ஈஸ்வரி
சென்னை போக்குவரத்தில் சூப்பர் டீலக்ஸ் பேருந்து வரவினால் அடித்தட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் இத்தகையை பேருந்துகளினால் அவர்களின் பொருளாதாரத்தின் ஒரு பகுதி கரைந்தது.
சாதாரண பேருந்து கட்டணத்தை விட 3 மடங்கு கட்டணம் அதிகம்! இதனால் அத்தி பூத்தாற்போல் வரும் சாதாரண பேருந்திற்கு மணிக்கணக்கில் காத்திருந்து ஒரு திருவிழா கூட்டத்தை போல ஏறும் ஆண்களுக்குக்கிடையே இடிப்பட்டு ஏறும் பெண்களின் நிலை சொல்லி மாளாது. அலுவலகத்திலும் வீட்டிலும் உழைப்பு சுரண்டலினால் சக்கையாய் பிழியப்பட்டு வரும் பெண்கள் இக்கூட்டத்தில் யார் நம்மை உரசுகிறார்கள், யார் நமது அங்கங்களை தொடுகிறார்கள், யார் வக்கிரத்தின் உச்சத்தில் ஆடையை பிசு பிசுக்க வைக்கிறார்கள், தனது ஆடை விலகுதல் மூலம் யார் இன்பம் அடைகிறார்கள் என்பதை அவ்வப்போது எழும் கூச்சல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட அனைத்து பாலியல் வக்கிரத்தை தீர்க்க கொள்ள சூப்பர் டீலஸ் ஆண்களுக்கு வசதிதான். அதுபோல தான் தற்பொழுது திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர் டீலஸ் படமும் இருக்கிறது. கொண்டாடப் படவேண்டிய நேர்த்தியான திரைக்கதை, காட்சி அமைப்பு, இசை, நடிப்பு, ஒளிப்பதிவு எல்லாம் அபாரம்! ஆனால், அது யாருக்கான திரைப்படம்? யாருக்கு பயன்பட போகின்ற படம்? பெண்களின் உடல் ஆண்கள் உறவு கொள்வதற்காகவே உருவாக்கப்பட்டதா? பெண் எப்போதும் பாலியல் பண்டமா?
சமமான அளவில் சுதந்திரமாக இருக்கும் ஆணும் பெண்ணும் மட்டுமே ஒடுக்குமுறையற்ற, சுதந்திரமான பாலியல் உறவுகளை உருவாக்க முடியும். எனவே, பெண்விடுதலை இல்லாமல் பாலியல் ஒடுக்கு முறைகளுக்கு தீர்வு காண முடியாது.
- படத்திற்கு வருவோம் முகிலனின் மனைவி, தன் முன்னால் காதலனை சந்திக்கும் பொருட்டு உடலுறவு கொள்ள நேரிடுகிறது. அதில் காதலன் இறந்துவிட, இறப்பு கணவனுக்கு தெரிய வருகிறது.
“நான் எனது குற்றத்தை ஒத்து கொண்டு காவல் துறையிடம் சரண்அடைந்து விடுகிறேன்” என்று கூறுகிறாள் அவள். தன்னைத்தான் ஊர் இவ்வளவு கேவலமான பொண்டாட்டியை கட்டிருக்கிறேன் என்று பழி தூற்றும், அதன் காரணமாக இந்த உடலை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்தி விட்டு விவாகரத்து செய்து கொள்ளாம் என்று கணவன் கூற அதற்கு மனைவி சம்மதிக்கிறாள். உடலை அப்புற படுத்தும் முயற்சியில் இருவரும் ஈடுபடுகின்றனர். இதனை மறைமுகமாக நோட்டம் விட்டு கொண்டு வந்த காவல் அதிகாரி ஒருவன் இதனை கண்டுபிடித்து விட, இதனை அனைத்தையும் மறைக்க வேண்டும் என்றால் உன் மனைவியை தன்னுடன் உடல் உறவு கொள்ள வேண்டும் என்று காவல் அதிகாரி கேட்கிறார். தன் மனைவியை அதற்கு தயார் படுத்துகிறான் அந்தக் கணவன்!
இறுதியாக கைவிலங்கு பூட்ட பட்ட கணவன் கையறு நிலையில் இருக்கும் மனைவி
அப்போது எங்கிருந்தோ விழும் டிவி காவல் அதிகாரின் தலையில் விழுகிறது. இறுதியில் கணவன் மனைவி காப்பாற்றப் படுகிறார்கள்.
