தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் சொற்ப பெண்களில் தமயந்தி தனித்துவமானவர். குடும்பம், சமூகம் போன்ற அமைப்புகள் பெண்கள் மீது செலுத்தும் வன்முறைகளை சிறுகதைகளில் பதிவாக்கியவர். தான் எழுதிய அப்படியானதொரு சிறுகதையை படமாக்கியுள்ளார் தமயந்தி. ‘தடயம்’ என்ற பெயரில் அந்தப்படம் வெளியாக உள்ளது. இதுகுறித்து தமயந்தியுடன் நடத்திய உரையாடல் இங்கே…

நீங்கள் சிறுகதை எழுத்தாளராகவும் ஊடகவியலாளராக அறியப்பட்டவர். பின், சினிமா வசனகர்த்தாக அறிமுகமானீர்கள். இப்போது இயக்குநராக… ஆக, இயக்குநராவதுதான் இலக்காக இருந்ததா?
“இது சிக்கலான கேள்விதான். நான் தென்மாவட்டத்திலிருந்து, மத கட்டுப்பாடு மிக்க குடும்பத்திலிருந்து வந்தவள். அங்கே, சினிமா பார்ப்பது பாவமாக கருதப்பட்டது. ஆனாலும் எனக்கு இளையராஜாவின் இசை பிடிக்கும். ராஜாவின் இசையில் வாழ்க்கையைப் பார்த்தேன். வீட்டில் அம்மா அதிகாரம் மிக்கவராக இருந்தார். அப்படியானதொரு சூழலில், அந்த இறுக்கத்திலிருந்து விடுபட நான் நிறைய பொய்களை புனைந்தேன். ஒரு விஷயத்தை நூறாக்கி சொல்வது, புனைவது. அம்மா வெகுஜென இதழ்களை வாசிப்பவராக இருந்தார். அதன்மூலம் எனக்கு வாசிப்பு பழக்கமானது. எழுதத் தொடங்கினேன். எனக்கு பாடல்கள் எழுதப் பிடிக்கும். வெளியான ஒரு பாடலின் மெட்டில் வேறு வார்த்தைகளைப் போட்டு எழுதுவேன். சினிமாவைப் பொறுத்தவரை பாடலும் வசனமும் தான் என்னுடைய cup of tea (திறமை அல்லது விருப்பம்) என நினைத்திருந்தேன். எதிர்பாராதவிதமாகத்தான் சினிமா இயக்கம் நிகழ்ந்தது. இதன் காரணமாக இருந்தவர் சௌபா அண்ணன். ‘தடயம்’ கதை வெளிவந்தபோது இயக்குநர் பாலாஜி சக்திவேல் இதை படமாக்குவதாக கூறினார். வெரொரு நண்பரும் அணுகியிருந்தார். ஆனால், இது என்னுடைய வாழ்க்கையில் நடந்த கதை. மீன் முள் தொண்டையில் சிக்கியவர்களால் மட்டுமே அதோட வலியை உணர முடியும். அதுபோல், இந்தக் கதையை நானே இயக்க முடிவெடுத்தேன். எழுத்தாளர் குட்டிரேவதியோடு திரைக்கதை, வசன பணிகளில் பங்கேற்றிருக்கிறேன். ஆவணப்படங்கள் இயக்கினாலும் இதுதான் நேரடியான சினிமா இயக்கும் அனுபவம்”.

இது சுயாதீன படத்தை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?
