பெரியாரைத் தோற்கடிக்கவே முடியாது! முடியாது! முடியாது!: தொ. பரமசிவன் நேர்காணல்

தமிழ்நாட்டின் பண்பாட்டு மானுடவியல் துறையின் பேராசான் தொ.பரமசிவன் அவர்களுக்கு சமீபத்தில் நியுஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மகுடம் விருது வழங்கி கவுரவித்தது. அன்று தொ.ப அவர்களுடன் அவரது இல்லத்தில் இருந்து விருது வழங்கும் நிகழ்வை நேரலையில் பார்த்துக் கொண்டே நானும் எனது இணையர் ஆனந்தியும் பேசிக் கொண்டிருந்தோம். தொ.ப அன்றாடம் தொலைக்காட்சி விவாதங்களைப் பார்த்து வருகிறார். இதன் மூலம் சமகால அரசியலில் எல்லாவற்றுக்கும் ஆழமான பார்வையைக் கொண்டிருக்கிறார். மாட்டிறைச்சி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல், நீட் தேர்வு, இயக்குனர் ரஞ்சித், பினராயி விஜயன், பிஜேபியின் மொழி அரசியல், பெரியாரின் இன்றைய தேவை, நாட்டார் வழக்காற்றியல், ஆகமங்கள் என்று நீண்ட உரையாடல் இது. பெரியாரைத் தோற்கடிக்கவே முடியாது முடியாது முடியாது என்று தீர்க்கமாகவும் ஆழமாகவும் பறைசாற்றுகிறார். இனி தொ.பவுடன்…

தயாளன்: பினராயி விஜயன் ஒரு கம்யுனிஸ்ட்காரர். அவர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகணும்னு ஒரு சட்டம் கொண்டு வர்றாரு. தலித்துகள் 6 பேர், பிற்படுத்தப்பட்டோர் 26 பேரை பாடசாலைக்குக் கூப்பிட்டு இன்னிக்கு அவங்க அர்ச்சகரா பூஜை பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா அவங்க மலையாள மொழில அர்ச்சனை பண்ணாம சமஸ்கிருத மொழிலதான் அர்ச்சனை பண்றாங்க. மலையாள மொழில அர்ச்சனை பண்றதா? சமஸ்கிருத மொழில அர்ச்சனை பண்றதா? பெரியாரிஸ்டா உங்க கருத்து என்ன?

தொ.ப: மலையாள மொழிலதான் பண்ணனும். ஏன்னா மதத்தின் வழியாத்தான் ஆதிக்கம் ஊடுருவுது. வடமொழி வழியாதான் சமஸ்கிருத ஆதிக்கம் ஊடுருவுது. எனவே, மலையாள மொழிலதான் அர்ச்சனை பண்ணனும். கடவுளுக்கு மலையாள மொழி தெரியாதா? மலையாள மொழி தெரியலைனா அவர் எப்படி மலையாளிகளோட கடவுளா இருக்க முடியும்? மறுபடியும் பிராமணியம் ஜெயிக்குதுன்னுதான் பொருள். அதனால பெரிய அளவுல வெற்றிகண்டதா நாம சொல்ல முடியாது. பார்ப்பனியம் ஜெயிக்குதுன்னுதான் அர்த்தம். ஆனாலும் பேசறதும், எழுதறதும்னு வந்துட்டோம்ல. ஒரு Step Forward தான். ஒரு அடி முன்னேற்றம்தான்.

தயாளன்: இதை பார்ப்பனியத்திற்கு ஏற்பட்ட சறுக்கல்னு சொல்லலாமா? அல்லது அவைதீக மரபுக்கு கிடைத்த பலம்னு சொல்லலாமா?

தொ.ப: பலம்தான். உடனே, எல்லாம் வந்திராது. 60 வருஷமா பெரியார் எவ்வளவு பொறுமையா பத்திரிக்கை நடத்தினாரு? மேடைக்கு மேடை பேசிட்டு வந்தாரு. மெல்ல மெல்லத்தான் வரும். எறும்பு ஊறக் கல்லும் தேயுங்கிற மாதிரி, பெரியார் என்ற எறும்பு ஊர்ந்து ஊர்ந்து தான் இந்த சாதிய ஒடுக்குமுறைங்கிற கல்லைத் தேச்சுது. பெரியார் மதத்தை விட சாதிதான் கொடுமையானதுன்னு கண்டிச்சாரு. அவர் தெளிவா சொன்னாரு. உங்கள் வேதம், புராணம் எல்லாம் சாதியின் பேரில் உள்ளது. நான் அவற்றை எதிர்க்கிறேன். உங்கள் கடவுள் சாதியின் பேரில் உள்ள கடவுள், நான் அதை நிராகரிக்கிறேன்.

உங்கள் கோயில் சாதியின் மேல் உள்ள கோயில், நான் அதை நிராகரிக்கிறேன். உங்களுடைய கலை இலக்கியங்கள் எல்லாம் சாதியை மேலிடுகின்றன. நான் அவற்றை நிராகரிக்கிறேன். உங்கள் சாதியின் பேரில் உள்ள எல்லாவற்றையும் நான் நிராகரிக்கின்ற பொழுதுதான் இவை எல்லாவற்றையும் நான் நிராகரிக்க வேண்டியதாகிறது. இன்னிக்கு பார்க்கிறோம், மதம் அழிஞ்சாலும் சாதி அழியாது போல இருக்கு.

தயாளன்: இந்துமதம் அழிஞ்சா சாதி அழிஞ்சிருமான்னுதான் பொதுவா கேட்க வேண்டியிருக்கு?

தொ.ப: சாதி அழியனும்னா இந்துமதம் அழியனும். ஆனால் அழியாது. சாதி தன்னைத்தானே எளிதாக மறு உற்பத்தி செய்து கொள்ளும். ஏன்னா இந்துமதத்தோட Strong Point அதுதான். மறுபடியும் மறுபடியும் மறு உற்பத்தி செய்து கொள்ளும். மதம் மாறினாலும் சாதியைக் காப்பாத்திறான்ல.

தயாளன்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகனுன்ற விஷயத்தை, ஒரு இடதுசாரி அரசாங்கம் செஞ்சிடுச்சு. ஆனா 50 ஆண்டுகாலமா தமிழ்நாட்டுல ஆட்சியில் உள்ள, பெரியாரின் வாரிசு என்று தன்னை சொல்லிக்கிற திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவங்க இதைச் செய்யவேயில்லையே?

தொ.ப: திராவிட இயக்கத்துக்கு தோல்விதான். நான் திராவிடக் கட்சிகளைக் கலைத்துவிடலாம்னு எழுதறேன்ல? இதுதான், திராவிடக் கட்சிகள் இந்த நாடாளுமன்ற ஜனநாகத்தினுடைய மோசமான பக்கங்கள்ல போய் விழுந்திடுச்சு. ஊழல்ல விழுந்திட்டது, அதனால அவங்களால செய்ய முடியல. காசு சேர்க்க ஆரம்பிச்ச உடனே, கொள்கையை தெருவில விட்டாங்க.

தயாளன்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகனுன்ற விசயத்துல ஆகமம்ணு ஒரு விசயத்தை சொல்றாங்க, ஆகமம்னா என்னய்யா? இந்து மதம், ஆகமம் இதற்கெல்லாம் என்ன பொருள்? ஆகம விதினா என்ன?

தொ.ப: “நான் இந்து அல்ல நீங்கள்”-னு நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கேன். இந்துமதம்ங்கிறது ஒரு Fraud. அதே மாதிரி ஆகமங்கிறது பிராமணர்கள் உருவாக்கின ஒரு Fraud. அது பிராமணர்களோட Text.

படம்: ஆர். ஆர். சீனிவாசன்

தயாளன்: சங்கராச்சாரியார் ஆகம விதிப்படி இருக்கிற கோயில்களுக்குத்தான் போறாரே?