ஆணாதிக்கத்தை ஊட்டி வளர்த்து கொண்டிருக்கும் சமூகத்தின் பின்னணியில் இதைப் பார்ப்போம். படத்தில் (முகிலன் மனைவி) தனக்கு பிடிக்காத ஆணுடன் தன்னால் வாழப் பிடிக்கவில்லை என்று வெளிப்படையாக அறிவித்து தனக்கு பிடித்த இணையுடன் கை கோர்த்து செல்வதை விடுத்து, ஒரு ஆணின் ஒடுக்கு முறை மற்றும் சமூகத்தின் ஒடுக்கு முறையினாலும் பெண் தனது முன்னால் காதலனுக்கு பாலியல் பண்டமாக மாற்றப்படுகிறாள். மற்றும் இந்நாள் கணவனுக்கான அவன் சமூதாய மதிப்பீட்டைக் காப்பாற்ற ஆணின் பகடையாய் மாற்றப்பட்டு மற்றோரு ஆணுடன் உடல் உறவு கொள்ள கணவன் மூலமாகவே உந்தப்படுகிறாள்.
கற்பு, நெறிமுறை கோட்பாடு, போன்ற வற்றை உடைகிறேன் என்ற பெயரில் இறந்து போன மனைவின் முன்னால் காதலின் ஆண் குறி தன்னை விட பெரிதா என்று சொல்லி கொண்டு பார்வையின் வழியாக பிணத்தில் ஆண் குறி நீளத்தை தேடுவது என்பது ஒட்டு மொத்த வக்கிரத்தின் பிரதிபளிப்பு.
கணவன் முகிலன் ஒரு இடத்தில் பதிவு செய்கின்றான்: இதற்கு முன்பு தனக்கு 3 பெண்களுடன் தொடர்பு உண்டு. அந்த தொடர்புகளை எல்லாம் தான்தான் முறித்து கொண்டேன்; அப்பெண்கள் அல்ல என்று கூறி விட்டு ஒருவித பெருமிதம் கொள்கிறான்.
முன்னால் காதலன் தவிர வேறு வேறு ஆண்களுடன் தொடர்பு உள்ளதா என்று முகிலன் மனைவியை பார்த்து கேக்கும் போது வெளிப்படையாக அறிவிக்காமல் காதில் சொல்லும் போது பின்னால் சங்கின் ஒலி.
மனைவியின் முன்னால் காதலன் பிணத்துடன் பேசிக்கொண்டு வரும் அவன், ‘பிணத்துடனே செட்டான உன்னால் ஏன் நமக்குள் செட் ஆகவில்லை’ என்ற கேள்வியை முன் வைக்க அதற்கு பதில் சொல்லப்படுவதில்லை.
நிலவுடைமை சிந்தனையும், முதலாளித்துவ சிந்தனையும் ஒருங்கே அமையப்பெற்ற ஆணாதிக்க கட்டமைப்பில்,பெண்களின் உடல் வெறும் பாலியல் கருவி இச்சமூகம் நியாயப் படுத்தி கொண்டிருக்கிற வேளையில் இத்திரைப்படம் மேலும் பார்வையாளர்களின் ரசனையை மட்டுப்படுத்துகிறது. அதற்கு துணை போகின்ற வேலையைத்தான் படம் முழுக்க கையாண்டு உள்ளார் இயக்குநர்.
- க்ரூப் ஸ்டடி என்ற பெயரில் ஆபாச படம் பார்க்க நினைக்கும் பள்ளி மாணவர்கள் ஒரு வீட்டில் படம் பார்த்து கொண்டிருக்கும் போது அதில் நடித்திருப்பது தன் அம்மா என்பதை தாங்கிக் கொள்ள முடியாத ஒருவன் டிவியை உடைக்கிறான். தன் அம்மாவை கொலை செய்ய நினைத்து கூர்மையான ஆயுத்துடன் செல்ல அது தவறுதலாக அவன் வயிற்றில் குத்த, அதனை அறிந்த தந்தை தான் அந்த ஆபாச வீடியோவை பார்த்து தற்கொலை செய்து கொள்ள நினைத்த தன்னை கர்த்தர் காப்பாற்றியது போல் மகனையும் காப்பாற்றுவார் என்கிறார். கிருஸ்தவ மதத்திற்கு மாறிய அற்புதம் மகனை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல விடாமல் தன் கடவுள் காப்பாற்றுவார் என்று கூறி கொண்டு ஜெப கூடத்திற்கு அழைத்து செல்கிறான் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் தன் மகனை மீட்டு எடுத்து மருத்துவமையில் சேர்க்கிறாள் அந்த தாய். ஆனால் அவளிடம் காசு இல்லை. அற்புதத்திற்கு தன் கடவுள் மீது சந்தேகம் வர கடவுளின் சிலை உடைக்கப்பட்ட அதில் உள்ள சில வைரங்கள் அதன் மூலம் தன் மகன் காப்பாற்றப்படுகிறான்.
