அமைப்புச் சாரா தொழிலாளிக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் தரப்போவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரிய விளம்பரம் செய்யப்பட்ட து. பத்திரிக்கைகள் பாராட்டின. ஆனால் இதனால் தொழிலாளர்களுக்கு எந்தப் பலனும் இல்லையென்று ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மோடி அறிவித்து உள்ள திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களே சேர முடியும். இது ஒரு விருப்பபூர்வமான(optional) திட்டம்தான்; அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தாது. ஒவ்வொரு தொழிலாளியும் 18 வயது முதல் 40 வயதுவரை மாதாமாதம் ( 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை ) பிரிமியம் செலுத்த வேண்டும். இதற்கு ஈடான தொகையை மத்திய அரசு தன் பங்கிற்கு செலுத்தும். இப்படி செலுத்தி வரும் தொழிலாளிக்கு இருபது ஆண்டுகள் கழித்து 60 வயது ஆனவுடன் மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே கட்டுமான தொழிலாளர் நலவாரியம் உள்ளிட்ட அமைப்புச்சாரா நலவாரியங்களில் பதிவு செய்து கொண்ட தொழிலாளர்களுக்கு அவர்கள் 60 வயது ஆனவுடன் மாதம் ஆயிரம் ரூபாய் தற்போது ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இது ஓரளவு நல்ல திட்டமாகும்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டம் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு அறிவித்துள்ள திட்டமாகும். இதற்கு சொற்பமான நிதியே (ஐநூறு கோடி ரூபாய் மட்டுமே) மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர்தான் வழங்கப்டும். 41 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது.
இந்த திட்டத்தினால் ஏற்கெனவே நடைமுறையில் மாநில அரசால் நல்ல முறையில் நலவாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிற ஓய்வூதியத்திற்கும் பாதிப்பு வரும் அபாயம் உள்ளது.
எனவே மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டத்தை ஏஐடியுசி நிராகரிக்கிறது. 60 வயதான அனைத்து அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஏஐடியுசி கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.