பாரதிதம்பி

பண மதிப்பிழப்பு படுதோல்வி, நீட் நய வஞ்சகம் என அனைத்துக்கும் மோடி என்ற ஒற்றை நபரை இலக்காகக் கொண்டு விமர்சனம் செய்வதை சற்று கவனமாக கையாள வேண்டியுள்ளது. மோடியை ஒரு குறியீடு போல என எண்ணி இப்படி எழுதினாலும், நாளை இந்த அரசின் தோல்விகள், மக்கள் விரோத நடவடிக்கைகள் அனைத்துக்கும் காரணம் தனியொரு நபரே என காரணம் காட்டி, மக்களின் கோபத்துக்கு தனி நபரை பலி கொடுத்துவிட்டு ஆர்.எஸ்.எஸ். கும்பல் நழுவிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.
தினம் ஒவ்வொன்றாக நம் மீது இறங்கும் இடி ஒவ்வொன்றின் பின்னாலும் இந்துத்துவ சக்திகளும், புதிய தாராளமய கொள்கைகளை அமல்படுத்தும் உலக வர்த்தக கழகம், பன்னாட்டு நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளும் இருப்பதை புரிந்துகொள்ள வேண்டும். இல்லை எனில், நாளை மோடி என்ற முகமூடியை கழற்றி எரிந்துவிட்டு இதே இந்துத்துவ+தாராளமய கூட்டு வேறு அடையாளத்துடன் வரும்போது அதன் மீதும் நம்பிக்கை கொள்ள தொடங்குவார்கள் மக்கள்.
’எல்லாம் இந்த மோடியாலதான். அவர்தான் எல்லாத்துக்கும் காரணம்’ என எளிதில் நிறுவ முடியும். ஏனெனில் மோடி என்ற ஒற்றைப் பெயரை முன்னிருத்தியே ஆட்சியைப் பிடித்தவர்கள் இவர்கள். அந்த நபர்தான் இத்தனை கேடுகளுக்கும் காரணம் என்று பொதுப்புத்தியை கட்டமைக்க அதிக காலம் ஆகாது. மோடியை பிரதமர் வேட்பாளராக Brand launch செய்த apco worldwide என்ற அதே PR நிறுவனமே இதையும் செய்யும்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் பத்தாண்டுகளை நினைவில் கொள்ளுங்கள். ‘மன்மோகன் போல ஒரு பொருளாதார மேதை உலகத்திலேயே இல்லை’ என்று Time உள்ளிட்ட பத்திரிகைகள் அவரைக் கொண்டாடின. ஆனால், அவர் அமல்படுத்துகிற ‘பொருளாதார சீர்திருத்தத்தின்’ வேகம் போதாது என்று சொல்லி, அவரது கடைசி இரண்டு ஆட்சி ஆண்டுகளில் மன்மோகனின் இமேஜ் அடித்து நொறுக்கப்பட்டது. அதே Time பத்திரிகை Under achiever என்று அட்டைப்படம் போட்டது. அதற்கு இணையாக இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம்; ‘Vibrant Gujarat’-ஐ போல Vibrant India-வை உருவாக்கும் வல்லமை படைத்தவர் மோடி மட்டுமே என்ற பிம்பம் பெரிய அளவில் உருவாக்கப்பட்டது.
ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் வழியே வெகுமக்களின் கூட்டு மனநிலையை ஒன்றுக்கு ஆதரவாகவோ அல்லது ஒன்றின் மீதான வெறுப்புக்கு வடிகாலாகவோ கட்டமைப்பது இப்போது எளிது. ஆகவே அவர்கள் அத்தனை எளிதில், ரத்தம் வழியும் கோரப் பற்களை நம் கழுத்தில் இருந்து எடுத்துவிட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
பாரதிதம்பி, ஊடகவியலாளர். கற்க கசடற விற்க அதற்கு தக, தவிக்குதே… தவிக்குதே…,குடி குடியைக் கெடுக்கும் ஆகிய நூல்களின் ஆசிரியர்.