அற்புதத்தின் மனைவி -லீலா. தான் நடித்த ஆபாச வீடியோவை மகன் பார்த்ததை உணர்ந்த அவள் “ஒரு லட்சம் பேர் பாக்குறது தப்பில்லைனா நான்கு பேர் நடிக்கிறது எப்படி தப்பாகும்” என்ற கேள்வியை தன் மகன் முன் வைக்கிறார்.
பொள்ளாச்சி போன்ற கூட்டு பாலியல் வக்கிரத்தின் உச்சத்தில் பாதிக்கப்பட்ட 273 பெண்களும் அந்த ஒரு லட்சம் பார்வையாளருக்கத்தான் வன்புணர்வு செய்யப்பட்டார்களா? என பொருத்தி பார்க்கவேண்டும். ஆம், தன் சந்தையை விரிவ படுத்த எந்த எல்லைக்கும் செல்லும் முதலாளித்துவம் இதைத்தான் சொல்கிறது இந்த வசனம்.
மக்களுக்கு கேடு தரக்கூடிய குடிக்கிற பானம் முதல் உண்கிற உணவு வரை, பண்பாடு, கலாச்சாரம் முதல் அனைத்திலும் தன் உற்பத்தியை பெருகிவிட்டு இதைத்தான் சாப்பிட வேண்டும், இதைத்தான் குடிக்க வேண்டும், இதனைத்தான் பார்க்க வேண்டும் என்று உருவாக்கிய நிலையில், லீலா கதாபாத்திரத்தின் மூலம் நியாயப்படுத்தி கொண்டாட வைக்கிறது இந்த கொடூரமான முதலாளிய சந்தை.
ஆதி சமூகத்தின் ஆடை சுதந்திரத்தையும், வருகிற சமூத்தின் ஆடை சுதந்திரம் எப்படி இருக்கும் என்று தன் மகனிடம் பேசும் லீலா அவர் தன் கணவன் அற்புதம் கிருஸ்தவமதத்தை தழுவிய பின்னும், கையாலாகாத தன் கணவனிடம் இருந்து விடுபட்டு ஏன் பொருளாதார ரீதியான தன்னை நிலை நிறுத்தி கொள்ளாமல் மகனின் மருத்துவ செலவிற்காக அனைவரின் முன் மன்றாடுகிறார்?
பொருளாதார சுகத்திரத்தை பேச மறுத்து வெறும் உடல் அரசியலை மட்டும் பேசும் முதலாளித்துவ பெண்நிலைவாதிகள் கருத்தைத்தான் இயக்குநர் லீலாவின் மூலம் பேச வைத்துள்ளார். வலுக்கட்டாயமாக நடிக்க வைத்தார்களா? என்று மகன் கேட்டக ஆபாசப் படத்தில் தனது கதாபாத்திரத்தை விரும்பித்தான் நடித்துள்ளேன் என்று ஒரு பெண்ணின் வாயால் கூறவைத்திருப்பது இன்னும் அதிகப்படி.
ஆபாச பண்பாட்டினால் பெண்களின் இருத்தலே கேள்விக்குள்ளாகி பல்வேறு வக்கிரதை அசரே ஊக்குவித்து கொண்டாடுகின்ற இன்றைய காலத்தில் இத்தகைய சந்தையில் பெண்ணையே தனது விருப்பத்தின் பெயரில் துணைக்கு அழைத்தல் முதலாளியத்தின் உச்ச வக்கிரமாகத்தான் பார்க்க வேண்டும்.
ஆபாச வீடியோவில் நடித்தது மற்றோரு பெண் என்றால் தன் இந்திரியத்தை இயல்பாக வெளியேற்றி விட்டு கடந்து சென்று இருப்பார்கள். ஆனால், அதில் நடித்தது தன் மனைவி, தன் அம்மா என்று தெரிய வரும் போதுதான் பொங்கி எழுகின்றன ஆண் கதாபாத்திரங்கள்.
- தன் கணவனுக்காக தனது குழந்தையுடன் 7 வருடமாக காத்திருக்கும் மனைவிக்கு கணவன் திருநங்கையாக திரும்பி வந்திருப்பது ஒரு மிகப்பெரிய ஏமாற்றம் இருக்கிறது. ஒரு மனைவி இறந்தாலோ அல்லது விட்டு பிரிந்தாலோ கணவன் உடனடியாக மற்றோரு திருமணத்திற்கு தயாராகின்ற ஆணாதிக்க கட்டமைப்பில் அத்தகைய சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு கொடுக்கப்படுவது இல்லை.
