நக்கீரன்

வேணு சீனிவாசன் முன் ஜாமீன் பெற்றதை விட அவருக்கு ஆதரவாகக் குருமூர்த்திப் பதறுவதுதான் நிறையச் சிந்திக்க வைக்கிறது. கோவில்களை மீட்பது என்பது சங்பரிவாரின் வெகுநாள் கனவு. நாத்திகர்கள் அறங்காவலர்களாக இருப்பதால்தான் கோவில்களின் களவு நடக்கிறது என்பது அவர்களுடைய வெகுநாள் கூச்சல். இப்போது ஆத்திகரான வேணு சீனிவாசனின் நிர்வாகத்தின் கீழ் நடந்துள்ள களவால் அவர்களுக்குத் தொண்டைக் கட்டிவிட்டது. திருடுவது என்று முடிவு செய்துவிட்டால் நாத்திக ஆத்திக வேறுபாடு, சைவ வைணவ வேறுபாடெல்லாம் கிடையாது.
மோட்ச தலமான காசி விஸ்வநாதர் கோவிலில் 1983-ல் 2 கிலோ தங்கம் திருடியதற்காக அர்ச்சகர்கள் கைது செய்யப்பட்டது; 1993-ல் தமிழகச் சிதம்பரம் நடராஜர் கோவில் வைர நகை திருட்டில் திருடியவர் 300 தீட்சிதர்களுக்குள்தான் இருக்கிறார் என்று கைலாசநாத சங்கரர் தீட்சிதர் என்பவரே தெரிவித்தது; 1995-ல் நெல்லையப்பர் கோவிலில் வெள்ளி நகை திருட்டு தொடர்பாக இரு அர்ச்சகர்கள் கைது செய்யப்பட்டது ஆகியவை சைவ கோவில் திருட்டுகளுக்குச் சில மாதிரிகள்.
தங்க நகைக்குப் பதிலாக முலாம் பூசப்பட்ட நகை வைக்கப்பட்ட அழகர்கோவில் திருட்டு (1994), திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஒரு கோடி மதிப்புள்ள நகை கொள்ளையில் கிருஷ்ணன் நம்பூதிரி கைது (1995), தற்போது திருவரங்கம் கோவில் போன்றவை வைணவ கோயில் மாதிரிகள். பட்டியல் வெகு நீளம் என்பதால் இங்கே மாதிரிகளோடு நிறுத்தப்பட்டுள்ளது.
கோயில்களில் நடந்த தொடர் திருட்டுக்களுக்காக 1960லேயே சர். சி. பி இராமசாமி அய்யர் தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கையில் கோயில் பணத்தை எடுத்து பங்கு சந்தையில் பயன்படுத்திய அர்ச்சகர்கள் பற்றியெல்லாம் கூறப்பட்டுள்ளது. இவர்கள் எல்லாம் ஆத்திகர்கள்தானே? நிலவுடையாளர்களின் அதிகாரத்துக்காக உருவாக்கப்பட்டதே கோயில் என்கிற சொத்துடைமை நிறுவனம். எளிய மக்களின் நாட்டார் கடவுள்களுக்கு இதுபோன்ற சொத்துகள் கிடையாது என்பதால் அவை நிறுவனம் ஆகவில்லை.
அந்தக் காலத்திலேயே கோயில் சார்ந்த பார்ப்பனர்களின் களவுக்குக் கல்வெட்டுச் சான்றுகள் உண்டு. கோயிலில் செய்த தவறுக்காகப் பார்ப்பனர் ஒருவருக்கு 20 காசு தண்டம் விதிக்கப்பட்டது என்கிறது ஊட்டத்தூர் விக்கிரமச் சோழன் 13 ஆம் ஆட்சியாண்டு கி.பி 1131 கல்வெட்டு. இதே ஊட்டத்தூர் கோயில் இறைவியின் நகைகளைப் பார்ப்பனர் ஒருவர் திருடியதற்குச் சான்றாக 1199-ல் பதியப்பட்ட மூன்றாம் குலோத்துங்கனின் 21 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இருக்கிறது. மூன்றாம் இராசராசனின் 23ஆம் ஆட்சியாண்டு கி.பி 1239 சிவபுர கல்வெட்டில் இரு சிவ பார்ப்பனர்கள் கோயில் பணம் நகைகளைத் திருடி காமக்கிழத்தியிடம் தந்ததால் அதை விசாரிக்கச் சென்ற அரச வீரர்களையும் அடித்த செய்தியை தெரிவிக்கிறது. இவையும் சில மாதிரிகளே.
அந்தநாள் முதல் இந்தநாள் வரை காட்சி மாறவில்லை. நிலவுடைமை கால வீழ்ச்சியால் ஏற்பட்ட பணபரிமாற்ற குறைவு இன்று அசையா சொத்துக்களின் மேல் முடிந்தளவு கைவைக்கும் துணிச்சலைத் தந்துள்ளது. ஹெச். ராஜா வகையறாக்கள் வெகுநாட்களாகக் கோயில் சொத்துக்களுக்காகத் தொண்டை கம்ம குரல் கொடுக்கும் இரகசியம் புரிகிறது. கோயில்களை நடுவண் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது இவர்களது அண்மை காலக் குரல். இந்நேரத்தில்தான் தன் பொறுப்பில் கோயில் இருந்தபோது கணக்கு வழக்குகளைத் துல்லியமாக வைத்திருந்த அந்த ஈரோட்டு கிழவர் நினைவுக்கு வந்து தொலைகிறார்.
நக்கீரன், எழுத்தாளர்.
கோவில்களை “மீட்பது” என்ற தலைப்பு பொருந்தவில்லை.
மீட்டது நாம். இப்போ மீண்டும் அபகரிக்க நினைப்பது என்று தான் இருக்கவேண்டும்
LikeLike