தேசத்துக்காக மனம் இரங்குங்கள்
லாரன்ஸ் ஃபெர்லிங்கிட்டி
(கலீல் ஜிப்ரானின் இதே தலைப்பிட்ட கவிதையை முன்வைத்து)
—-
எந்த தேசத்தில் மக்கள்
ஆட்டு மந்தைகளாக உள்ளனரோ
எங்கு மேய்ப்பர்கள்
அவர்களை
வழி தவறச் செய்கின்றனரோ
அந்த தேசத்துக்காக மனம் இரங்குங்கள்
எந்த தேசத்து தலைவர்கள் பொய் பேசுகின்றனரோ
எங்கு சான்றோர் வாய்ப் பேச்சற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனரோ
எங்கு சிறுமதியாளர்கள் குரல் காற்றில் கலந்து
உரத்து ஒலிக்கின்றதோ
அந்த தேசத்துக்காக மனம் இரங்குங்கள்
மனம் இரங்குங்கள்
வெற்றிவாகைச் சூடிய தலைவனை வாழ்த்த மட்டும்
குரல் உயர்த்தும்
அடாவடித்தனத்தை வீரமென விளிக்கும்
வன்முறை மூலமும் சித்திரவதை செய்தும்
பூமியை ஆள நினைக்கும்
மக்கள் உள்ள தேசத்துக்காக
மனம் இரங்குங்கள்
மனம் இரங்குங்கள்
தன் மொழியன்றி வேறு மொழியறியா
தன் பண்பாடு அன்றி வேறு பண்பாடு அறியா
தேசத்துக்காக மனம் இரங்குங்கள்
மனம் இரங்குங்கள்
பணத்தை உயிர் மூச்சாக நினைக்கும் தேசத்துக்காக
வயிறு முட்ட உண்டு தூங்கும் தேசத்துக்காக
மனம் இரங்குங்கள்
அத்தகைய தேசத்துக்காக
தமது உரிமைகள் அழிவதை
தமது விடுதலை
வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதை
அனுமதிக்கும் மக்களுக்காக
என் தேசமே, உனது கண்ணீர்
விடுதலையை விரும்பிய இனிய நாடே
தமிழில் – வ. கீதா