தொ.ப: ஆமாம். அதுதான், அது பிராமணர் Text. சங்கராச்சாரியார். அப்படித்தான் சொல்றாரு, அப்படி சொன்னாதான் அவர் சங்கராச்சாரியார். ஆகம விதி எல்லாம் புனிதமானவையல்ல. காலத்துக்கு காலம் மாறிக்கிட்டே வர்றதுதான் ஆகமங்கள். ஆகமம்-ன்றது Code தான். Codeஐ காலத்துக்கு காலம் மாத்தலியா? Financial Code-ஐ மாத்தலியா? PF கிடையாதுன்னு சொல்லலியா? அதுமாதிரி Code-ஐ மாத்திட்டுப்போறது. ஆகமங்களை மாத்திட்டுப்போறது. ஆகமம்-ன்றதே ஒரு Fraud, வேதங்கள் எப்படி ஒரு Fraudஓ அதேமாதிரி ஆகமங்கிறது ஒரு Fraud.

தயாளன்: வழக்கமா நீங்க சொல்லிட்டு வர்ற இந்த கடவுள் அல்லது தெய்வம் இந்த இரண்டுக்குமான ஒரு இடைவெளி இருக்குல்ல, அதாவது கடவுளை முன்னிறுத்தறது மூலமா நாட்டார் தெய்வங்களை பின்னுக்குத் தள்ளற இந்த அரசியல் போக்குல, இப்போ நாட்டார் தெய்வங்கள் கோயிலுக்குள் கும்பாபிஷேகம் நடத்தறது, ஆர்எஸ்எஸ்காரங்க உள்ள புகுந்து வர்றது, கிராமப் பூசாரிகள் மாநாடு நடத்தறது, இதையெல்லாம் ஒரு வகையான நாட்டார் தெய்வங்களை உள்விழுங்குவதற்கான முயற்சிகள்ன்னு பார்க்கலாமா?

தொ.ப: நாட்டார் தெய்வங்களை ஆகம மதம் உள் விழுங்க முடியாது, முடியாது, முடியாது. ஏன்னா, ஆகம மதம் ரத்த பலி ஏற்குமா? பெண் சாமியார்களை ஆகம விதி ஏற்குமா? இதெல்லாம் ஏற்றால்தான் நாட்டார் தெய்வங்களை வரவு வெச்சதா அர்த்தம்.

தயாளன்: ஆனால் சில கோவில்கள்ல ரத்தபலியைக் கைவிடறாங்க, கும்பாபிஷேகம் நடத்தறாங்களே!

தொ.ப: தப்பு! ஒரு கோவில்ல சங்கராச்சார்யார் வந்து கும்பாபிஷேகம் நடத்தறதாலதான் ரத்தபலி வேண்டாம்னு கோயில் தர்மகர்த்தா சொல்லிட்டிருந்தாரு. அவரைத் தர்மகர்த்தா பதவில இருந்து நீக்கிட்டாங்க.

தயாளன்: தமிழகம் பூரா இருக்கிற கிராமங்கள்ல சுடலைமாடன் கோயில்லையும், கருப்பசாமி கோயில்லையும் இப்போ கும்பாபிஷேகம் நடக்குது.

தொ.ப: அதான், அது ஆபத்தானது. கருப்பசாமி கோயில்களிலேயும், சுடலைமாடன் கோயில்களிலும், அம்மன் கோயில்களிலும், கும்பாபிஷேகம் நடத்தறது ஆபத்தானது. அங்க கொடைதான் நடக்கும், கூத்து நடக்கும். கும்பாபிஷேகம் நடத்தும்போது பிராமணனுக்கு பொழப்பு ஓடும். அப்பவும் நாட்டார் தெய்வங்களை பிராமனைஸ் பண்ண முடியாது.

தயாளன்: ஒரு சாமி அல்லது தெய்வம் பிராமனைஸ் ஆகறதுக்கும், ஆகாததுக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிக்கறீங்க?

தொ.ப: நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைகளை முழுமையாக இழுத்துப் போடுவதற்கு ஆகம மதங்களால முடியாது. அதாவது மீனாட்சி அம்மன் கோயில்ல சாமியாடவிடுவானா? ஆடு பலி கொடுக்க விடுவானா? விடமாட்டான்ல. நாட்டார் தெய்வக் கோவில்ல பெண்ணுக்கு கிடைக்கிற மரியாதை கிடைக்குமா? நாட்டார் தெய்வக் கோயில்ல பெண் சாமியாடலாம். மீனாட்சி அம்மன் கோயில்ல பெண் சாமியாட முடியுமா? பெண் திருநீறு எடுத்து கொடுக்க முடியுமா? இது மாதிரி நிறைய விசயங்களை உள்ளிழுத்தாதான் நாட்டார் தெய்வங்களை விழுங்கியதா அர்த்தம். அது முடியாது. ஒரு எல்லைல வாமிட் பண்ணிடும். அதால செரிக்க முடியாது.

தயாளன்: இந்த Contextல மேல்மருவத்தூர் அடிகளாரை எப்படி பார்க்கறீங்க?

தொ.ப: அவர் ஓரளவுக்கு வெற்றிபெற்றாரு. Mensterual Termங்கிறது, உலகத்தின் மிகப்பழைய விசயம் அது. அதை உடைச்சாரு. அவருடைய வெற்றியின் ரகசியமே அதுதான். அதுக்குமேல அவரால போக முடியல. தோத்துப் போயிட்டார். தன்னையே தெய்வமா நிறுவுறார். அவரை வெச்சுகிட்டே அவர உலகத்தை படைச்சவருனு சொல்லிட்டிருக்காங்க. நான் கேட்டேன், எனக்கு ‘சீன்னு’ போச்சு! உலகத்தை படைச்சுட்டு தெய்வம் இப்படி வந்து உட்கார்ந்திருக்கான்னு கேட்டேன். நான்தான் தெய்வம்னு உட்கார்ந்திருக்காம், அது ஒப்பேறாது. அவரோட அந்த இயக்கம் போயிரும். இந்த சொத்துக்கள் இருக்கிறதால கொஞ்சகாலம் தாக்குபிடிக்கும்.

தயாளன்: தமிழ்தேசியம், திராவிட இயக்கத்துக்கு எதிரான விசயம் அல்லது திராவிட இயக்கம் தோத்துப் போச்சு, பெரியார் தமிழ்தேசியத்தோட எதிரியா இன்னிக்கு கட்டமைக்கப்படறாங்க. திராவிடம்னு அவர் சொன்னது வந்து நாலு ஸ்டேட்டும் சேர்த்து, அது இன்னிக்கு சாத்தியமில்லை. தமிழ்தேசியம்தான் சாத்தியம்னு சொல்றாங்களே?

தொ.ப: அதை பெரியாரே கைவிட்டுட்டாரே! அதைச் சொல்ல மாட்டாங்களே! 1938-லேயே தமிழ்நாடு தமிழர்க்கே என்ற கோஷத்தை வெச்சிட்டார்ல. அப்படினா தமிழ் தேசியத்தை பெரியார் கையில எடுத்துடாருன்னுதான அர்த்தம். அதை பேசமாட்டாங்க! தமிழ்தேசியம், திராவிட தேசியத்துக்கு எதிரானது அல்ல. உள்ளடங்கியது தான்.

படம்: ஆர். ஆர். சீனிவாசன்

தயாளன்: இன்னிக்கு தலித் அரசியல் பேசறவங்க, அல்லது இனவெறி பேசறவங்க பொரியாரைத் திட்றத ஒரு ஃபேஷனா வெச்சிருக்காங்க. என்ன காரணம்?

தொ.ப: தங்களுக்கான அடையாளம் தேடுதலாக இருக்குமே, அதுதான். பெரியாரை வையறுதுலதான் தங்களுக்குள்ள அடையாளம் இருக்குனு இவங்க நினைக்கிறாங்க. இவங்க தோத்துப்போவாங்க. ஏன்னா, பெரியார் வந்து வெறும் சொல்வீரர் அல்ல, செயல்வீரர், சொன்னபடியே வாழ்ந்து காட்டியவர். இவர்களால் பெரியாரை வெல்லவே முடியாது, முடியாது, முடியாது.