ஆனால் இப்படத்தில் இக் கட்டமைப்பில் கல் எறிவதற்கு பதிலாக தன் மகளிடம் “இப்படி அவன் (திரு நங்கை) திரும்பி வருவான் என்று தெரிந்து இருந்தால் நீ யாரையாவது இழுத்து கொண்டு ஓடிருக்கலாமே” என்று அம்மாவின் ஆறுதல் மொழிகள். கணவனை இழந்த பெண்கள், கணவனால் கைவிட பெற்றவர்களுக்கு அவர்களின் மறுமணத்தை ஆதரிக்காமல் சமூத்தில் அவர்களை அங்கிகரிக்க மறுத்து பின் வாசல் வழியாக ஓட சொல்வது தான் இயக்குநரின் பெண்ணிய சிந்தனையா?
அதைவிட திருநங்கையாகக்கூட திரும்பி வந்தாலும் ஏற்று கொள்ள வேண்டும் என்று அன்பின் வழியில் கருணை அற்ற இரகத்தினை போதித்தல் மூலம் பெண்ணின் உணர்வுகளை இன்னமும் அதல பாதளத்திற்குள் தள்ளிவிட்டுள்ளது இந்தப் படம்.
ஷில்பாவின் கதாபாத்திரம் சமூகத்தில் பல்வேறு இன்னல்களுக்குள் அனுதினமும் நேரடியா பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட மூன்றாம் பாலினத்தவரின் கதாபாத்திரத்தை தன்னால் முடிந்த அளவிற்கு,
தன் பண்டம்(படம் )சந்தை படுத்தப்பட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் அக்கதாபாத்திரத்தை இயக்குநர் கேலிக்கூத்தாகி இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய காவல் ஆய்வாளனை ஷில்பா மூலமே “அவர் எனக்கு புருஷன் மாதிரி” என்று சொல்லுவது எல்லாம் காவல் துறையினால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அத்துணை திருநங்கைகளையும் கொச்சைபடுத்திய விதத்தை துளி அளவும் ஏற்று கொள்ள முடியாது.
படம் முழுவதும் பெண்களின் மைய கதாப்பாத்திரம் அனைத்தும் பொருளாதார தன்னிலை அடைந்தவராக காட்டாமல் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வேலைக்கு செல்லும் பெண், வேலைக்கு செல்லாத கணவனிடம் மதியம் சாப்பாடு சமைத்து எடுத்துக் கொண்டு வா என்று கட்டளை இட்டு செல்வது, மிகப்பெரிய அபத்தமான பதிவாகவே உள்ளது. சமமான உழைப்பு பிரிவினையும், பொருளாதார சுகத்திரத்தை பேச தயாராக இல்லாத அறை வேக்காட்டுத்தனம்தான் இது.
மேற்கண்ட அனைத்து படி நிலைகளின் சாராம்சத்தை உற்று நோக்க வேண்டும். குறிப்பாக பாலியல் தளத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் எல்லாக் கொடுமைகளையும், இன்னல்களையும் இயல்பாக காட்டுதல், மற்றோன்று தான் பாலியல் பண்டமாக மாற்றப்படுவதையே பெண்களுக்கான விடுதலையாக சொல்லுதல் ஆகிய இரண்டையும் தெளிவாக கையாண்டுள்ளார் இயக்குநர்.
நமது நிலவுடைமை சமூகத்தில் பெண்ணின் மதிப்பீடுகள் அனைத்தும் ஆணுக்கு கீழ் ஆனவள் என்றும் கணவன் எத்தயைய குணம் கொண்டவனாக இருந்தாலும், பரதேசியாக, பிறன் மனைவியை விரும்பினாலும், துரோகம் இழைத்த கணவனுக்கு நல்ல மனைவியாக இருக்கவேண்டும்.
மறுபுறம் ஏகாதிபத்திய தரகு முதலாளிகளுக்கு, பெண் சமூக உற்பத்தியில் மலிவான கூலிக்கு பெரும் அளவில் பெண்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் எழுகிறது. இதனால் பெண்கள் படிப்பதற்கு, தொழிலுக்கு என்று சமூகத்தை நோக்கி வரவேண்டிய தேவையையும் அதிகப்படுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் பெண்ணுக்கு போலியான சுந்ததிர மாயையை உருவாக்கி தந்துள்ளது அந்த அமைப்பு.
