CPIMLஅறிக்கை
இன்னும் மூன்று மாதங்களில் மக்களவை தேர்தல்கள் வரவுள்ள நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய தேசத்துரோக வழக்கில் டில்லி காவல்துறை ஜேஎன்யு மாணவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. காரணம் மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது.
தேசத் துரோக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஜேஎன்யு மாணவர் தலைவர்களும் நாடெங்கும் உள்ள மாணவர், இளைஞர் இயக்கங்களும், இந்தியாவின் பொருளாதாரத்தை அதன் சமூக இழையை நாசமாக்கும் மோடி ஆட்சிக்கு எதிரான மிகவும் துடிப்பான, தீவிரமான குரல்களில் ஒன்றாக எழுந்துள்ளன.
இந்திய மக்கள் முன், ஆடைகள் இல்லாத அரசராக மோடியை அடையாளப்படுத்தும் இந்த இளைய குரல்களின் நம்பகத்தன்மையை போக்க, அவற்றை அச்சுறுத்த, நசுக்க எடுக்கப்படும் முயற்சியாகத்தான், டில்லி காவல்துறை இந்த பொய்யான தேசத் துரோக குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னயா குமார் மற்றும் பிற மாணவர்கள் மீது போடப்பட்ட இதே தேசத் துரோக நடவடிக்கைகளுக்காகத்தான், அவர்களை தண்டிக்க ஜேஎன்யு நிர்வாகம் எடுத்த முயற்சிகளை, சட்டவிரோதத் தன்மை, காரணகாரியமற்ற தன்மை, நடைமுறை தவறுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டி, 2018 ஜூலையில் டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2016 பிப்ரவரி 6 அன்று நடந்த சம்பவங்கள் தொடர்பாக டில்லி அரசாங்கம் உத்தரவிட்ட நீதி விசாரணையில், தொலைக்காட்சி அலைவரிசைகளில் வெளியிடப்பட்ட காணொளி காட்சிகள், மக்களுக்கு தவறான தோற்றம் தரும் நோக்கத்துடன் சித்தரிக்கப்பட்டவை என்று சொல்லப்பட்டது.
ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள், விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது, ஊழலை ஒழிப்பது ஆகிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்காக மோடி அரசாங்கம் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.
மாறாக, மோடியின் அலுவலகமே, அவரது அரசாங்கமே, இந்தியா இது வரை காணாத படுமோசமான கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளின், ஊழல்களின் உறைவிடமாக இருக்கிறது. அவரது ஆட்சி, கொலைகார பணமதிப்பகற்றத்தை, ஜிஎஸ்டியை கொண்டு வந்த, இந்திய பொருளாதாரத்தை நாசமாக்கிய, கடந்த ஆண்டில் மட்டும் ஒரு கோடி வேலை வாய்ப்புகளை அழித்த, இந்திய பல்கலை கழகங்கள் மீது தாக்குதல் தொடுத்த, இன்னமும் உருவாக்கப்படாத கல்வி வர்த்தக மய்யங்களான ஜியோ பல்கலைகழகம் போன்றவற்றை முன்னகர்த்துகிற, அறிவியல் என்ற பெயரில் இருண்மைவாத அபத்தங்களை முன்தள்ளுகிற, உரிமைகளுக்காகப் போராடுகிற விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த, அவர்கள் மீது தாக்குதல் தொடுத்த ஆட்சியாகும்.
தேசத் துரோக சட்டப் பிரிவு, தேசிய பாதுகாப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியவை, இப்போது, பஞ்சாப் மற்றும் ஜேஎன்யு மாணவர்கள் மீது, அசாமில் மதச்சார்பற்ற அரசியல்சாசனத்தைப் பாதுகாக்கப் போராடுபவர்கள் மீது, நகர்ப்புற நக்சல்கள் என்று முத்திரை குத்தப்படுகிற மனித உரிமைப் போராளிகள் மீது, உத்தரபிரதேசத்தில் கும்பல் படுகொலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மீது ஏவப்படும் ஆயுதங்களே!