தயாளன்: பெரியார் தமிழ் மரபு சார்ந்த விசயங்களை, தமிழோட அறிவு நுட்பங்களை மழுங்கடிச்சிட்டாரு. அது, கட்டிட கலையா இருக்கட்டும், மருத்துவமா இருக்கட்டும், எல்லாத்தையுமே அவர் திட்டிட்டாரு. ஆங்கில மருத்துவம்தான் சரின்னு சொல்றாரு. ஒரு கட்டத்துல, தமிழ் நாட்டு மருத்துவமெல்லாம் குப்பைல தூக்கி எரிச்சுப்போடனும்னு சொல்றாரு, இதெல்லாம் தமிழ் அறிவு வளம் குறித்து பெரியார் பெரிய அளவுல கணக்குல எடுத்துக்கலன்னு சொல்றாங்களே.

தொ.ப: அது பெரியாருடைய சறுக்கல்தான். இல்லைனு சொல்லமுடியாது. இன்னிக்கு சித்த மருத்துவத்தை அறிவியல்பூர்வமா நிறுவறாங்கள்ல, நிலவேம்பு குடிநீர் எடுக்கறாங்கல்ல, நிலவேம்பு குடிநீர்தான டெங்குக்கு மருந்தா இருக்குது. தமிழ் அறிவுலகம் அதை மீட்டெடுக்கும். தமிழ் கட்டடக்கலை, தமிழ் அறிவு எல்லாத்தையும் அது மீட்டெடுக்கும். பெரியார் ஒரு கட்டத்துல சொன்னாரு, உங்களுக்கெல்லாம் தமிழ் பேச முடியவில்லை என்றால், ஆங்கிலம் பேசுங்கள்னு கூட சொன்னாரு. அது ஒரு கோபத்துல ஒரு தந்தைக்கு வர்ற கோபத்துல, உருப்புடமாட்டான்னு பையன வைவாங்கள்ல, நீ உருப்புடுவியானு அப்பா வந்து பையன கேட்பாங்கள்ல, அது பையன் உருப்புடக்கூடாதுனு அவரோட நோக்கமில்ல. எல்லா அப்பாவும் அப்படித்தான் கேட்பாங்க, நீ உருப்புடமாட்டனுதான் சொல்லுவாங்க. அதுமாதிரிதான் பொரியாருடைய கோபமும்! ஒரு தந்தையுடைய கோபம், பொரியாருடைய கோபம். கோபத்தில் பேசுகிற பேச்சுக்கள் வேற. பெரியார் தமிழ்தேசியத்திற்கான எதிரியில்லை. தமிழ்நாடு தமிழர்க்கேங்கிற கோரிக்கையை 1938-ல் வெச்சதே பொரியார்தான்றப்போ, அவரைத் தமிழ் தேசியத்திற்கு எதிரின்னு எப்படிச் சொல்றீங்க?

தயாளன்: ஒரு பக்கம் பொரியாரைக் கன்னடர்னு சொல்லி திட்றாங்க, இன்னொரு பக்கம், அவரு தலித்துகளுக்காக ஒன்னும் பேசல, இடைநிலை சாதிகளுக்காக மட்டும்தான் பேசினார்னு ஒரு குற்றச்சாட்டை வைக்கிறாங்க. தீவிரமா தமிழ்தேசியம் பேசறவங்க முற்றிலுமா பெரியாரை நிராகாரித்துப் பேசறாங்க.

தொ.ப: பெரியார் BC விடுதலைய பேசல. அவர் மனித குல விடுதலைய பேசறாரு. அவருடைய பேச்சினால அதிக பயன்பெற்றவர்கள் BCதான். அதுக்காக பெரியார் BCக்காக பேசினாரு அப்படின்றது இல்ல. பெரியார் மனுசனுக்காக பேசினாரு. அவரு BCக்காகவும் பேசினாரு, SCக்காகவும் பேசினாரு. பிள்ளையார் சிலையை உடைச்சது யாருக்காக? BCக்காகவா? ஆலயங்களுக்குள்ள முழுமையா நுழையனும்னு சொன்னாரு. மனித குல விடுதலைய பேசினாரு. அதுல BC விடுதலையுமுண்டு, SC விடுதலையுமுண்டு. BCக்கள் முதல்ல கல்வியறிவு பெற்றதால அவங்க அத பயன்படுத்திக்கிட்டாங்க. அவங்கதான் அதிக பயன்பெற்றவர்கள்னு சொல்லுங்க. நான் ஒத்துக்கிறேன். அதுக்காக பெரியார் அவங்களுக்காக பேசினார்னு சொல்றது உண்மையில்லை.

தயாளன்: திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித், தமிழ்தேசியம் என்பது நடைமுறைக்கு சாத்தியமேயில்லை. தமிழர்கள் சாதியா பிரிஞ்சு கிடக்காங்க. சாதியா பிரிஞ்சு கிடக்கிறவரைக்கும் தமிழ் தேசியம் சாத்தியமில்லை, தமிழ் தேசியம் பேசறதெல்லாம் சுத்த அறிவுகெட்டத்தனம்னு சொல்றாரு. தமிழ்தேசியம் வளரனும்னா சாதி ஒழியனுங்கிறது முன் நிபந்தனையா? நீங்க எப்படி பார்க்கறீங்க?

தொ.ப: முன் நிபந்தனைனு சொல்ல முடியாது. முன் நிபந்தனையில்லை, நிபந்தனை, பக்க நிபந்தனை. Side By sideஆக சாதி ஒழியணும், தமிழ் தேசியம் வளரணும். இது ஒழிஞ்ச பிறகு அது வளர்றதும், அது வளர்ந்த பிறகு இது ஒழியறதும், அப்படிங்கிறது சாத்தியமில்லை. பிறப்பிற்கு முன்னாலேயே அவனுடைய சாதி, அவனோட இருக்கு. ஒருவன் பிறக்கிறதுக்கு முன்னாலேயே அவன் தோன்றின சாதிய பச்ச குத்திக்கிறோம். இனிமே அந்த பச்சைய ஒழிக்கணும். சாதி ஒழிப்பு அவ்வளவு எளிதான விசயமல்ல. அதனாலதான் பொரியார் சாதியதான் ரொம்ப கடுமையான எதிரியா பார்த்தாரு. மதத்தைப் பார்க்கலை. ஏன்னா மதம் மாற முடியும், சாதி மாற முடியுமா? இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மூன்றுமுறை மதம் மாறலாம். நீங்க ஒரு தடவை கூட சாதி மாற முடியாது. அதனால மதத்தை விட கொடுமையான எதிரி வந்து சாதிதான். அதனால சாதி ஒழிப்பு இல்லாம தமிழ்தேசியம் இல்லேங்கிறத நான் ஒத்துக்கறேன்.

தயாளன்: ஒரு தடவை நீங்க பேசும்போது சாதிய ஒழிக்கிறதை விட, சாதியை கரைக்கலாம்னு சொன்னீங்க, சாதியை கரைக்கிறதுனா என்ன? ஒழிக்கிறதுனா என்ன?

தொ.ப: ஒழிக்கிறதுங்கிறது, சாதி இல்லை அப்படிங்கிறது. கரைக்கிறதுங்கிறது சாதி மறுப்பு திருமணங்களை ஊக்கப்படுத்தறது. சாதிமறுப்பு திருமணம் செஞ்ச 2 குடும்பங்கள், திருமணம் பண்ணிக்கிச்சுனா பொறக்குற குழந்தைக்கு எந்த சாதி, நாலு சாதில எந்த சாதிய நீங்க அடையாளப் படுத்துவீங்கக? இசுலாமியர்கள்கிட்ட சாதி கரைந்து போனது. கிறித்தவம் சாதியை தக்க வெச்சுக்கிச்சு. சாதி கிறித்தவத்துல அப்படியே இருக்கு. நாடார், நாடார் கிறித்துவாகத்தான் இருக்கிறார். ஆனால் இசுலாத்துல அப்படி இல்லை. அவங்க எந்த சாதியிலே இருந்து மதம் மாறினாங்களோ அந்த சாதி அடையாளம் அவங்ககிட்ட இல்ல. சாதி இசுலாத்துல கரைஞ்சு போச்சுல்ல. எந்த சாதியில இருந்து இசுலாமா ஆனன்னு கேட்டா அவங்க என்ன பதில் சொல்வாங்க? தெரியாது! கிடையாது! அதைத்தான் நான் சாதி கரைப்பு என்கிறேன். இசுலாம் சாதியை கரைக்கிறது. கிறித்தவம் சாதியை தக்க வைத்துக் கொள்கிறது. இரண்டுக்குமான வேறுபாட புடிச்சா புரிஞ்சுக்கலாம்.

