இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும்; கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும்!
அண்மையில் இயக்குநர் பா. ரஞ்சித், சோழ மன்னர் ராஜன்ராஜன் குறித்து முன்வைத்த கருத்தொன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல, என்னதான் மிகச்சிறந்த ஆட்சியைத் தந்திருந்தாலும் ஒரு அரசர் அல்லது ஒரு ஆட்சிக்கு இரண்டு பக்கங்கள் இருக்கும். நன்மையை பேசுவதுபோல, அந்த ஆட்சியால் ஏற்பட்ட தீமைகளையும் சேர்த்தே பேசுவதே கருத்துரிமை. கருத்துரிமைக்கும் அவதுறுக்கும் பாரதூரமான வேறுபாடு உள்ளது. இயக்குநர் பா. ரஞ்சித் பேசியது கருத்துரிமையின் பேரில் வருமே தவிர, அது அவதூறு அல்ல.
தமிழகத்தின் மிக முக்கியமான வரலாற்றாசிரியர்கள் ராஜன்ராஜன் குறித்து எழுதிய பல்வேறு கருத்துக்கள், வெகுமக்கள் அறியாதவை; விவாதத்துக்குரியவை. பா. ரஞ்சித் இல்லாத ஒன்றை பேசிவிடவில்லை.
சமூகத்தின்பால் அக்கறை கொண்ட படைப்பாளியாக ஒவ்வொரு சமூக பிரச்சினையிலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் பா. ரஞ்சித், அதே அக்கறையின்பேரிலேயே ராஜராஜன் குறித்த கருத்தை பேசியுள்ளார். இந்தக் கருத்து குறித்து விவாதிக்க வேண்டுமே அன்றி, அதைச் சொன்னார் என்றே ஒரே காரணத்துக்காக, பா. ரஞ்சித் மீது வழக்குகள் தொடுப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது.
அடுக்கடுக்கான வழக்குகள் போடப்படுவது, பா. ரஞ்சித் என்னும் சமூக அக்கறை கொண்ட படைப்பாளியை அலைக்கழிக்க வைக்கும்; சமூகத்தின் மீது அக்கறை கொண்ட படைப்பாளிகளை வாயடைக்க வைக்கும்.
எனவே, இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற்று, கருத்துரிமையைக் காப்பாற்ற வேண்டும் என தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கேட்டுக்கொள்கிறது. அதுபோல, சக கலைஞரான பா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்களையும் கண்டிக்கின்றோம்.
இவண்
தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம்.