ஏஐடியுசியின் பொதுச் செயலாளர் அமர்ஜித் கௌர் 12.8.2019 அன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மும்பையில், ஏஐடியுசியின் நூற்றாண்டு விழா வருகிற அக்டோபர் 31 ம் நாள் தொடங்குகிறது.இதே நாளில் 1919 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் மூத்த தொழிற்சங்கமான ஏஐடியுசி தனது நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் ஓராண்டு காலத்திற்கு 2020 அக்டோபர் வரை கொண்டாடுகிறது.
பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கைகளினால் ஐந்து கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக சிஐஐ, பிக்கி போன்ற வேலைஅளிப்போர் சங்கங்களே கூறுகின்றன. நமது நாட்டின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது கடும் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது.
இந்த நிலையில் நூறு இலட்சம் கோடி ரூபாய்க்கு கட்டமைப்பு வேலைகளுக்கு செலவிடப் போவதாக நிதி அமைச்சர் கூறுகிறார். எங்கேயிருந்து கடன் வாங்கப் போகிறார்கள்? எதில் செலவு செய்யப் போகிறார்கள் என்பது போன்ற எந்த விபரங்களையும் அவர் சொல்லவில்லை. இதனால் குடிமக்களின் கடன் சுமைதான் அதிகரிக்கும்; முதலாளிகள் பலன்பெறுவர்.இந்த வரவு செலவு அறிக்கையினால் மாணவர்களுக்கோ, தொழிலாளர்களுக்கோ, பொது மக்களுக்கோ, மருத்துவத்துறைக்கோ பலன் ஏதுமில்லை.
இந்தப் பாராளுமன்றம், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு சட்டங்களாக சுருக்கியிருக்கிறது. இதனால் 77 சத தொழிலாளர்கள் சட்டப் பாதுகாப்பிலிருந்து விலகிவிடுவர். அவர்களால் தொழிலாளர் துறையில் தாவா எழுப்ப முடியாது; நீதிமன்றம் போக முடியாது. ஏற்கெனவே வெள்ளைக்காரர்கள் காலத்தில் தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற, தொழிற்சங்க உரிமைகளை ஒரே உத்தரவின் மூலம் இரத்து செய்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்குரிய சங்கம் அமைக்கும் உரிமைகளை இந்த திருத்தங்கள் நீர்த்துப் போகச் செய்கின்றன.
குறைந்த பட்ச ஊதியமாக மாதம் 18,000 ரூபாய் தர வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரி வருகின்றன. ஆனால் தொழிற் சங்கங்கள் கொடுத்த ஆலோசனைகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு , முதலாளிகள் கோரியபடி நாளொன்றுக்கு 178 ரூபாய் சம்பளம் என்று அரசு கூறுகிறது; (மாதம் 5000 ரூபாய்க்கும் குறைவாக ) அதுவும் 26 நாட்களுக்கு கொடுக்கப்படும் என்று கூறுகிறது. தேவைப்பட்டால் பூகோளரீதியாக குறைந்த பட்ச சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்று அரசு கூறுகிறது. இதன்மூலம் ஏற்கெனவே அதிகமாக வாங்கி வரும் தொழிலாளர்களின் சம்பளம் குறைக்கப்படும். மலிவான கூலி உழைப்பு கிடைக்கும் என்று அரசு முதலீட்டாளர்களுக்கு இதன்மூலம் கூற விரும்புகிறது. தொழிலாளர் சம்மந்தமான முடிவுகளை நிதி அமைச்சர் எடுத்து தொழிலாளர் துறையை கையகப்படுத்தி விட்டார். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு எந்தவிதமான தணிக்கையும் கிடையாது; எந்தவிதமான ஆய்வுகளும் கிடையாது; குறிப்பிட்ட காலத்திற்கு வரி கிடையாது என்ற நடவடிக்கைகளினால் பெருமுதலாளிகள் பலன்பெறுவர்.இத்தகைய சட்டத் திருத்தங்களை எதிர்த்து நாடு முழுவதும் ஏஐடியுசி கடந்த ஆகஸ்டு இரண்டாம் நாள் கண்டன இயக்கங்களை நடத்தியது. இதனை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடப்படும். இதற்காக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் வருகிற செப்டம்பர் மாதம் தில்லியில் நடைபெறுகிறது.

