மீனாட்சி சுந்தரம்
1990களின் இறுதியில் சில மாதங்களே ஒரு வாடகை வீட்டில், இரண்டு நோயாளிகளான என் அப்பா, அம்மா இருவருடன், கோவை கணபதியில் நான் வாழ நிர்பந்திக்கப் பட்டிருந்த காலம் இன்னும் என் அடிமனதில் அழிக்க முடியாத ஒன்றாய் இருக்கிறது, என்றாலும் கணபதி என்ற அவ்வூர் R. K. Narayan னின் புதினத்தில் வரும் ஒரு மால்குடியைப் போல அழகாயிருந்தது,
.
அந்தக் கற்பனை நகரில் நாராயண் காட்டும் தொடர்வண்டி நிலையமும், சரயு நதி மட்டுமே இல்லை. வாடகை வீடென்றாலும், எனது சுதந்திரத்திற்கான ஒன்றாய் அது இருந்தது.
அங்கே வேலை இல்லா முதுகலைப் பட்டதாரிகளாய் இருந்த நானும் என் நெருங்கிய கல்லூரி நண்பன் திலகேசுவரனும் ( ஓசை காளிதாசனின் இளவல் ) ‘ வெற்றி தோற்றோரியல் கல்லூரி’ (Victory Tutorial College) என்ற தனிப் பயிற்சி மய்யம் ஒன்றை நடத்திவந்தோம்.
நண்பன் சரவணகுமார் அப்போது கணபதி புதூரில் இருந்தான். காலஞ்சென்ற இன்னொரு நண்பன், எழுத்தாளன், பத்திரிகையாளன், கவிஞன், செந்தில் குமார் இரத்தினபுரியில் வசித்து வந்தான்.
நண்பர்கள் இராம சுப்பிரமணியமும் ( இன்றைய திரைப்பட இயக்குனர் ராம்), திருமுருகனும் ( இன்றைய திருமுருகன் காந்தி ) தவறாமல் வருவார்கள். அப்போது எங்கள் தனிப் பயிற்சி மய்யம், நாங்கள் ஆறுபேரும் சந்தித்து இலக்கியம், அரசியல்..என்று உரையாடுகிற இடமாயிருந்தது.
அதுதவிர நாங்கள் ‘இரு அட்டைகளும் சில பக்கங்களும்’ என்ற ஒரு கையெழுத்து இதழையும் நடத்தி வந்தோம். அன்றைய நாட்களில் மிகத் தாமதமாகவே இரவில் வீடு திரும்புவேன்.
முதுமையிலும் நோய்மையிலும், என் வருகைக்காக காத்திருக்கும் அம்மா, தனக்கே உரிய கொங்குத் தமிழில் கேட்பார்
” ஏம்பா இப்படி அசுலூட்டில் (வாடகை வீடு) குடியிருக்கிறோமே, கொஞ்சம் நேரத்தில் வந்து சாப்பிட்டுட்டு தூங்கினா, எங்களுக்கு ஆறுதலா இருக்காதா ?”
கிணத்துக்கடவு ஒன்றிய பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாய் பணியாற்றி ஒய்வு பெற்ற அம்மாவும் அப்பாவும், தங்கள் இரு குழந்தைகளுக்கு வேண்டியே வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.
உடலாலும் மனத்தாலும் பாதிப்படைந்த அவர்கள், தமது இறுதி நாட்களில் ஒரு வாடகை வீட்டில் என்னோடு, அந்த ‘வீட்டுக்கார அம்மா’வின் ஏச்சுகளுக்கும் பேச்சுக்களுக்கும் ஆளாகி துன்பத்தில் உழலுகிற ஒரு காலம் வருமென்று சற்றும் நினைத்திருக்க மாட்டார்கள்.
எனது நெருங்கிய கல்லூரி நண்பர்கள் சுதிரும் இளங்கோவும் துன்பம் நிறைந்த அந்த நாட்களை சரிசமமாய்ப் பங்குபோட்டுக் கொண்டவர்கள்.
இதன் பின்னணியில்தான், நான் ம.இலெ. தங்கப்பாவின் மொழி ஆளுமையை அறிந்திருந்தேன்.