“என்னைப் போல அனுபவம் இல்லாதவர்கள் படம் இயக்குவது, அதுவும் ஒரு பெண் படம் இயக்குவது இங்கே சவாலான விஷயம். எனவே, crowdfunding மூலம் தயாரிப்பு செலவுக்கான பணத்தை திரட்ட முடிவெடுத்தேன். என்னுடைய தோழி ஒருவரிடம் இதுகுறித்து பேசிக்கொண்டிருக்க, அவருக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி முதல் நிதியை சேகரித்தார். அதுபோல தெரிந்த பலரிடம் கேட்டு பெற்ற நிதியைக் கொண்டு படப்பிடிப்புக்கு சென்றேன். சௌபா அண்ணனின் தோட்டத்தில் படப்பிடிப்பு நடத்தினோம். அவர் இந்தப் பட உருவாக்கத்தில் மிக உறுதுணையாக இருந்தார். அவருடைய இறுதி காலக்கட்டத்தில், இறப்பதற்கு மூன்று நான்கு மாதங்கள் முன்பு வரை அவருடனேயே இருந்தேன்.
மனநிலையில், உடல்நிலையில் சோர்வு கொண்டிருந்தபோது அவர் என்னோடு இருந்தவர். இது உனக்கு பிறந்த வீடுபோல என அவர் சொல்வார். அவருடைய தோடத்தில், அவர் பயன்படுத்திய தேநீர் கோப்பை, கட்டில் என அவர் நினைவுகளை தேய்க்கி வைத்திருக்கிறது ‘தடயம்’.
தயாரிப்பு அனுபவத்தைப் பொறுத்தவரை இனி ஒரு முறை சுயாதீன பட முயற்சியில் இறங்க வேண்டாம் என்கிற முடிவுக்கு வரவைத்துவிட்டது. நிறைய பேர் உதவினார்கள். உதவுகிறேன் என சொன்னவர்கள் இறுதிவரையில் உதவவேயில்லை. சில நாட்கள் கையில் வெறும் 100 ரூபாயை வைத்துக்கொண்டு, பத்து பேருக்கு உணவு வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருந்தேன். முதல் நாள் நான்கு விளக்குகளை பயன்படுத்தியிருப்போம், அடுத்த நாள் படப்பிடிப்புக்கு இரண்டு விளக்குகளை வாடகை எடுக்கத்தான் காசு இருக்கும். உண்மையில் படத்தை முடித்தபின், சுயாதீன படம் எடுப்பவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என தோன்றியது. ”
இந்தப் படத்துக்கான நடிகர்கள் தேர்வு குறித்து…
“கனி குஸ்ருதி திறமையானவர். அவருடைய நடிப்பை தொடர்ந்து கவனித்து வருகிறேன். தொலைபேசியில் சிறுகதையை வாசித்து காண்பித்தேன். கதையை விரும்பி நடிக்க ஒப்புக்கொண்டார். கணபதி முருகேஷ், நாடகங்களின் வழியாக அறிமுகமானவர். அவருடைய பேசும் கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இவர்கள் இருவரைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கும். துணை கதாபாத்திரங்களாக என்னுடைய உதவியாளர் உத்ராவும் குறும்பட இயக்குநர் சத்யாவும் நடித்தார்கள்”
‘இது பெண்களுடைய பார்வையில் சொல்லப்படும் கதை’ என இந்தப் படம் குறித்த சமூக ஊடக பதிவில் சொல்லப்பட்டிருந்தது. அதுகுறித்து மேலதிகமாக பகிரமுடியுமா?
“அப்பாவுக்கு திருமணத்துக்கு முன் காதல் இருந்தது என ஏற்றுக்கொள்ளும் சமூக மனநிலை, அம்மாவின் திருமணத்துக்கு முன்பான காதலை ஏற்றுக்கொள்வதில்லை. திருமணத்துக்குப் பின் காதலியை நினைத்து உருகும் ஒரு ஆணின் பார்வையிலான ‘அழகி’ படம் பெற்ற வரவேற்பை, திருமணத்துக்குப் பின் காதலனை நினைத்து உருகும் ஒரு பெண்ணின் பார்வையிலான ‘பூ’ படம் வரவேற்பைப் பெறவில்லை. பெண்களும் ரத்தம், சதை, நரம்பு, எலும்புகளால் ஆனவர்களே. அவர்களுக்கும் காதல், காமம் போன்ற உணர்வுகள் இருக்கும். சட்டம், குடும்பம் என்கிற பெயரில் ஆணையும் பெண்ணையும் ஒரு கூரையின் கீழ் போட்டு அடைத்து வைக்கும் அமைப்பு இங்கே இருக்கிறது. மோடி ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாது என ஒரு இரவில் அறிவித்ததைப் போல, உங்கள் திருமணம் செல்லாது என அறிவித்தால் எத்தனை பேர் குடும்பத்தை இறுகப் பற்றிக் கொள்வார்கள்?”