மேற்கண்ட இரண்டு வகையிலும் ஆணாதிக்க கட்டமைப்பை வலுவாக்கியுள்ளது. தரகு முதலாளிகளின் பெரும் லாபத்திற்காக பாலியல் சுதந்திரம் என்ற பெயரில் பெண்களை நுகர்வு பண்டங்களாக மாற்றுதல் அல்லது அவர்களே விரும்பி நடிக்கிற சினிமாவாகட்டும் அல்லது ஆபாச படங்களும் அவர்களின் லாபவெறிக்கே….
மேலும் சுதந்திரமாக வரக்கூடிய பெண்களை தமது இச்சைகளுக்காக பயன்படுத்துவதும்,தனக்கு எவ்விதத்திலும் பொருந்தாத ஆணை தூக்கி எறியாமல் அவளை ஒரு கள்ள உறவு மூலம் சுதந்திரத்தை அடைய சொல்லுவதும் இதனால் அவள் சுதந்திரத்தை வேறு வழியில் திருப்பிவிடுதல் மூலம் அதுவும் ஆண்களுக்கே சாதகமாக பயன்படக்கூடிய சூழ்நிலைதான் நிலவுகிறது.
நிலவுடமை கருத்துக்களை தூக்கி எறியாமல் கற்றற்ற பாலியல் உறவுகளின் மூலம் ஆண்களுக்கு கன்னியாக(பொறி) மாற்றப்படுகிறார்கள். இதனால் பெண்கள் தனக்கு இழைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்து குரல் கொடுக்க முடியாதவர்களாக ஆக்கப்படுகிறார்கள்.
சுதந்திரமாக வரக்கூடிய பெண்களை கொடூரமாக கொலை செய்வதும், ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டுவதும், தன் இச்சைக்கு அடிபணிய வைப்பதும், கூட்டு வன்புணர்ச்சிகளை மேற்கொள்வதும் இதன் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகின்றது. இதற்கு ஆளும் வர்க்கமும் பெரும் அளவில் துணை போகக்கூடிய அளவில் செயல்படுகிறது.
இத்தயை சமூக சூழ்நிலையையுடன் நாம் படத்தை பொருத்தி பார்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அனைத்து நிலவுடைமை கருத்துக்களையும் தாங்கி பிடித்து கொண்டு, ஏகாதிபத்தியத்திற்கு முழுக்க முழுக்க வால் பிடித்து கொண்டு, பாலியல் சார்ந்த உறவில் முற்போக்கு சொல்ல வருகிறேன் என்று கூறிக் கொண்டு அனைத்து பிற்போக்கு தனத்தையும் உள்ளடக்கிய ஒரு செக்ஸ் டீலக்ஸாக மட்டுமே திரைக்கதை முழுவதும் கரும்புகையை படம் மெங்கும் வெளியேற்றி கொண்டு செல்கிறார் இயக்குநர்.
கதை நேர்த்தி என்ற பெயரில் உலகத்தில் தீமை, நன்மை என்றும், இன்று தவறு என்று சொல்லுவது நாளை சரியென்று சொல்லப்படும், இதுதான் இயற்கை என்றும், அநீதிக்கு எதிராய் எழும் குரல்கள் அனைத்தையும தற்செல் நிகழ்விற்குள் அடக்கம் செய்துவிட்டார் இயக்குநர்.
இச்சமூத்தில் பல்வேறான ஒடுக்கு முறைகளை இந்த ஆளும் வர்க்கம் கட்டவிழ்த்துவிடுகின்ற சூழ்நிலையில் பாலியல் ரீதியான சுரண்டல்களையும், ஒடுக்குமுறையையும் மற்றோரு வடிவத்தில் கையாலுக்கின்றது இந்தப் படம்.
பெண்ணை பண்டமாகி மனித இனத்திற்கான மதிப்பை இந்த சமூகம் மறுக்கிற வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. திரைத்துறையும் அதற்கு விதி விலக்கு அல்ல. அனைத்து ஆபாச பண்பாட்டையும் தங்கிப் பிடித்து கொண்டு பெண்களின் உடல்கள் மீது சவாரி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்க நிலவுடமை பண்பாட்டையும், ஏகாதிபத்திய தரகு அதிகார வர்க்கத்தை தூக்கி எறிய வீரம் செறிந்த போராட்டங்களால் மட்டுமே சாத்தியமாக்க இயலுமே தவிர கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை கொண்டாடுவது ஒருபோதும் தீர்வு ஆகாது.
ஈஸ்வரி, ‘திரையாள்’ இதழின் ஆசிரியர். தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் பொதுச்செயலாளர்.