தயாளன்: ஆனா அம்பேத்கர் இந்து மதத்தைவிட்டு வெளியேறி பௌத்த மதத்துக்கு போனாரு, அதனால சாதி இறுக்கம் தளர்ந்திருக்கா? கரைஞ்சிருக்கா?

தொ.ப: எங்க கரைஞ்சிருக்கு? நியோ புத்திஸ்ட்டுனு தனியா Scholarship formல ஒரு Column இருக்குல்ல? அவங்க தனி சாதியா இருக்காங்க, நியோ புத்திஸ்ட்டுகள் அதாவது, புதிய பௌத்தர்கள்னு தனி சாதியா இருக்காங்கல்ல.

தயாளன்: அப்போ அம்பேத்கருடைய அந்த முயற்சி தோல்விதானா?

தொ.ப: ஆம். தோல்விதான்! தெளிவான தோல்வி.

தயாளன்: பெரியார் அம்பேத்கரோட இந்த மதமாற்றம் பத்தி ஏதாவது பேசியிருக்காரா?

தொ.ப: ஆமாம்! நான் வரலைன்றார்லா? பெரியாரை அம்பேத்கார் வாங்க பௌத்தத்திற்கு போவோம்னு கூப்பிட்டார். ஆனா, பெரியார், இங்க இருந்துக்கிட்டேதான் போராடுவேன், நான் வரமாட்டேன்னு சொல்லிட்டாரு.

தயாளன்: இந்துமத சீர்திருத்தத்துக்குதான் பெரியார் ஒரு வகைல துணை புரிஞ்சிருக்காரு. இந்து மதத்துல சாதிய கட்டுமானத்தை தகர்த்தறதுல ஒரு சீர்திருத்தவாதியாத்தான் அவரைப் பார்க்கிறோம். நம்ம நினைக்கிற மாதிரி ஒரு பெரிய புரட்சியாளர் இல்லை அப்படினு வலதுசாரிகள் ஒரு கருத்தை வைக்கிறாங்க.

தொ.ப: அவர் புரட்சியாளரா இல்லாம இருந்துட்டு போறாரு, என்ன கெட்டு போச்சு? அவர் நான் புரட்சியாளன்னு எப்பவாவது சொன்னாரா? நான் வேலை செய்றேன், அவ்வளவுதான்னு சொன்னாரு. அவர் புரட்சியாளரா இல்லாம இருந்துட்டுப் போறாரு. பெரியர் புரட்சியாளர் இல்லைனு எல்லா சிலையிலேயும் எழுதிட்டுப் போங்க. என்ன கெட்டுப்போச்சு? தமிழ்நாட்டுல கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேராவது சாதி மறுப்பு திருமணம் பண்ணிட்டாங்கள்ல? வெற்றிகரமா இருக்காங்கள்ல? அது யார் கொடுத்த தைரியம்?.

படம்: ஆர். ஆர். சீனிவாசன்

தயாளன்: ஒரு இடத்துல நீங்க பேசும்போது பெரியாரை திட்டுறது இந்த கல்வியமைப்பு கொண்டுவந்த கொண்டுவந்த ஒரு வக்கிரம்னு சொல்றீங்க? கல்வி அமைப்பு நல்லாதான இருக்கு? அது கல்வியைக் கொடுத்திருக்கு, பெரியரிய சிந்தனையை வக்கிரமா பார்க்கிறதுனா என்ன? எதனால அப்படிச் சொல்றீங்க?

தொ.ப: கல்வி அமைப்பு எதையும் கேள்வி கேட்காம அப்படியே விட்டிருச்சு. சாதிய, சாதிய கட்டமைப்பு, சாதிய உள்முரண்பாடு எல்லாத்தையும் இந்த கல்வி அமைப்பு அப்படியே ஒத்துக்கிட்டதாலதான் இந்தச் சிக்கலே வருது. இந்த கேள்வியே அங்கதான் பிறக்குது. இந்த கல்வி அமைப்பு செஞ்ச வக்கிரம்தான் சாதி மாநாடுகள், சாதிச் சங்கம், கல்விக் கூடங்கள்ல சாதி இப்படி நிறைய. கயிறு கட்டுறாங்க தெரியும்ல இப்ப? நெல்லை மாவட்டத்துல பையன் பள்ளிக்கூடத்துக்கு போறபோது, ஏழாங்கிளாஸ், எட்டாங்கிளாஸ் பையன் கையில் சிகப்பு கயிறு அல்லது பச்சை கயிறு கட்டியிருக்கான். சிகப்பு கயிறு கட்டினா தேவர், பச்சை கயிறு கட்டினால் SC. பள்ளிக்கூடத்துல சிகப்பு கயிறு கட்டின பயலுகள்லாம் ஒரு செட். இது இந்த கல்வி முறையின் வக்கிரம்தான? நான் படிக்கிறபோது இப்படி இல்லையே.

தயாளன்: இவ்வளவு காலம் பெரியார் செஞ்ச வேலைகளுக்கு இது எதிரா மாறுதே?

தொ.ப: நிச்சயமா, ஆனால் ரொம்ப நாள் நீடிக்காது. இது மோதி, அழிஞ்சு, நிறைய இழந்த பிறகுதான் அறிவு வரும். இழப்பிற்கு பின்னால வர்ற அறிவு அழுத்தமானதா இருக்கும். ஆனால் இழக்க வேண்டாமேனு நாம சொல்றோம். அவ்வளவுதான்.

தயாளன்: ஆனால், இழப்பு தவிர்க்க முடியாதுன்னு சொல்றீங்களா?

தொ.ப: ஆமாம்!

தயாளன்: இப்போ மத்திய பாஜக வலதுசாரி அரசு அடித்தடுத்து மாநில உரிமைகளை பறிக்கிற மாதிரி நிறைய திட்டத்தை கொண்டு வர்றாங்க. GST கொண்டு வர்றாங்க, மாநில அரசுக்கு வரிபோடற உரிமையில்லை. அப்புறம், கல்வியில, உயர்கல்வியில மருத்துவத்துல NEETனு ஒரு தேர்வு கொண்டு வந்தாங்க. NEET தேர்வு இட ஒதுக்கீட்டுக்கு நேர் எதிரா வேற ஒரு வடிவத்துல இருக்கு. எந்த நாட்டுல இருக்கிறவனும் தமிழ்நாடு மருத்துவ கல்லூரிகளுக்கு வரலாம். அனிதான்னு ஒரு பொண்ணு இறந்து போச்சு. அனிதா இறந்து போனதுக்கு காரணமான நீட் திட்டத்தை ஒரு தலித் கட்சியோட தலைவரே வரவேற்கிறார். கிருஷ்ணசாமி வரவேற்கிறார். இத எப்படி பார்க்கறீங்க?

தொ.ப: டக்டர் கிருஷ்ணசாமி முட்டாள்தனமா பேசறார். ரிசர்வேசன் வேண்டாங்கிறார் அந்த ஆளு . ரிசர்வேசன் வேண்டாம், யாரு கேட்டா அப்படிங்கிறார். ஆனால் இந்திய தேசியம் உடையுது. உடைஞ்சுகிட்டே இருக்கு. எப்போ வேகமா உடையும்னு சொல்லமுடியாது.

தயாளன்: டாக்டர். கிருஷ்ணசாமி பள்ளர்கள் தலித்துக்களே இல்லை. பட்டியல் சாதியிலிருந்து வெளியேத்தனும்னு சொல்றாரு.

தொ.ப : இதுதான் வீழ்ச்சிக்கு முதல் அடையாளம். விளங்காம போறதுக்குதான்.

தயாளன்: இன்னிக்கு பெரியாரும் அம்பேத்கரும் இருந்தா, ஆர். எஸ். எஸ்ல சேர்ந்து இருப்பாங்கன்னு டாக்டர். கிருஷ்ணசாமி சொல்றாரே?

