நக்கீரன்

புகை என்றுமே நுரையீரலுக்குப் பகை. அது சாம்பிராணி புகையாக இருந்தாலும் சரி, சல்பர் டை ஆக்சைடு கலந்த புகையாக இருந்தாலும் சரி. இதனால்தான் ஆலைகள் வெளியிடும் புகை, குப்பைகள் எரிக்கும் புகை உள்ளிட்ட அனைத்து புகைகளுக்கும் எதிராகச் சூழலியலாளர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். ஆனால் ஓர் ஆன்மீகச் சடங்கு அறிவியல் கருத்தாக திரித்துச் சொல்லப்படுகிறது. ஹோமத்தில் இடப்படும் சமித்துகளில் மருத்துவக் குணம் நிறைந்திருப்பதால் அப்புகை உடலுக்கு நன்மையைத் தருமாம். அப்படியானால் கணபதி ஹோமம் நடைபெறும் ஒரு வீட்டின் கூடத்தில் புகை நிறையும்போது நன்மை தரும் அப்புகையைச் சுவாசிக்காமல் ஏன் அவ்விடத்தை விட்டு அகன்றுச் செல்கிறார்கள் என்று தெரியவில்லை.
இந்த போலி அறிவியலுக்கு முட்டுக்கொடுக்கும் வகையில் ஒரு வரலாற்று நிகழ்வையும் இட்டுக்கட்டியுள்ளனர். இதைக் கேட்கின்ற பக்தர்களும் யோசிக்கும் திறனிழந்து இந்தப் போலி அறிவியலை வியந்து தம் பங்குக்கு அதை நாடு முழுவதும் பரப்பி வருகிறார்கள். அந்தச் செய்தி இதுதான்.
போபால் நச்சுக்காற்றுக் கசிந்தபோது போபால் நகரத்தின் ஓரிடத்தில் அதிகாலையில் புதுமனை புகுவிழா நடந்து கொண்டிருந்ததாம். அப்போது ஹோமத்தில் இருந்து எழுந்த புகை அவ்வீடு முழுக்க நிரம்பியிருந்ததாம். அதனால் அந்த நேரத்தில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து கிளம்பிய நச்சுக்காற்று அங்கு நுழைய முடியாமல் விலகி சென்றுவிட்டதாம். இதனால் அவ்வீட்டில் இருந்த அனைவரும் உயிர் பிழைத்து விட்டார்களாம். இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் ஹோமம் என்பது எவ்வளவு நன்மை என்று பரப்புரை நடைப்பெறுகிறது.

Photo by David Davies on Visualhunt / CC BY-SA
இந்தத் திரைக்கதை வசனத்தை யார் எழுதியிருப்பார்கள் என்று ஊகிப்பதில் நமக்குச் சிரமம் இருக்காது. அடுத்தமுறை அணுஉலையில் கசிவு ஏற்படும்போது இந்த ஆன்மீக அறிவியல் கூட்டத்தை அனுப்பி ஹோமம் வளர்க்க சொல்லலாம். இது போபால் நச்சுக்காற்று நிகழ்வைக் குறித்துக் கொஞ்சமும் அடிப்படை அறிவற்றுப் புனையப்பட்ட கட்டுக்கதை. நச்சுக்காற்றுக் கசிந்தபின் நகரமே பீதியின் பிடியில் அகப்பட்டு அலைக்கழிந்து கொண்டிருந்தது. வீட்டு விலங்குகள் அலறுகின்றன. பறவைகள் பதறிப் பறக்கின்றன. குழந்தைகள், பெண்கள் ஆண்கள் என ஒட்டுமொத்த மனிதகுலமும் கதறிக் கண்ணீர்விட்டு திக்குத் தெரியாது ஓடினர். அப்படிப்பட்ட நேரத்தில் சாவகாசமாகத் தன் புதுமனைபுகு விழாவை நடத்திக் கொண்டிருந்த அந்த மனிதர் யார் எனத் தெரியவில்லை.
இந்த ஹோமத்தின் பெருமைக் குறித்து என்னிடமே ஒருவர் நேரடியாகப் பீற்றினார். வலிய வந்து வலையில் சிக்கியவரைச் சும்மா விடுவேனா? சில கேள்விகள் கேட்டேன். “புதுமனை குடிப்போகும் நேரம் எது?”
“பிரம்ம முகூர்த்தம்”
“அப்படியென்றால்…?”
“அதிகாலை நாலரையில் இருந்து ஆறு மணி வரை”
“போபால் நச்சுக்காற்று கசிந்த நேரம் எது தெரியுமா?”
“தெரியாது”
“பரவாயில்லை. நானே சொல்கிறேன். நச்சுக்காற்று கசிந்ததை அறிவிக்கும் ஆலையின் அபாயச்சங்கு ஒலித்த நேரம் நள்ளிரவு 12:30. அதற்கு முன்னரே நச்சுக்காற்று கசிய தொடங்கிவிட்டது. ஹோமம் நடந்ததாக நீங்கள் சொல்லும் நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்து அடங்கிவிட்ட நேரம். பின் எப்படி நீங்கள் சொல்வது பொருந்தும்?”
அவர் திணறி முழிப்பதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. போபால் நச்சுக்காற்றால் அனைவரும் இறக்கவில்லை. நச்சுக்காற்று வீசிய திசையில் உடல்நலப் பாதிப்போடு உயிர் பிழைத்தவர்களும் இருந்தார்கள். சில இடங்களில் நஞ்சின் அளவு குறைந்திருந்தது. அதற்குக் காரணம் ஹோமப் புகை அல்ல, புங்கை மரங்கள்.
போபாலில் மீதைல் ஐசோ சயனைட் நச்சுக்காற்று வெளியேறிய நிலையில் அப்பகுதியில் இருந்த புங்கை மரங்களும் வேப்ப மரங்களும் இந்த நச்சுக்காற்றை உண்டு, இலையுதிர்த்து மொட்டையாகின. இதே இடத்திலிருந்த மலைவேம்பு, மா, விளா, வில்வ மரங்களில் எந்த மாறுதலும் இல்லை. அதாவது நச்சுக்காற்றை உட்கொண்டு அதைக் குறைக்கும் திறன் இம்மரங்களுக்கு ஏனோ இல்லை என அறிஞர் பி.எஸ்.மணி அவர்கள் ‘சர்வே ஆஃ போபால் இந்தியா’ அறிக்கையை முன் வைத்து விளக்குகிறார்.
இதற்காகத்தான் ஒரு அபாயகரமான தொழிற்சாலையை அமைக்கும்போது அதனைச் சுற்றிலும் மரங்கள் வளர்க்க வேண்டும் என்கிற விதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு மரத்துத்தும் ஒரு திறன் இருக்கிறது. இதுபோல் எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் வகை மரங்களுக்குக் கந்தக டை ஆக்சைடை தன் இலைகளில் படிய வைத்துக்கொள்ளும் திறன் உண்டு. ஆனாலும் பேரிடர் நிகழும்போது அது இம்மரங்களின் தாங்கு திறனையும் அவை தாண்டிவிடும் என்பதே உண்மை.
இப்படிப் புங்கை மரத்துக்குக் கிடைக்க வேண்டிய புகழை, சில புளுகு மூட்டைகள் சுருட்டிக் கொள்ளப் பார்க்கின்றனர். எனவே சூழல் பாதிப்புகளுக்கு எதிராக மட்டுமல்ல, இதுபோன்ற புளுகு மதவாதிகளுக்கு எதிராகவும் போராட வேண்டிய அவசியம் சூழலியலாளர்களுக்கு இருக்கிறது.
நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி, பால் அரசியல் உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.