எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
சிறுகதை எழுத்தாளரும், சிறந்த சமூக சிந்தனையாளருமான ‘மேலாண்மை’ பொன்னுசாமி காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். விருதுநகர் மாவட்டம் மேலமறைநாடு என்ற கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில் 1951 ஆம் ஆண்டில் பிறந்த ‘மேலாண்மை’ பொன்னுசாமி தனது சொந்த கிராமத்தில் சிறு மளிகை வியாபாரம் செய்து வந்தார்.
சமூக மாற்றம் குறித்து சிந்தித்தவர். மார்க்சிய கொள்கையால் ஈர்க்கப்பட்டார். பல்வேறு நிலைகளில் வாழும் மக்களை அன்றாடம் சந்திக்கும் வாய்ப்பு பெற்றவர். சோவியத் இலக்கியத்தின் தாக்கத்தால் மக்களின் வாழ்நிலைகளை எடுத்துச் சொல்லும் சிறுகதைகள் 1972 முதல் எழுதத் தொடங்கியவர். 23 சிறுகதைகளையும் 6 நாவல்களையும் படைத்து வழங்கியுள்ளார்.
இவரது ‘மின்சாரப்பூ’ என்ற சிறுகதை 2008 ஆம் ஆண்டில் ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தை நிறுவிய தலைவர்களில் முதன்மையானவர். இவரது மறைவு படைப்புலகிற்கு பேரிழப்பாகும். அன்னாரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, அவரை இழந்து நிற்கும் அவரது மனைவி திருமதி.பொன்னுதாய், மற்றும் குழந்தைகளுக்கும், முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.