தொ.ப : ஹா…. ஹா…..ஹா….. சிரிச்சுக்கலாம். வேற என்ன செய்ய? அவர் பிஜேபி கவர்ன்மெண்ட் கிட்ட எதையோ எதிர்பார்க்கிறாரு. இவருக்கு மட்டும்தான் பெரியாரைத் தெரியுமா? அம்பேத்கரைத் தெரியுமா? கிருஷ்ணசாமி ரொம்ப ஆபத்தான ஆளு. சுய நலத்துக்காக சமூக அமைதியைக் கெடுத்துருவாரு. இதை அவர் கான்சியஸா செய்யுறார்.

தயாளன்: நீட் தேர்வைப் பத்தி என்ன நினைக்ககிறீங்க? அனிதான்னு ஒரு பொண்ணு 198 மார்க் எடுத்தும் சீட் கிடைக்காம இறந்து போயிருக்கு. அது தலித்களோட பிரச்சனை இல்ல, மத்த சாதிகளோட பிரச்சனை. இதுவே ஒரு தலித் பொண்ணு இறந்து போனா, தலித் மரணங்ககள் நிகழும் போது வராத இவங்கள்லாம் மார்க் விசயத்துக்கு மட்டும் போராடறாங்க, தமிழர்கள் தலித் இறந்து போனா வர்றதில்ல அப்படின்னு சொல்றாங்களே?

தொ.ப: அது வந்து திராவிட திராவிடக் கட்சிகளுடைய துரோகம். அனிதாவுக்கு மட்டுமா எல்லா சாதிக்காரனும் வரல? திண்ணியத்துல மலம் தின்ன வச்சானே அப்ப மட்டும் எல்லா சாதிக்காரனும் வந்தானா? வரலேல்ல? திராவிட கட்சிகளுடைய போக்கு வேறு, திராவிட இயக்கங்களுடைய போக்கு வேற. மாநில உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமா பறிச்சது, ஏக இந்தியாங்கிறதுதான் பிஜேபியோட இலக்கு. அதைத்தான் அது செஞ்சிட்டிருக்கு, அது நிக்காது, இந்தியா உடைஞ்சிடும்.

தயாளன்: இந்தியா உடையறது மூலமா சாதி கட்டுமானத்துல ஏதாவது தளர்ச்சி ஏற்படறதுக்கு வாய்ப்பு இருக்கா? ஆமான்னா எப்படி ஏற்படும்?

தொ.ப: ஆமாம், இந்த சாதிய கட்டுமானத்தை பாதுகாக்கிறதே இந்திய தேசியம்தான். எனவே இந்திய தேசியம் உடையும் போது சாதியக் கட்டுமானமும் உடையும்.

தயாளன்: இந்திய தேசியம் உடைஞ்சு, அதனால தமிழ் தேசியம் உருவாகும்னு ஒரு கருத்து உருவாவதற்கான அடிப்படையில, சாதி ஒழிப்புதான் அடிப்படையா இருக்கணும்னு பெரியார் நினைச்சாரா?

தொ.ப: ஆமாம், ஆமாம் பெரியார் நினைச்சதுதான் சரி. இன்னிக்கும் அததான் நாம பார்க்கிறோம். கர்னாடக முதல்வர், இந்தி வேணாம்னு மத்திய அரசுக்கு நான் கடிதம் எழுதப் போறேங்கிறாரு. தமிழ்நாடும், கேரளாவும் ஹிந்தி வேணாம்னு சொல்றப்போ ஏன் கர்நாடகம் சொல்லக் கூடாது அப்படிங்கிறார். இப்ப இந்தி எதிர்ப்பு எல்லா மாநிலங்கள்லேயும் வலுக்குது. அதுதான் இந்திய தேசியத்துக்கான முதல் சவால்.

தயாளன்: இந்து மதத்தோட ஒரு பிரிவான லிங்காயத்துக்கள் நாங்கள் இந்துக்கள் அல்ல, நாங்க தனிமதம்னு சொல்றாங்க, போராட ஆரம்பிச்சிட்டாங்க.

தொ.ப: அதுவே, இந்துமதத்தினுடைய உடைவுதான். அதாவது மதம் பெரிசில்ல, ஜாதி பெரிசுங்கறான். அப்படித்தான? சுருக்கமாகச் சொல்லப்போனால் லிங்க்யாத்துங்கிறது ஜாதி. சைவங்ககிறது மதம், எங்களுக்கு மதம் வேண்டாம் ஜாதி வேணுங்கிறான். குமரி மாவட்டத்துல கத்தோலிக்க கிறித்தவ நாடார் சங்கம்னு வெச்சிருப்பாங்க. கத்தோலிக்கனாகவும் இருக்கனும், கிறித்தவனாகவும் இருக்கனும், நாடாராகவும் இருக்கனும். இந்த மூன்றும் சேர்த்து சங்கம் வெச்சிருக்கான். குமரி மாவட்டத்துல நிறைய ஊர்கள்ல கத்தோலிக்க கிறித்தவ நாடார் சங்கம்-னு இருக்கு. கத்தோலிக்க கிறித்தவ நாடார் ஆசிரியர் சங்கம்னு ஒன்னு பாளையங்கோட்டையில இருக்கு. ஆசிரியனாகவும் இருக்கனும், கிறித்தவனாகவும் இருக்கனும், நாடாராகவும் இருக்கனும், கத்தோலிக்கனாகவும் இருக்கனும். சாதி காப்பாத்தப்படுதல்தான் இதெல்லாம்.

தயாளன்: லிங்காயத்தோட கோரிக்கை வந்து புதுசா வந்திருக்கா? இதமாதிரி தமிழ்நாட்டுல வேற கோரிக்கைகள் வரவாய்ப்பு இருக்கா? அப்புறம் இந்துங்கற விஷயத்துக்கு அடிப்படை கோட்பாடென்ன?

தொ.ப: தமிழ்நாட்டில் நடந்திருக்கு, ஆனால் இந்த மாதிரி பிரபலமாகவும், அழுத்தமாகவும் நடக்கல, கல்வித்துறைல நடந்திருக்கு. கல்வி நிறுவனங்கள் தரப்புல நடந்திருக்கு. நாங்க இந்துமதத்துல தனி ஜாதி, நாங்க மைனாரிட்டி, மைனாரிட்டி ஸ்டேட்டசை வாங்கினா நிறைய லாபமிருக்கு, அதுக்காக, அதை வாங்கறதுக்காக நடந்திருக்கு.

தயாளன்: நீட் மாதிரியான சட்டங்கள் சமூக நீதிக்கு எதிரா இருக்கு?

தொ.ப : இந்திய தேசியம் இறுக்கிப் பிடிக்குது. ஆனா கட்டவிழ்த்து விட்டு போயிரும். மாட்டிறைச்சி தொடர்பா பினராயி விஜயன் கேட்டார். மலையாளிகள் என்ன சாப்பிடனும்னு டெல்லியும் நாக்பூரும் முடிவு பண்ண முடியாதுன்னு சொன்னாருல்ல. அதுதான் இதுக்கும்.

தயாளன்: Neet தேர்வு வந்தா, தகுதி அடிப்படைல நல்ல மார்க் எடுக்கறவங்க வரப்போறாங்க? இத ஏன் எதிர்க்கனும்?

தொ.ப: இந்த நல்ல மார்க்குங்கிறதே ஒரு பொய். 36 ஆண்டுகள் ஆசிரியரா இருந்திருக்கிறேன், நான் சொல்றேன், நல்ல மார்க்ங்கிறதே ஒரு பொய். இதை நான்தான் சொல்ல முடியும். பெற்றோர்கள் இந்த மார்க்க நம்பி ஏமாறாங்க. இந்த கல்வி முறையினுடைய அடிப்படை கட்டுமானமே தப்பு. அப்துல்கலாம் என்ன மார்க் எடுத்தாரு, School First வந்தாரா? District First வந்தாரா? என்ன வந்தாரு? கருணாநிதி என்ன வந்தாரு? எம்.ஜி.ஆர் என்ன வந்தாரு? காமராஜர் என்ன வந்தாரு? மார்க் விசயமே பொய். மார்க்தான் தகுதின்னு நினைக்கிற மூடத்தனம் அது. கல்வி உலக மூடத்தனம் அது. இதை வேற யாரும் சொல்ல முடியாது. நான் ஆசிரியர்ங்கிறதால நான்தான் சொல்ல முடியும், அழுத்தமா சொல்ல முடியும். ஒரு 36 ஆண்டுகாலம் ஆசிரியரா வேலைபார்த்த பிறகு சொல்றேன், மார்க்கே தகுதிங்கிறது மூடத்தனம். Brilliant Student மார்க் எடுக்க மாட்டான்.

