மாதவராஜ்

தனித்தனியாகவோ, குழுக்களாகவோ, கட்சியாகவோ ஓரளவுக்கு மக்களிடம் பெரியாரின் அம்பேத்கரின் மார்க்ஸின் கருத்துக்களும், பார்வைகளும் செல்வாக்கு கொண்ட நிலமாக தமிழகம் இருக்கிறது. தங்களைச் சுற்றி நடக்கும் ஒவ்வொன்றின் நோக்கத்தையும், விளைவையும் ஆராயும் இயல்பு கொண்டதாய் இருக்கிறது. அதிகாரத்தால், ஆதிக்கத்தால் தான் வஞ்சிக்கப்படுவதை அறிந்துகொள்கிறது. அதுதான் அரசுக்கு எதிரான கலகக் குரல்களும், போராட்டங்களும் இங்கு தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கிறது. ஜனநாயகத்தின் அடையாளம் இது.
இந்துத்துவாவிற்கும் சரி, கார்ப்பரேட்களுக்கும் சரி, மக்கள் என்பவர்கள் புழுக்கள் போன்ற மலிவானவர்கள். மதிப்பற்றவர்கள். மேலே இருந்து வரும் ஆணைகளையும், அறிவிப்புகளையும் அப்படியே ஏற்று நடக்கக் கூடிய அடிமைகள். அவ்வளவுதான். மக்களின் போராட்டங்கள் என்பது அவர்களுக்கு சகிக்க முடியாத ஒன்று. சர்வாதிகாரத்தின் அடையாளம் இது.
இந்த ஜனநாயகத்திற்கும், அந்த சர்வாதிகாரத்துக்கும் இடையேயான போர்க்களமாகி இருக்கிறது தமிழகம். சூழ்ச்சிகள், மோசடிகள், அப்பட்டமான அத்துமீறல்கள், அச்சுறுத்தல்கள் என பல வழிகளிலும் மக்களை அடிமைப்படுத்த மேலிருந்து முயற்சிக்கிறது இந்துத்துவா சக்தி. அதன் ஒவ்வொரு காரியத்தையும் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றுகின்றனர் மக்கள்.
மக்களின் வெப்பம் படர்ந்த அரசியல் உணர்வையும், போராட்டக் குணத்தையும் ஊதி அணைக்க இந்துத்துவா சக்தி ஏவி விட்டிருக்கிற பூதமே நடிகர் ரஜினி. ரஜினியின் ரசிகர்கள் அரசியல் ரிதியாக தங்களுக்கு அடிமைகளாக இருக்கத் தகுதியானவர்கள் என கணக்கும் போட்டிருக்கின்றனர். ரஜினியை, ரஜினி ரசிகர்களை வைத்து போராட்டங்களுக்கு எதிரான சிந்தனைகளை மக்களிடம் விதைக்க முயற்சிக்கின்றனர். அதுதான் நேற்று ரஜினியை “போராட்டம், போராட்டம் என்று இருந்தால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்” என நறநறவென கோபப்பட வைத்தது.
இந்த ஆட்டத்திலும் இந்துத்துவா சக்தி தோற்றுப் போய்க் கொண்டு இருக்கிறது. இன்று ரஜினி என்னும் அந்த பூதம் தமிழகம் முழுவதும் அம்பலப்பட்டுப் போய் நிற்கிறது. சி.பி.எம் தலைவர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோவிலிருந்து, தினகரன், சரத்குமார் என அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆள் ஆளாளுக்கு ரஜினியை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கின்றனர். பல்வேறு இயக்கங்களும் கண்டனக்குரல் எழுப்புகின்றனர்.
“போராட்டம் இல்லாமல் சமூக நீதி இல்லை”, “போராட்டம் இல்லாமல் உரிமைகள் வென்றெடுக்கப்படவில்லை” “போராட்டம் இல்லாமல் வாழ்க்கையே இல்லை”, “போராட்டம் இல்லாவிட்டால் தமிழகம் சுடுகாடாகி விடும்” என முழக்கங்கள் தமிழகத்திலிருந்து தெறித்தபடி மேலெழும்பி வருகின்றன.
கிறுகிறுவென தலைசுற்றிக் கிடக்கிறது ஜனநாயகத்தின் காலில் ரஜினி பூதம்.
மாதவராஜ், எழுத்தாளர்; தொழிற்சங்க செயல்பாட்டாளர்.
மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!
சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!
குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..