மாநிலங்களவை உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு, செயலாளருமான பினாய் விஸ்வம் பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதம் எழுதியுள்ளார்.
மதிப்பிற்குரிய சௌகிதார் திரு நரேந்திர மோடி அவர்களே ,
உங்களுக்கு நீங்களே சௌகிதார் என்ற பட்டத்தைக் கொடுத்துக் கொண்ட போது, நீங்கள் இந்த நாட்டின் காவலாளி என்று நாட்டு மக்களிடம் சொன்னீர்கள். பாராளுமன்றத்தையும், அரசியல் அமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்கிற பொறுப்பை நீங்கள் எடுத்துள்ளதாக பலர் நம்பினார்கள். ஆனால், நீங்கள் சொன்னதற்கும் செய்ததற்கும் உள்ள இடைவெளி பலரை திகைப்புக்கு உள்ளாக்கியுள்ளது. ஜனநாயகத்தின் அடிப்படையான தூண்களாக பாராளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை உள்ளன என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்லுகிறது. நிர்வாகத் துறை பாராளுமன்றத்திற்கு பதில் சொல்ல கடமைப்பட்டது என்பதும் அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைப்படி மறுக்கமுடியாத ஒன்றாகும். இந்த நெறிமுறைகள் உங்களுக்கும் பொருந்துமா என்று தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
உங்களுடைய ஐந்து வருட “சௌகிதார்காலம்”( காவலாளி) முடிய இருக்கும் நேரத்தில் நீங்கள் எவ்வளவு பொறுப்போடு பாராளுமன்றத்திற்கு இருந்திருக்கிறீர்கள்? இந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை நாட்கள் பாராளுமன்றத்திற்கு வந்து இருக்கிறீர்கள்? நீங்கள் பாராளுமன்றத்திற்குள் சௌகிதாராக நுழைந்த தருணத்தை நம் மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஜனநாயகத்தின் புனிதமான இடமான பாராளுமன்றத்திற்குள் நுழையும் முன்பு, ரகசிய காப்பு பிராமணம் எடுக்கும் முன்பு பாராளுமன்றத்தின் படிக்கட்டுகளை முத்தமிட்டீர்கள்.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் பாராளுமன்றத்தை மதிக்காத பிரதமர் நீங்கள்தான் என்பதை நிருபித்து இருக்கிறீர்கள். நீங்கள் சௌகிதாராக இருந்த காலத்தில்தான் பாராளுமன்றம் மிக குறைவான நாட்களே கூடியுள்ளது. 2014 ஜூன் மாதத்திற்கும் 2019 பிப்ரவரி மாதத்திற்கும் இடையில் 331 நாட்களே பாராளுமன்றம் கூடியுள்ளது. கடந்த காலங்களில் ஐந்து வருடம் ஆட்சி நடந்த சமயங்களில் பாராளுமன்றம் சராசரியாக 468 நாட்கள் நடந்துள்ளது. இது நீங்கள் நடத்தியது எவ்வளவு வெற்றான ஒன்று( hollowness) என்பதைக் காண்பிக்கிறது. 331 நாட்கள் நடந்துள்ள பாராளுமன்றத்தில், நீங்கள் எத்தனை நாட்கள் கலந்து கொண்டீர்கள் என்று இந்த நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள ஆசைப்படுவது இயல்புதான்.
அதிகாரப்பூர்வமற்ற வகையில் நீங்கள் 30 நாட்களே பாராளுமன்றத்திற்கு வந்துள்ளீர்கள் என்று தெரிய வருகிறது. சரியான தகவல் குடிமகனுக்கு தெரிய வேண்டும் என்று நம்புகிறேன். பாராளுமன்ற மேலவையான, மாநிலங்களவை உறுப்பினரான நான் இந்தக் கேள்வியை எழுப்பினேன்.இந்த சாதாரண , எளிய கேள்விக்கு எனக்கு கிடைத்த பதில் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில்
இந்த மன உளைச்சலை பிரதம மந்திரியாகிய தங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பகிரங்க கடிதத்தை எழுதுகிறேன்.
“16 வது பாராளுமன்றத்தில்,எத்தனை நாட்கள் ஒட்டுமொத்தமாக பிரதம மந்திரி அவையில் இருந்தார்? என்பதுதான் எனது கேள்வி. பாராளுமன்றம் நடந்து கொண்டு இருக்கும் போது உரிய கால இடைவெளி கொடுத்து 11.2.2019 அன்று பதில் வரும் வகையில் நோட்டீஸ் கொடுத்து இருந்தேன். ஆனால் பாராளுமன்றக் கூட்டம் முடியும் வரையில் எனக்கு எந்தப் பதிலும் வரவில்லை. ஆனால் சில தினங்களுக்கு முன்பு, 22.2.19 தேதியிட்ட கடிதம் ராஜ்ய சபை செயலகத்தில் இருந்து அஞ்சலில் எனக்கு வந்தது. எனது கேள்வியை ஏற்றுக்கொள்ள முடியாது( inadmissible) என்று அந்தக் கடிதம் சொல்லியது.ஏனெனில் அது மாநிலங்களவை/மக்களவையின் அதிகாரவரம்பிற்குள்(Purview) அது வருகிறது. அந்தக் கடிதம் நடைமுறை விதி( Rules of procedure) 47(2) ஐ எனக்கு சுட்டிக்காட்டியது. எனவே சம்மந்தப்பட்ட விதிகளை நான் பார்த்தேன். அரசு அல்லது அமைச்சர்களின் அலுவல் அல்லாத எந்தக் கேள்வியையும் ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த விதி கூறுகிறது.
மரியாதைக்குரிய சௌகிதார் அவர்களே அதுதான் உண்மையான பிரச்சினை. பாராளுமன்றத்தில் அமைச்சர் இருப்பது என்பது ஒரு அரசாங்கத்தின் அலுவல் இல்லையா? பிரதம மந்திரி பாராளுமன்றத்தில் இருப்பது தேவையற்றது என்று கருதும் ஒரு அரசு எப்படி பாராளுமன்றத்திற்கு பொறுப்போடு நடந்து கொள்ள முடியும். இதற்கு நான் உங்களிடமிருந்து பதிலை எதிர் பார்க்கலாமா? பூமியிலும், ஆகாயத்திலும் வெளியிடங்களிலும் (outer space) ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று நீங்கள் சுறுசுறுப்பாக தேடிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் கொஞ்சம் நேரம் ஒதுக்குவீர்களா என்று அறிய விரும்புகிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
பினாய் விஸ்வம்,
பாராளுமன்ற உறுப்பினர்.