தயாளன்: இப்போ எல்லாத்துக்கும் ஒரு பொதுவான நுழைவுத்தேர்வுக்குள்ள கொண்டு வந்து சமத்துவமா நடத்துறது தப்பில்லையா?

தொ.ப: சார் எல்லாம் சமங்கிறது, சமத்துவம்-ங்கிறது அப்படியல்ல. ஆனைக்கும் 4 படி, பூனைக்கும் 4 படிங்கிறது சமத்துவமா? அது மார்க்சிய தத்துவம். ஆனைக்கும் 4 உருப்படி பூனைக்கும் 4 உருப்படிங்கிறது சமத்துவமா? அது மார்க்சிய சமத்துவம். ஆனைக்கும் 4 உருப்படி, பூனைக்கும் 4 உருப்படினு இருந்தா பூனை வயிறு வீங்கி செத்துப்போகும், ஆனை பட்டினில செத்துப்போகும். எப்படியோ ரெண்டும் செத்துப்போகும். அப்போ சமத்துவம் அது அல்ல. அது அது உழைப்புக்கு தகுந்து அது அது உணவு, அதான் சமத்துவம், இல்லையா? யானை மரம் இழுக்கும், யானைக்கு அதுக்கு தகுந்த மாதிரி உணவு கொடுக்கணும். பூனை ஒரு வேலையும் செய்யாது, பூனை அதுக்கு தகுந்தாப்புல எளிது உண்ணும், அதுக்கு தகுந்தாப்புல உணவு கொடுக்கிறோம். சமத்துவங்கிறத தப்பா புரிஞ்சுக்க கூடாது. “யானைக்கு யானை அளவு உணவு, பூனைக்கு பூனையளவு உணவு” – இதுதான் சமத்துவம்.

தயாளன்: 36 ஆண்டுகால ஆசிரியர் பணி, அப்புறம் ஒரு பெரியாரிஸ்ட்டா நீங்க இருக்கிறீங்க, இந்த கல்வி முறை எப்படியிருந்தா நல்லதுனு நினைக்கறீங்க? உங்ககிட்ட ஒரு பாடத்திட்டத்த உருவாக்கனும்னாலோ, கல்வி முறையை புதுசா உருவாக்கச் சொன்னாலோ, நீங்க எப்படி விதமான கல்வி முறையை உருவாக்குவீங்க?

தொ.ப: கேள்வி கேட்கக்கூடிய உணர்வை, எல்லாவற்றையும் மறுத்துப்பார்க்கிற, நிராகாரிக்கக் கூடிய உணவை ஊட்டணும். இருக்கக்கூடிய சமூக அமைப்பை, கேள்வி கேட்கக்கூடிய கல்வி முறை உருவாகனும். எல்லாவற்றையும் கேள்வி கேட்கச் சொன்னார் பெரியார். எல்லாத்தையும் கேள்வி கேட்கிற ஒரு கல்வி முறை அடிப்படையிலிருந்தே உருவாகனும். அப்படி வந்தா நல்லாயிருக்கும்.

தயாளன்: திராவிடக் கட்சிகளையெல்லாம் கலைக்கனும்னு சொல்றீங்க, ஏன் அவ்வளவு கோபம் உங்களுக்கு?

தொ.ப: இவங்க அவ்வளவு பேரும் ஒழுக்கம் இல்லாதவங்களா போயி, அதனாலேயே கட்சியையும், கொள்கையையும் நீர்த்துப் போக வெச்சிட்டாங்க. ஒழுக்கம் இல்லாத இவங்களை வெச்சு கட்சி நடத்த முடியாது. அதனால கலைக்கனும்னு சொல்றேன்.

தயாளன்: காந்தி காங்கிரஸைக் கலைக்கனும்னு சொன்னமாதிரியா?

தொ.ப: ஆமாம்!

தயாளன்: இவங்க பெரியாரை கைவிட்டுட்டாங்களா?

தொ.ப: ஆமாம், பெரியாரைக் கைவிட்டு ரொம்ப காலமாச்சு.

தயாளன்: அதனால பெரியாரியம் தோத்துப்போயிருமா?

தொ.ப: பெரியாரியம் தோத்துப் போகாது. இவங்க தோத்துப்போவாங்க. இவங்க கட்சிகள் தோத்துப்போச்சு.

தயாளன்: ஒரு பக்கம் அமித்ஷா நாடார்கள் மத்தியில வேலை செய்யுறார். இன்னொரு பக்கம் பிஜேபி பள்ளர்கள் மத்தியில தொடர்ச்சியா வேலை செய்யுறாங்க?

தொ.ப: ஆமாம். வேலை செய்யுறாங்க. ஆனா உறுதியா ஜெயிக்க முடியாது. ஏன்னா சாதியத் தாண்டி போக முடியாதுல்ல. சாதி தாண்டி மதத்துக்கு போக வேண்டி இருக்கு. அது தலித்துக்கு இல்ல. நாடாருக்கு சாதிதான் முக்கியம். மதம் இல்ல. கன்னியாகுமரி மாவட்டத்தில அந்தோணிமுத்து நாடாரும், அருணாசல நாடாரும் தினந்தினம் சம்பந்தம் பண்ணிக்கிறாங்க. பத்து கல்யாண பத்திரிகையில அஞ்சு கல்யாணப் பத்திரிகையில இந்து கிறிஸ்தவ கல்யாணங்கள பாக்கலாம். அவன எப்படி ஆர் எஸ் எஸ்ல சேப்பீங்க? அங்கே பொன். ராதா ஜெயிக்கிறார்னா அது கிறிஸ்தவ எதிர்ப்பு ஓட்டுதான். அது கிறிஸ்தவ மிஷினரிகள் மீதான எதிர்ப்பு ஓட்டுதான் அவர ஜெயிக்க வைக்குது.

தயாளன்: தமிழ்நாட்டுக்குள்ள பிஜேபி, ஆட்சி அதிகாரத்த கைப்பற்றதுக்கும், செல்வாக்கு உருவாக்கவும் எவ்வளவோ முயற்சிகள் பண்றாங்களே?

தொ.ப: எவ்வளவோ முயற்சிகள் பண்றாங்க, நானும் ஒத்துக்கறேன். அவங்க ஒரு போதும் வெற்றிபெற மாட்டாங்கங்கிறத நீங்க ஒத்துக்கங்க. ஏன்னா, நான் முன்னால சொன்ன மாதிரிதான், பிஜேபிக்கு மதம் முக்கியம். தமிழனுக்கு சாதி முக்கியம். தமிழன் மதத்தை விட ரெடி. ஜாதியை விட மாட்டான். மொத்தமா மதம் மாறினா, மீனாட்சிபுரம் பார்த்தோம்ல! ஒரு ஆள் மதம் மாறினா சரின்றலாம், மொத்தமா மதம் மாறினா, ஒரு கிராமம் மதம் மாறினா தலித் முஸ்லீம் அப்படிங்கான். சாதிய விட மாட்டான், அதனால பிஜேபி வெற்றிபெற முடியாது. அவங்க பயங்கரமா முயற்சி பண்றாங்கன்றது உண்மை.

தயாளன்: இன்னிக்கு மறைமுகமா தமிழ்நாட்டையே அவங்கதான ஆண்டுகிட்டிருக்காங்க?

தொ.ப: அது உண்மை! குருமூர்த்திதான் ஆண்டுகிட்டிருக்கான். அவங்க எப்பவும் கிங்ஆக இருக்கிறத விட கிங் மேக்கராக இருப்பதைத்தான் விரும்புவாங்க. ராஜாஜியே அப்படித்தான் இருந்தாரு. கிங் மேக்கராக இருந்தால் ஆபத்தில்லை அந்த fileல கையெழுத்து நான் போடலைல, எவனோ போட்டான், எவனோ மாட்டிக்கிட்டான், போன்னுட்டு போயிரலாம்.

