ஆளும் பி.ஜே.பி-யை ஆட்சியிலிருந்து நீக்க இந்திய மக்களை வாக்களிக்க கோரி திரைப்படைப்பாளிகள் கூட்டறிக்கை.
நமது நாடு இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மிகவும் சோதனைக்குரிய காலத்தில் இருக்கிறது. பண்பாட்டு மற்றும் புவியியல் ரீதியாக வேறுபட்டிருந்தாலும், நாம் ஒற்றுமையாகவே இருந்துவந்துள்ளோம். ஒரு தேசமாக, இவ்வற்புத நாட்டின் குடிமக்களாக இருப்பதென்பது மிகவும் பெருமையான உணர்வாகும்.
ஆனால், இப்போது அவை பெரும் ஆபத்தில் உள்ளன.
வரவிருக்கும் மக்களவை தேர்தலில் நாம் புத்திசாலித்தனமாகத் தேர்வு செய்யாவிட்டால், கொடுங்கோன்மை அதன் அனைத்து வலிமையையும் கொண்டு நம் கடுமையாக தாக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது.
2014-ஆம் ஆண்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, நாட்டு நிலைமை மோசமாக மாறிவிட்டதை நாம் அனைவரும் அறிவோம். நமக்கு தெரிந்த இந்திய நாடு, மத அடிப்படையில் துருவப்படுத்தப்பட்டது அன்று. தவிர, பி.ஜே.பி-யும் அதன் கூட்டணி கட்சிகளும் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளை காப்பாற்ற தவறிவிட்டன. வகுப்புவாதத்தை புகுத்தி நாட்டை இரண்டாக்க பசுப் பாதுகாப்பு, கும்பல் கொலை ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். ஒடுக்கப்பட்ட தலித் இஸ்லாமிய மக்கள் அவர்களின் விளையாட்டுப் பொருள் ஆகிவிட்டன. இணையதளம் மற்றும் சமூக ஊடகத்தின் மூலமாக அவர்களின் வெறுப்பு பிரச்சாரத்தை பரப்புகின்றனர். தேசபக்தி தான் அவர்களின் துருப்பு சீட்டு. ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ சிறிய கருத்து வேறுப்பாட்டை வெளிப்படுத்தினாலும், அவர்கள் ‘தேசத் துரோகிகள்’ என்று பட்டம் சூட்டப்படுகின்றனர். ‘தேசபக்தி’யை கொண்டே அவர்களின் வாக்குவங்கியை பெருக்குகின்றனர். மாற்று கருத்தை முன்வைக்க துணிந்ததன் விளைவாக சில புகழ்பெற்ற எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இராணுவத்தையும், ஆயுதப்படைகளையும் சிலாகிக்க செய்து சுரண்டுவது அவர்களின் யுத்திகளில் ஒன்று. நம் நாட்டை தேவையற்ற போரில் ஈடுபடுத்தும் பேராபத்திலும் கூட அதனை செய்வார்கள். நாட்டின் பண்பாட்டு மற்றும் அறிவியல் நிறுவனங்கள் கடுந்தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. சர்வதேச அறிவியல் கருத்தரங்குகளில் கூட விஞ்ஞானபூர்வமற்ற, அறிவுக்கு பொருந்தாத நம்பிக்கைகளை முன்வைக்கும் துறைகளுக்கு தொடர்பில்லாத, அனுபவமற்ற நபர்களை துறைத் தலைவர்களாக நியமித்து, ஒட்டுமொத்த உலகின் கேலிப்பொருளாக்கி நம் மக்களின் கூட்டு நுண்ணறிவை பகடி செய்கின்றனர்.
‘கலை படைப்புகள்’, குறிப்பாக அவற்றின் மிகவும் சக்திவாய்ந்த ஊடகங்களான – திரைப்படம் மற்றும் நூல்கள் ஆகியவற்றை தடை செய்வதும், தணிக்கை செய்வதுமே மக்களை உண்மையிலிருந்து விலக்கி வைக்கும் அவர்களின் வழிமுறை.
விவசாயிகள் முற்றிலுமாக மறக்கப்பட்டுவிட்டனர். உண்மையில், ஒரு சில வணிகர்களின் நிர்வாகச் சொத்தாகவே இந்நாட்டை மாற்றியிருக்கிறது பி.ஜே.பி அரசாங்கம். கடுமையான பேரழிவாக முடிந்த மோசமான பொருளாதார கொள்கைகள் கூட, விளைவுகள் மறைக்கப்பட்டு வெற்றியடைந்தது போல காட்டப்பட்டன. பொய் பிரச்சாரம் மற்றும் சந்தைப்படுத்தும் உதவிகளோடு இவை செவ்வனே செய்யப்படுகின்றன. இது, நாட்டில் பொய்யான நம்பிக்கையை உருவாக்க உதவியது.
புள்ளியியல் மற்றும் வரலாற்றை திரிப்பது அவர்களுக்கு விருப்பமான திட்டங்களில் ஒன்றாகும். ஆட்சி அதிகாரத்தில் அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்குவது பெருந்தவறாகும். அது, உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தின் சவப்பெட்டிக்கு அடிக்கும் கடைசி ஆணியாகவும் இருக்கலாம்.
எனவே, உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து இந்த அபாயகரமான ஆட்சியை மீண்டும் அதிகாரத்திற்கு வரமால் செய்யுமாறு உங்கள் அனைவரையும் வலியுறுத்துகின்றோம். இந்திய அரசமைப்பை மதிக்கும், பேச்சு மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரத்தை பாதுகாக்கும், அனைத்து விதமான தணிக்கைகளையும் தவிர்க்கும் ஒரு அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பது உங்களின் தேர்வு கட்டளையாக இருக்கட்டும்.
ஆமாம், இதுவே நம் கடைசி வாய்ப்பு!