நரேன் ராஜகோபாலன்

ரஜிந்தர் சச்சார் (1923 – ஏப்ரல் 20, 2018)
கடந்த இரண்டு நாட்களாய் கவனம் பிற வேலைகளில் திரும்பியதால், இந்த முக்கியமான அஞ்சலிக் கட்டுரை தாமதமாகி விட்டது.
இந்திய இஸ்லாமியர்களுக்கான ஆளுமைகள் என்றாலே அது மதிப்பிற்குரிய மவுலானா அபுல் கலாம் ஆசாத்தும், தமிழகத்தில் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் ஐயாவும் தான். இவர்களை தாண்டி இஸ்லாமியர்கள் பெரும்பாலும் தங்களுக்கான ஆளுமைகளாக பார்ப்பது எல்லோருமே முஸ்லீம்கள் தான். ஆனால் உண்மையிலேயே அவர்கள் கொண்டாட வேண்டியதும், தங்களுடைய வீடுகளில் கற்றுக் கொடுக்க வேண்டியதுமான நபர் – ரஜிந்தர் சச்சார்.
சச்சார் கமிட்டி அறிக்கை என்கிறப் பெயரில் 2006-இல் ரஜிந்தர் சச்சார் தலைமையில் வெளிவந்த ஆழமான, விரிவான அறிக்கை தான் இந்தியாவில் முஸ்லீம்களின் உண்மையான நிலையை பட்டவர்த்தனமாக அரசுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. சிக்யுலர் என்றும், மைனாரிட்டி அப்பீஸ்மெண்ட், சிறுபான்மையினர்களைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள் எனவும் வலதுசாரிகளும், ஹிந்துத்துவர்களும் சொன்ன எல்லாவற்றுக்கும் ஆதாரப் பூர்வமாக ஏன் இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை ஒடுக்கப்பட்டவர்களின் நிலையை விடவும் (சில காரணிகளைத் தவிர) படுமோசமாக இருக்கிறது என்று தெள்ளத் தெளிவாக காட்டியது. சச்சார் அறிக்கையை சமர்பிக்கக் கூடாது, அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அன்று அடம் பிடித்து முதல் அமைச்சர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறியவர் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
மேலும் இஸ்லாமியர்கள் என்றாலே ஒரே ஒரு monolith சமூகம் என்கிற பார்வையையும் அடித்து நொறுக்கியது அந்த அறிக்கை. வடக்கத்திய இஸ்லாமியர்களும், தெற்கத்திய இஸ்லாமியர்களுக்கும் அடிப்படையாக இருக்கக் கூடிய சமூக, பொருளாதார, கலாசார, மதம் சார்ந்த வேறுபாடுகளையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியது. இந்தியாவின் மொத்த அரசு வேலைகளில் வெறும் 3.2% மட்டுமே இஸ்லாமியர்கள். இத்தனைக்கும் மொத்த மக்கள் தொகையில் ஐந்து அல்லது ஆறில் ஒருவர் இஸ்லாமியர். இஸ்லாமியர்களுக்கு காலம் காலமாக இழைக்கப்பட்ட வரலாற்று துரோகத்தினை தரவுகளோடும், ஆதாரங்களோடும், புள்ளிவிவரங்களோடும் இஸ்லாமிய சமூகத்திற்கே சுட்டிக் காட்டியவர் ரஜிந்தர் சச்சார்.
ரஜிந்தர் சச்சாருக்கு கொடுக்கப்பட்ட உச்சக்கட்ட மரியாதையாக பார்க்கப்படுவது சச்சார் கமிட்டியின் உறுப்பினராக இருந்த அபுசாலே ஷரீப் சொன்னது தான்
“Muslims have often told me that for them, Sachar is third after Allah and the Prophet in importance. They look upon him as the savior of their identity. I conveyed this to Sachar.”
தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகள் அன்னாரை கவுரவித்து, அஞ்சலி செலுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். என் டைம்லைனில் இருக்கும் இஸ்லாமிய நண்பர்கள் சச்சாரையும் இனி அபுல் கலாம் ஆசாத், காயிதே மில்லத் வரிசையில் உயர்த்திப் பிடித்து, இனி வரக்கூடிய எதிர்கால இஸ்லாமிய சமூகத்திற்கு சொல்லிக் கொடுப்பார்கள் என்று மனதார விழைகிறேன்.
வாழ்ந்தால் எப்படி வாழ வேண்டும் என்பதை மேற்கொள்கள் காட்டாமல், உரைகள் நிகழ்த்தாமல், பிரசங்கங்கள் கொடுக்காமல் ரஜிந்தர் சச்சார் மாதிரியான மனிதர்கள் சொல்லாமலேயே சொல்லிக் கொடுத்து விட்டு போய் விடுகிறார்கள்.
Bow with Respect and Rest in Peace Sir!