தயாளன்: பெரியார் பார்ப்பனியத்து மேல, கடுமையா தாக்குதல் நடத்தறாரு, இந்துத்துவத்த தொடர்ந்து தாக்கறாரு. ஆனால் தனிமனித அளவுல எந்த பார்ப்பனரையும் அவர் வெறுப்பா நடத்தினது இல்ல. ஆனால் இன்னிக்கு வர்ற, பெரியாரை பின்பற்ற நினைக்கிறவங்க தனிமனித வெறுப்பை சுமந்து, இது தான் பெரியாரியம்னு பேசறாங்க?

தொ.ப: ஒன்பது ஆண்டுகளாக என்னுடைய அறை நண்பரா இருந்தவர் ஒரு பிராமணர். திருமணம் ஆகாத பிராமணர் சுத்த பிராமணர், அதாவது ராஜாஜி பக்தன். நாங்க 9 வருஷம் ஒன்னா இருந்தோம். உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். சாகப்போறப்போ, அவரு கட்டில்ல இருந்து விழறாரு, அவருக்கு தெரிஞ்சு போச்சு, தான் செத்துப்போவோம்னு. புரொபசருக்கு சொல்லுங்கோ, அப்படின்னு சொல்லிட்டு செத்துப் போனாரு. அவர் கடைசியா சொன்ன வார்த்தை அதுதான். அவ்வளவு தூரத்துக்கு நாங்க நண்பர்களாயிருருந்தோம். என்னுடைய பெர்சனல் அனுபவம். ராத்திரி அப்படி சண்டை போடுவோம், காலைல எனக்கு முன்னாடி எந்திரிச்சு காபி வாங்கப் போயிருவாரு, எனக்கும் சேர்த்து. அது தனி நபர் சார்ந்த விஷயம். பெரியார் ஒருக்காலத்திலும் தனி மனித வெறுப்போட இருந்தவரில்லை. பெரியார் ராஜாஜி கூட நட்பாதான் கடைசி வரைக்கும் இருந்தாரே

தயாளன்: தனிமனித வெறுப்பு, வன்முறையா தாக்கறதெல்லாம் எதுவுமே இல்லையா? அவர் எந்தக் கோயிலையும் போய் இடிக்கவும் இல்ல. ஆனால், சாமி வேணும், சாமி இருக்குனு சொல்றவங்கதான் அடுத்தவங்க மசூதியையும், கோயிலையும் இடிக்கிறாங்க. இன்னிக்கு ஒரு விதமான வெறுப்பு அரசியல் வந்து கட்டமைக்கப்படுக்கப்படுது. அது பற்றி?

தொ.ப: வெறுப்பை சீக்கிரமா விதைக்கலாம். சீக்கிரமா அறுவடை பண்ணலாம். ஆனால் நிரந்தரமா அறுவடை பண்ணமுடியாது. இவரு மகா மோசமான ஆளுன்னு இவர் மேல ஒரு வெறுப்ப, முகம் தெரியாத ஒரு மனுஷன் மேல உண்டாக்கனும்னா எளிதில் உண்டாக்க முடியும். ஆனால் நிக்காது, அப்படித்தான். வெறுப்பு அரசியல்தான் பிஜேபி அரசியல்.

படம்: ஆர். ஆர். சீனிவாசன்

தயாளன்: மாட்டிறைச்சி கூடாதுங்கறாங்க, ஆனால் ஆடு கோழிய கொல்றது தப்பில்ல, மாட்டைக் கொன்னு சாப்பிடறதுதான் தப்புன்னு ஒரு திட்டத்த முன் வைக்கறாங்க. அப்புறம் பயங்கரமா தோத்துப்போறாங்க. இது என்ன காரணம், எதுக்காக மாட்டிறைச்சி, மாடு மட்டும் குறிப்பா செய்யறாங்க?

தொ.ப: அவங்க சொல்லுகிற இந்துத்துவ புனிதம் என்பது பசுவிலதான் இருக்கு. “பசுவே புனிதம்”னு அ.மார்க்ஸ் ஒரு சின்ன புத்தகம் எழுதியிருக்காரு. படிங்க.

தயாளன்: ஏன் குறிப்பா மாட்டு விசயத்தை மட்டும் கையில எடுக்கறாங்க?

தொ.ப: அதுதானே கோமாதா!

தயாளன்: அது குறிப்பிட்ட மக்களோட உணவுப்பழக்க வழக்கமா இருக்கே?

தொ.ப: இவங்க அத வெச்சுதான் மதத்தை பில்டப் பண்ணாங்க . இன்னும் அது அப்படியேதான் இருக்கு.

தயாளன்: தமிழ்நாட்டுல மாட்டிறைச்சிக்கு பயங்கர எதிர்ப்பு வரல, ஆனால் கேரளாவுல பயங்கர எதிர்ப்பு வந்தது. இதுக்கு என்ன சமூக காரணம்?

தொ.ப: அங்க நிறைய மலையாளி மாட்டிறைச்சி சாப்பிடுறான்! அங்க எதிர்ப்பு வந்தது. இங்க மாட்டிறைச்சியை சாப்பிடல. இப்போ கொஞ்சம் சாப்பிடறாங்களே தவிர மாட்டிறைச்சி சாப்பிடனும்னு சாப்பிடல. கேரளாவுல மாட்டிறைச்சி சாப்பிடனும்னு சாப்பிடறான். அதனால அங்க எதிர்ப்பு வந்தது, இங்க எதிர்ப்பு வரல.

தயாளன்: குறிப்பா மாட்டிறைச்சிய தொழிலா பயன்படுத்தற முஸ்லீம்கள் அப்புறம் தலித், இந்த ரெண்டு பேரையும் கார்னர் பண்றாங்க. இந்த ரெண்டுபேரையும் கார்னர் பண்ணத்தான் மாட்டிறைச்சி தடை கொண்டு வர்றாங்கனு புரிஞ்சுக்கணுமா?

தொ.ப: ஆமாம்! அதுதான் உண்மை!

தயாளன்: இதுவே ஆடு, கோழிகளை தடை பண்ணியிருந்தா இடைநிலை சாதிகள் எந்திரிச்சிருக்கும், அவங்க பயங்கரமா கோபப்பட்டிருப்பாங்க இல்லையா?

தொ.ப: ஆமாம், உயிரிப்பலி தடைச்சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்துச்சு? தோத்துப் போச்சுல்லா? அந்தச் சட்டம் தோத்துப் போச்சுல்ல? இந்த அம்மா கௌரவமா பின் வாங்கிருச்சுல்ல.

தயாளன்: அந்த இடத்துல கி. வீரமணியும் ஒரு குரல்ல பேசறாரு, ராமகோபாலனும் ஒரு குரல்ல பேசறாரு?

தொ.ப: ஆமாம், நான் அதைக் கண்டிச்சு எழுதியிருக்கேன்.
சரியான புரிதல் இல்லை கி.வீரமணிக்கு. பெரியாரை அவர் சரியா உள் வாங்கிக்கலனுதான் பொருள்.

தயாளன்: கி. வீரமணியோட சறுக்கல் எங்க தொடங்குது ஐயா?

தொ.ப: உயிர்ப்பலி தடைச்சட்டத்தை ராமகோபாலனும் வரவேற்கிறாரு, வீரமணியும் வரவேற்கிறாரு. இந்த இடத்துலதான் வீரமணியோட சறுக்கல் தொடங்குது. பெரியார் இருந்தா என்ன சொல்லியிருப்பாரு? எல்லா சாதியினரும் கருவறைக்குள்ள நுழையட்டும், அப்புறம் இதை பேசிக்கோ, போன்னு சொல்வாரு. வீரமணி அதைச் சொல்லல. வீரமணி தோத்துப் போனாரு, பெரியார் ஜெயிச்சாரு.

தயாளன்: உயிர்ப்பலியை மூடநம்பிக்கைனு அவர் சொல்றாரு.