சொல்லொணாத் துன்பம் மிகுந்த அக்காலத்திலேயும், அப்பா ஒரு புத்தகப் பிரியராகவே இருந்தார். அகவை முதிர்ந்த தோழர் வே. ஆனைமுத்து நடத்திய Periyar Era ஆங்கிலத் திங்களிதழிற்கு அப்பா அன்றைய நாட்களில் தீவிர வாசிப்பாளர்.
கணபதியில் என் வாடகை வீட்டு முகவரிக்கு அஞ்சலில் வருகிற அந்த இதழின் பின் அட்டை தங்கப்பாவின் அழகிய ஆங்கில மொழிபெயர்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் ஒன்றைத் தாங்கி வரும்.

அப்போதுதான் என் முதல் ஆங்கிலக் கவிதை நூலான The Wind and a Leaf உத்திரப் பிரதேசத்தில், இந்திய ஆங்கில கவிஞர் காலஞ்சென்ற திரு பல்தேவ் மிஸ்ராவால் அச்சாக்கம் பெற்றுவந்தது. ஆங்கிலக் கவிதை மீதான என் ரசனையை உச்சத்திற்கு கொண்டுசென்றவை தங்கப்பாவின் மொழியாக்க கவிதைகள்.
” கனியிடை ஏறிய சுளையும்-முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனி பசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர் !
பாவேந்தரின் இவ்வழகிய பாடலை மேலும் ஆங்கிலத்தில் அழகு செய்வார் தங்கப்பா.
” The flesh of succulent fruits,
Juice of full-grown sugarcane,
Nectar from flowers;
Syrup, cow’s milk
And tender coconuts
All these are sweet indeed;
But, sweeter to me is Tamil,
My life breath ! ”
தங்கப்பா அவர்கள் இக்கவிதையில் கையாண்ட ‘sweet’ மற்றும் ‘sweeter’ என்ற பதங்களின் வழியே, மொழியாக்கத்தில் ‘Comparative degree’ யின் உயிரை ஒரு வாசகனால் உறுதியாய் உணரமுடியும்.
இப்படி எழுத்துக்களின் வழியே 1990 களில் நான் அறிந்த தங்கப்பாவை, 2014ல் தான் கோவையில் நிகழ்ந்த ‘தாயகம் கடந்த தமிழ் ‘ மாநாட்டில் சந்திக்க முடிந்தது. அன்று நிகழ்ந்த ஒரே சந்திப்பில் அவர்மீதான அன்பையும் மதிப்பையும் அந்த சொற்ப நிமிடத்தில் அவர் இதயத்திற்குள் கொட்டிக் குவித்தேன். பிறகு புதுச்சேரி சென்று, ஒருமுறை என்னை அலைபேசியில் அழைத்துப் பேசினார்.
தங்கப்பாவின் தமிழ் மற்றும் ஆங்கிலக் கவிதை உலகில் ஓரளவு உலவியவன் என்ற அடிப்படையில் அவர் படைப்புகள் குறித்து நான் எழுதிய கட்டுரை ஒன்றை, நான் பணிபுரியும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது முதல் பக்கத்தில் வெளியிட்டது. ஒரு விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு வீட்டில் இருந்த என்னால் அவருக்கு இதழின் பிரதிகளை அனுப்ப இயலவில்லை. காலவெள்ள ஓட்டத்தில் அந்தக் கடமையையும் மறந்தவனாய் நான் இருந்தபோதும், அவ்வப்போது தங்கப்பா என் மனதிற்குள் வந்துபோவார்.
சில மாதங்கள் இருக்கும். தங்கப்பா, தன் முகநூல் கணக்கை தொடங்கி இருந்தார். தனக்கான நட்பையும் என்னிடம் கேட்டிருந்தார். அடியேன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நான் அனுப்பவேண்டியதாய் இருந்த அக்கட்டுரையைத் தேடி எடுத்து அவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டேன். படித்து விருப்பம் தெரிவித்திருந்தார்.
என் நெஞ்சில் உறுத்திய அந்த ஒரு முள்ளையும் கிளைந்தெடுத்துவிட்டு, இப்பூமிக்கு விடைகொடுத்தபடி இன்று போய்க்கொண்டிருக்கிறார், கோவை ஞானியின் மொழியில் சொன்னால், “வாழும் வள்ளுவரான
ம. இலெ. தங்கப்பா”!
மீனாட்சி சுந்தரம், பத்திரிகையாளர்.
மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!
சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!
குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..
அருமையான பதிவு
LikeLike