நீட்டை ஆதரித்தும் அரியலூர் மாணவியின் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் பேசிவருகிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர். கிருஷ்ணசாமி. இவரை விமர்சித்து சமூக ஊடகங்களும் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் விமர்சித்து வரும் நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய முகநூல் பதிவு வைரலாகி வருகிறது…
“2015 சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள்.
அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் மெடிக்கல் ஷீட் கொடுத்தாரே மறந்துவிட்டீர்களா எனக்கேட்க அப்போது கிருஷணசாமி நான் மறக்கவில்லை. அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன் எனக்கூறி முதலமைச்சரைப் பார்த்து வணக்கம்போட இந்த வணக்கத்தை வேறு எங்காவது போடு என்பதுபோல் வெடுக்கென்று முதலமைச்சர் முகத்தை திருப்பிக்கொள்ள ..டாக்டர் கிருஷ்ணசாமியின் சுயநலம் அப்போது சட்டமன்றத்தின் மேஜைமீது பொத்தென்று விழுந்தது.
தலித் குழந்தைக்கு அத்தகைய உதவி பெற்றதில் தவறே இல்லை. ஆனால், இப்படி புறவாசல்வழியாக உதவியைப் பெற்றுக்கொண்டவர் தம்மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருகிறார். தோழர் பிரின்சு, எம்எல்ஏ சிவசங்கர் மீது குற்றம் சுமத்துகிறார், பாஜக அதிமுக வேடிக்கைபார்க்கிறார்கள். ஊடகங்கள் இந்த நியாயவாதியாரைத் தேடிப்பிடித்து அவர் கருத்தைக் கேட்கிறார்களாம். கேப்பையில நெய்வடியுதாம்.” என்பதே அந்தப் பதிவு.