ஜேஎன்யு முதல் வாரணாசி இந்து பல்கலை கழகம் வரை, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகப் போராடும் பெண் மாணவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் மாணவர்கள் மோடி ஆட்சிக்கு பாடம் கற்பித்தனர்; ஆயினும் எதிர்க்கருத்து சொல்பவர்கள் மீது, ஜனநாயகத்தை பாதுகாக்கப் போராடுபவர்கள் மீது, முத்திரை குத்தும் அதே பழைய தந்திரங்களை மீண்டும் பிரயோகிக்கிறார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த தேசத் துரோக குற்றச்சாட்டுகள் திருப்பித் தாக்கின; ஜேஎன்யு மாணவர் செயல்பாட்டாளர்கள் குரல்கள், ஜேஎன்யு வளாகம் தாண்டியும் எதிரொலித்து, நாட்டு மக்களுக்கு நம்பிக்கையும் துணிவும் தந்தது.
அம்பானியின் ஜியோ பல்கலைகழகத்தின் வடிவில், உயர்கல்வியை அழித்து, இருண்மைவாத மதவெறிக்கு, கார்ப்பரேட் வழிபாட்டுக்கு வழிவகுக்கும் ஆட்சியின் நோக்கத்துக்கு எதிராக ஜேஎன்யு ஆசிரியர்களும் மாணவர்களும் துணிச்சல்மிக்க போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கன்னையா, உமர், அனிர்பன் ஆகியோருடன் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள காஷ்மீர மாணவர்கள் இந்தப் பொய்யான தேசத்துரோகக் குற்றச்சாட்டு தொடர்பாக மிகப்பெரிய விலை தர வேண்டியிருக்கும். இந்த மாணவர்களும் காஷ்மீரின் பிற மாணவர்களும் இளைஞர்களும் ஏற்கனவே எதிர்கொள்ளும் தவறான சித்தரிப்பு, பாகுபாடு, வன்முறை ஆகியவற்றை, இந்தத் தேசத்துரோக குற்றச்சாட்டு மேலும் அதிகரிக்கும்.
ஜேஎன்யு மாணவர்களை தேசத் துரோகிகள் என்று, தேச விரோதிகள் என்று பழிக்க, பொய் காணொளி காட்சிகளையும் பொய்ச் செய்திகளையும் வெளியிட்ட பிரச்சார அலைவரிசைகள், ஜேஎன்யு மாணவர்களை, அவர்கள் எழுப்பிதாகச் சொல்லப்படும் முழக்கங்கள் அடிப்படையில், இந்தியாவை துண்டாடும் கும்பல் என்று, மீண்டும் முத்திரை குத்துகின்றன.
வன்முறையை தூண்டாத வெறும் முழக்கங்கள் மட்டும் தேசத் துரோகம் ஆகாது என்று கேதார்நாத் சிங் எதிர் பீகார் அரசு, பல்வந்த் சிங் எதிர் பஞ்சாப் அரசு ஆகிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் மீண்டும் மீண்டும் சொல்லியுள்ளது. ஆயினும் எதிர்ப்புக் குரல்களின் நம்பகத்தன்மையை அழிக்க, தேசத் துரோகக் குற்றச்சாட்டு ஓர் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.
இன்று, இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்து, இந்துக்கள் எதிர் இசுலாமியர்கள் என்று இந்தியாவை உடைத்து, குடியுரிமை திருத்த மசோதா மூலமும் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீட்டின் மூலமும் இந்தியாவின் அரசியல் சாசனத்தை உடைத்து, ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வுத் துறை, நீதிமன்றங்கள் ஆகியவற்றை சீர்குலைத்து இந்தியாவின் ஜனநாயத்தை உடைத்து, ஊடக சுதந்திரத்தை, பேச்சுரிமை, வெளிப்பாட்டு உரிமைகளை உடைக்க முயற்சி செய்து இந்தியாவை துண்டாடும் கும்பல் மோடி ஆட்சிதான் என்பதை மறுக்க முடியாது.
இந்த துண்டாடும் கும்பல், இந்திய மக்களின் உறுதியை உணர்வை உடைக்க முடியாது. நமது நாட்டை, அதன் ஜனநாயகத்தை அழித்துவிட முயற்சி செய்யும் இந்த ஆட்சிக்கு வருகிற மக்களவைத் தேர்தல்களில் இந்தியா நிச்சயம் பொருத்தமான பதில் தரும்.