அணுஆயுத துறையில் பணிபுரிவோரின் பாதுகாப்பு அம்சங்கள் வேறு. சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு வரும் நோய் வேறு;மின்துறையில் பணியாற்றுவோரின் துறைசார்ந்த பாதுகாப்பு கவசங்கள் வேறு.ஆனால் இந்திய அரசு எல்லாத் தொழிலுக்கும் சேர்த்து ஒரே சட்டத்தை(Occupational Safety & Health) கொண்டுவந்துளளது. ஒவ்வொரு தொழிலுக்கும் என தனித்தனியான பாதுகாப்புச் சட்டங்கள் வேண்டுமென ஏஐடியுசி கோருகிறது. இதுபோன்ற அறிவிப்புகளை மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பதன் மூலம் இந்த அரசு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
உலகில், வேலையளிப்போரில் இரண்டாம் இடத்தை வகிக்கும் இரயில்வே துறையின், பெரம்பூர் இரயில் பெட்டி ஆலையை தனியாருக்கு தாரைவார்க்க இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இருபது பொதுத்துறை வங்கிகளை ஆறு வங்கிகளாக மாற்ற இந்த அரசு முடிவெடுத்து உள்ளது.இதனால் சாதாரண மக்களுக்கு பலன் ஏதுமில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் விஜய் மல்லய்யா, நீரவ் மோடி போன்ற 36 பேர் வங்கியில் இருந்த வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியுள்ளனர். வங்கியில் உள்ள பொதுமக்களின் சேமிப்பை பாதுகாக்க, வங்கிகளை இணைக்கும் சட்டம் உதவாது. இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆலைளை தனியாருக்கு கொடுக்க இந்த அரசு முடிவெடுத்து உள்ளது. இதனால் ஆவடி தொழிற்சாலை இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது? இதுபோன்ற மக்கள் சார்பான கொள்கைகளுக்காக தமிழ்நாட்டைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்தான், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் குரல் கொடுக்க வேண்டும்.
முப்பது வருடம் பணி முடித்த, 55 வயதான தொழிலாளர்களின் நிலைபற்றி அறிக்கை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு எல்லாத்துறைகளையும் கேட்டுள்ளது. அதாவது அரசு ஊழியர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப எண்ணியுள்ளது. இஎஸ்ஐ, இபிஎஃப் போன்ற நிறுவனங்களில் இருக்கும் எல்லா நிதியையும் ஒரே நிதியாக்கி பிரதமர் தலைமையில் அதை நிர்வாகம் செய்ய அரசு எண்ணியுள்ளது. அதாவது அந்த தொகையை அரசு எடுத்துக் கொள்ள பார்க்கிறது. இது தொழிலாளர், முதலாளிகளின் பணமாகும். இதில் அரசின் நிதி ஏதுமில்லை.
மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்புவர்களை ‘ஆண்டி இந்தியன்’ என்றும் ‘அர்பன் நக்சல்’ என்றும் முத்திரை குத்தி கருத்துரிமையை பறிக்கின்றனர். 370 பிரிவை நீக்கியதன் மூலம் காஷ்மீர் பிரச்சினையை ஒரு சர்வதேச பிரச்சினையாக மோடி மாற்றிவிட்டார். இதனால் பதற்றம் அதிகமாகும்; ஆயுதங்களுக்கு செலவிடப்படும் தொகை அதிகரிக்கும். இதனால் மக்களின் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் செலவிடப்படும் தொகை குறையும். தனக்கு கிடைத்துள்ள பெரும்பான்மை பலத்தை வைத்து தொழிலாளர் உரிமைகளை, ஜனநாயக உரிமைகளை மோடி பறிக்கிறார்.
வெள்ளைக்காரன் காலத்திலேயே போராடிப் பெற்ற எட்டுமணி நேர வேலை என்பது மாற்றப்படுகிறது. வேலைநேரம் என்ன என்பதை அந்தந்த அரசுகள்(appropriate government) முடிவு செய்யும் என்று சொல்லுவதன் மூலம் எட்டு மணி நேர வேலை என்பதற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாடு ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது.ஆனால் தொழிலாளிவர்க்கம் எப்பாடுபட்டும் தனது உரிமைகளுக்காக போராடும். அதற்குரிய முன்முயற்சிகளை ஏஐடியுசி எடுக்கும் ” என்று அமர்ஜித் கௌர் கூறினார்.
இவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் ஆவார்.
சிந்தாதிரிப்பேட்டை ஏஐடியுசி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பேட்டியின் போது தமிழ்நாடு ஏஐடியுசியின் பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, துணைப் பொதுச் செயலாளர் கே.இரவி ஆகியோர் உடன் இருந்தனர்.
This General Secretary should ask all the MPs to raise their voices.
Why she is asking the Tamil nadu MPs ?
No one was bothered when Hindustan Teleprinter,guindy shutdown its workers, when IDPL , Nandambakkam faced a shutdown…
LikeLike