்கும் குழந்தைகள் இந்தியாவின் இரும்புத்திரை காஷ்மீரில் பிறப்பது இப்படித்தான்!
நன்றி: தி வயர்
டி. அருள் எழிலன், பத்திரிகையாளர்; ஆவணப்பட இயக்குநர்.