இந்த இடத்தில், சமீபத்தில் ஒரு எழுத்தாளர் ‘குடும்பம்தான் பெண்களுக்கு பாதுகாப்பானது’ என சொல்லியிருந்தார். அதற்கு நீங்கள் உங்களுடைய முகநூலில் எதிர்வினையாற்றியிருந்தீர்கள்…
“இந்தப் படம் அதைப் பற்றித்தான் பேசுகிறது. இந்தப் படத்தின் நாயகி ஒரு இடத்தில் கேட்பார், ‘இசையே பிடிக்காத ஔரங்க சீப்பும் சிறந்த பாடகியான பி.சுசீலாவும் ஒரே வீட்டில் இருக்க முடியுமா?’ என்று. ஒரு உறவு பிடிக்கவில்லை என்றால், அந்த உறவிலிருந்து வெளியேற ஒருவருக்கு உரிமையுள்ளது. இங்கே உறவு சிக்கல் உள்ளது. பெரும்பாலும் குற்றம்சாட்டி கூண்டுக்குள் ஏற்றுவது நடக்கிறது.
படத்தின் நாயகியும் நாயகனும் செல்போன் பேசுவதன் மூலமாகத்தான் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். திருமணமாகி விவாகரத்தான நாயகியும் திருமணமான நாயகனும் சந்திக்கிறார்கள். கட்டியணைக்கிறார்கள். என்னோட குடும்பம் பாதுகாப்பு இல்லை என்றுதான் வெளியேறுகிறேன் என்கிறார் நாயகி. இப்போது என் கதாபாத்திரத்தை அந்த எழுத்தாளர் என்ன சொல்வார்? நான் சவாலாகவே கேட்கிறேன். குடும்பம் என்பது பெண்களைப் போல ஆண்களுக்கும் ஏன் குழந்தைகளுக்கும்கூட பாதுகாப்பற்றது”
‘தடயம்’ எப்போது வெளியாகவிருக்கிறது?
“மாலா மணியன் தன்னுடைய ஃபஸ்ட் காபி புரக்ஷன் என்ற நிறுவனத்தின் மூலமாக இந்தப் படத்தை வெளியிட இருக்கிறார். இங்கே ஜானர் பற்றி நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. ஒரு மணி நேர படத்தை குறும்படம் என்பார்கள். சிலர் டெலிஃபிலிம் எடுத்திருக்கிறீர்களா? என்பார்கள். தியேட்டர் கிடைப்பது இப்போது சிரமமாகிவிட்டது. எனவே, டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களில் வெளியிட முயற்சித்து வருகிறோம்.”
தொடர்ந்து சினிமாவில் இயங்கும் திட்டமா? சுயாதீன திரைப்படமா? அல்லது வெகுஜென படங்களா? உங்களுடைய திட்டம் என்ன?
“அடுத்து ஒரு படத்துக்கான திரைக்கதை எழுதி வைத்திருக்கிறேன். சரியான தயாரிப்பாளருக்காக காத்திருக்கிறேன். நிச்சயம் சுயாதீன சினிமா எடுக்கப்போவதில்லை. எழுத்தாளர் குட்டி ரேவதி இயக்கவுள்ள படத்தில் வசனம், திரைக்கதையில் பங்காற்றியிருக்கிறேன். இப்போதைக்கு சினிமாதான்!”
எழுத்தாளர்-இயக்குநர் தமயந்தியுடனான உரையாடலை ஆடியோவாக கேட்க…