தொ.ப: நான் நல்லவன்னு நீங்க நம்புவீங்க! நம்பிக்கை. நான் கெட்டிக்காரன்னு நீங்க நம்புவீங்க! நம்பிக்கை எப்போ ஆபத்துனா, ஒரு நம்பிக்கை அவர் மேல பாயுறபோது, இவர் மேல பாயுற போதுதான் ஆபத்து, அது மூடநம்பிக்கை. அவனைவிட நான் கெட்டிக்காரன் என்பது மூடநம்பிக்கை. நான் நல்லவன்னு நீங்க நம்பறது நம்பிக்கை. நம்பிக்கை இல்லாம மனுஷன் இருக்க முடியாது.

தயாளன்: ஜல்லிக்கட்டு பிரச்சனை தமிழ்நாட்டுல பெரிய அளவில நடந்தது. அப்பவும் இதே தலித் அரசியல் பேசறவங்க எல்லாருமே, இது வந்து ஒரு இடைநிலைச் சாதியோட பிரச்சனைதான்னு சொன்னாங்க?

தொ.ப: சாதி சார்ந்த பிரச்சனைதான், ஆனால் இடைநிலை சாதிகளோட பிரச்சனையில்லை. அடித்தட்டு சாதியோட பிரச்சனை. ஏன்னா எல்லா ஊரிலேயும், எல்லா சாதியும் நடத்துது. கிறித்தவர்கள் ஜல்லிக்கட்டு நடத்துறாங்கள்ல? தெரியுமா? பொங்கலுக்கு கிறித்தவர்கள், சர்ச்சுல ஜல்லிக்கட்டு நடத்துவாங்க. அப்ப அது என்னது? அது சாதி சார்ந்ததும் இல்ல, மதம் சார்ந்ததும் இல்ல. அது பண்பாடு சார்ந்தது. திருச்சி மாவட்டத்துல பாத்தீங்கன்னா, சர்ச்சுகள் முழுக்க சல்லிக்கட்டு நடத்துவாங்க, அல்லது ஜாதி வித்தியாசம் இல்லாம, மதம் சார்ந்து மஞ்சுவிரட்டு நடத்துவாங்க.

தயாளன்: ஒரு விசயத்தை இது சாதி சார்ந்தது, அல்லது பண்பாட்டோட விழுமியம்னு எப்படி பிரிச்சு பார்த்து புரிஞ்சுக்கிறது ஐயா?

தொ.ப: இப்போ இத பாருங்களேன், சல்லிக்கட்டு மதுரை மாவட்டத்துல ஒரு சாதிக்காரங்க அதிகமா ஆர்வம் காட்டுவாங்க. திருச்சி மாவட்டத்துல வேற சாதிக்காரங்க நடத்தறாங்க. திண்டுக்கல் மாவட்டத்துல மத்த சாதி நடத்தறாங்க. அப்போ இது சாதிக்குரியது இல்லை. அப்படினு உறுதிப்படுத்தணும். இது மனுசனுக்குரியது. இது ஒரு Sports and passion.

தயாளன்: இதை தடை செய்ய முடியாதா?

தொ.ப: முடியாது.

தயாளன்: எதிர்காலத்துல தமிழ்நாடு, தமிழ்தேசியம் அல்லது சாதி ஒழிப்பு இது பத்தின உங்க நம்பிக்கை எப்படி இருக்கு ஐயா? ஒட்டு மொத்தத்துல எதிர்காலத்துல?

தொ.ப: சாதிய முரண்கள் கூர்மையடையும். நிறைய இழப்புகளை சந்திப்பாங்க! அந்த இழப்புகளுக்கு பிறகு அறிவு வரும் அப்படிங்கிறதுதான் என்னோட நம்பிக்கை. வந்துதான் தீரணும், ஆனால் அதுக்காக நிறைய இழப்புகளைச் சந்திச்ச பிறகு அறிவு வரும்.

தயாளன்: ஆனால், சாதியற்ற சமூகம்னு ஒன்னு உருவாகும்னு நம்பறீங்க?

தொ.ப: ஆமாம், நான் நம்பறேன். ஆனால், அது என் காலத்துல இல்ல. என் பையன் காலத்துலேயும் இல்ல, என் பேரன் காலத்துல இருக்கலாம். இன்னிக்கு அந்தமான்ல இருக்குல்ல. அந்தமான்ல மதமே ஒரு பிரச்சனையே இல்லப்பா, இந்து கிறித்தவ திருமணங்கள், கிறித்தவ இசுலாமிய திருமணங்கள், இந்து இசுலாமிய திருமணங்கள் தினம் தினம் நடக்குதுல்ல. தமிழந்தான் இருக்கிறான். தமிழ் இந்துவும், தமிழ் முஸ்லிமும் கல்யாணம் பண்ணிக்கிறான். மதம் ஒரு பிரச்சினையே இல்லை. தமிழன் நல்லாத்தான் இருக்கான். அப்படி ஒரு சமூகம் இங்கேயும் வரும்.

தயாளன், ஊடகவியலாளர். ‘மானுட வாசிப்பு: தொ.ப .வின் தெறிப்புகள்’ என்ற நூலை ஏ. சண்முகானந்தத்துடன் இணைந்து தொகுத்துள்ளார்.

5 thoughts on “பெரியாரைத் தோற்கடிக்கவே முடியாது! முடியாது! முடியாது!: தொ. பரமசிவன் நேர்காணல்

  1. மிக ஆழமான நல்ல கேள்விகள், நல்ல பதில்கள். பல பரிமாணங்களை வெளிக்கொண்டுவந்ததில் திரு.தயாளன் வெற்றி கண்டுள்ளார்.

    மேல்மருவத்தூர் அடிகளார் பற்றி திரு.தோ.ப அவர்கள் குறிப்பிட்டுள்ளது அவரிடம் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் பற்றிய முழு சாதனைகள் பற்றிய அறியாமையைக் காட்டுகிறது.

    ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் மூலம் வெறும் மாதவிடாய் கால ஒதுக்குதலில் இருந்து பெண்களுக்கு விடுதலை அளித்தது மட்டுமே வெற்றியல்ல. தமிழ் மந்திரங்கள், கருவறை நுழைவு, குடமுழுக்கு, வேள்விகள், வீட்டு சடங்குகள் இப்படி எல்லாவற்றிலும் தற்சார்பு இங்கே சாத்தியமாகியிருக்கிறது அந்தணர் அல்லாதோருக்கு. இதையெல்லாம் பற்றி தொ.ப. அய்யா கண்ணுறாமல், அடிகளாரும், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கமும் தோற்றுப்போகும் என்பது அவநம்பிக்கையின் வெளிப்பாடு.

    போலி துறவறத்தை முன்னிருத்தாமல் இல்லறத்தில் இருந்தவாரே தன்னை நாடி வந்தோரையும் இல்லறத்தின் மூலமே ஆன்மிக மேன்மைகளை அடைய ஆற்றுப்படுத்துவதென்பதும், இதுவரை சாதித்துள்ள ஆன்மிக விடுதலையும் வெறும் மனிதச்செயல்கள் அல்ல, இதை உணர்வதாலேயே அவர் ஆதிபராசக்தியின் அவதாரமாக கோடிக்கணக்காணவர்களால் வழிபடப்படுகிறார். அதையே தோல்வியாகப் பார்ப்பது ஆன்மிகம் என்கிற நுண்ணறிவு இல்லாமையின் வெளிப்பாடு. ஆன்மிகம் என்பது வெறும் பகுத்தறிவு கொண்டு மட்டுமே அனுகக்கூடிய துறையல்ல, நுண்ணறிவு மிகுதியாகத் தேவைப்படும் துறை என்பதை ஏற்க வேண்டும்.

    Like

  2. செறிவான அடர்த்தியான கேள்விகளை முன் நிறுத்தியமைக்கு ஊடகவியலாளருக்கு பாராட்டுக்கள்.அய்யாவின் பதில்கள் ஒவ்வொன்றும் தெளிந்த நீரோடை போல அமைந்தது. அய்யாவுக்கு அன்பு வணக்கங்கள்.

    Like

  3. தோ ப அவர்களின் கருத்துக்கள் வலிமையாக தீர்க்கமானதாக இருக்கின்றன.
    பெரியாரை தோற்கடிக்கமுடியாது என்பதை மிகத்தெளிவாக
    பதிவிடுகிறார்.
    படித்து மற்றவர்களுக்கு பகிர்ந்து மகிழ்ந்தேன்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.