திருவல்லிக்கேணியின் நெரிசலான ஒரு தெருவில் அஃக் பரந்தாமன் குடும்பத்துடன் வசித்துவந்தார். குங்குமத்தில் நான் எழுதிக்கொண்டிருந்த ‘நான்’ தொடருக்காக ஆசிரியர் கே.என்.சிவராமன், அஃக் பரந்தாமன் பற்றி எழுதுங்கள் என சொல்லியிருந்தார். குங்குமம் ஆசிரியர் குழுவில் பரந்தாமன் குறித்து சொல்லி அனுமதி வாங்கினேன்.
அஃக் பரந்தாமன் சென்னையில் இருக்கிறார்;ஆனால் அவர் முகவரி தெரியாது விசாரித்தவர்களிடமிருந்து பதில் வந்துகொண்டிருந்தது. அப்போது சந்தியா பதிப்பகம், அஃக் தொகுப்புகளை நூலாக்கியிருந்தது. அவர்களிடம் கேட்டு அவருடைய வீட்டின் முகவரியைப் பெற்றேன். ‘நான்’ தொடருக்காக இலக்கியத்தில் இயங்கிய பலரைத் தேடிச் சென்றதை சிறப்பான அனுபவமாகக் கருதுகிறேன். அதில் மறக்க முடியாத அனுபவம் அஃக் பரந்தாமனுடனானது. திருவல்லிக்கேணியின் நெரிசலான ஒரு தெருவில் அஃக் பரந்தாமன் குடும்பத்துடன் வசித்துவந்தார். அவர் வசித்த வீடு என் பால்ய காலத்தை நினைவுபடுத்தியது. எனக்குப் பிடித்திருந்தது.
என்னை வரவேற்றவர் பரந்தாமனின் மனைவி. அவர் பெயர் சத்யா . ஒல்லியான அவருடைய உருவமும் சிநேகமான அணுகுமுறையும் நினைவில் இருக்கின்றன. முதல் தளத்தில் இருந்த அவருடைய வீட்டின் நுழைவாயிலுக்கு அருகே இருந்த அறையில் பரந்தாமனின் அறை இருந்தது. ஒரு மரப்பெட்டியின் அருகே ஜன்னலிலிருந்து வந்துகொண்டிருந்த வெளிச்சத்தை பார்த்து அமர்ந்திருந்த பரந்தாமனின் அருகே போய் அமர்ந்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். பேட்டி எடுக்குமளவுக்கு என்ன இருக்கிறது…அதெல்லாம் வேண்டாம் என்றுதான் மறுத்தார். நான் அவரை ஒப்புக்கொள்ள வைப்பதில் தீவிரமாக இருந்தேன். முதலில் என்னைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள் என சொன்னார்.
அவருக்கு அப்போது பார்வை மங்கியிருந்தது. தன் அருகே இருந்த பெட்டியிலிருந்து சில கையெழுத்து பத்திரிகைகளை என்னிடம் காட்டினார். ‘அஃக்’ இதழ் தொடங்கப்படும் முன்பு அவர் முயற்சித்த கையெழுத்து இதழ்கள் அவை. வசீகரமான கையெழுத்தில் தாளின் விளிம்புகளில் விதவிதமான வடிவங்களுடன் இருந்த அவ்விதழ்கள். அஃக் பரந்தாமன், இதழ் வடிவமைப்புக்காக தேசிய விருது பெற்றவர். தேசிய விருது பெற்ற ஒரே தமிழ் இலக்கிய இதழ் அஃக் என்றும் பரந்தாமன் சொன்னார். நிறைய இலக்கிய விஷயங்களை, சர்ச்சைகளை, மோதல்களை பேசினார். நடுவே அவருடைய மனைவி எங்களுக்கு தேநீர் அளித்தார். மூன்று மணி நேரத்துக்கும் மேலாக அவர் பேசினார். சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர், தன்னுடைய சொத்துக்களை விற்று அச்சுக்கூடத்தை வாங்கியது, அஃக் இதழ்களை பொருளாதார சிரமங்களைக் கடந்து கொண்டுவந்தது, ஒரு கட்டத்தில் அதில் அனைத்தையும் இழந்து சென்னை வந்து சேர்ந்தது வரை அனைத்தையும் சொன்னார். இருட்டத் தொடங்கியது நான் கிளம்ப வேண்டும் என சொன்னேன்.

சொல்லிக் கிளம்புவதற்காக சமையலறைக்குச் சென்றேன். பரந்தாமனின் மனைவி சத்யாவிடமும் சொல்ல ஏராளமான கதைகள் இருந்தன. வறுமையின் கதைகள் அவை; லட்சியக்காரனின் குடும்பத்தை பீடித்திருக்கும் தொடர் துன்பங்களின் கதைகள் அவை. தங்களுடைய ஒரே மகள்தான் தங்கள் குடும்பத்தின் தற்போதைய ஆதாரம் என்றும் மகன் சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கிறார் என்று சொன்னார். அவரை நான் நெருக்கமாக உணர்ந்தேன். அவரும் என்னை நெருக்கமாகவே உணர்ந்திருப்பார் போலும். பத்து நிமிடங்களில் எல்லா கதைகளையும் சொல்லிவிட வேண்டும் எத்தனிப்போடு பேசினார். அடுத்த தெருவில் உள்ள பூனைகளுக்கு தினமும் உணவிடுவது வரை சொன்னார். நான் அடுத்த வாரம் வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
அஃக் பரந்தாமன் கொடுத்த கையெழுத்து பிரதிகளை பிரதியெடுத்துக்கொண்டு, அதை திருப்பித் தரவும் அவர் பேசியவற்றை இதழில் எழுத ஒப்புதல் பெறும்பொருட்டும் அவர் வீட்டுக்கு மீண்டும் சென்றேன். இந்த முறை காலை நேரத்தில் சென்றேன். அப்போது என் ஊரிலிருந்து கொடுத்தனுப்பியிருந்த நிலக்கடலையையும் உடன் எடுத்துக்கொண்டு போனேன். பரந்தாமனுடன் எனக்கிருந்தது தொழில் முறையிலான அணுகுமுறை. ஆனால், அவர் மனைவியுடன் என் தாயைப் போன்றதொரு நெருக்கத்தை உணர்ந்தேன்.
அதன் பிறகு, அஃக் பரந்தாமனின் பேட்டி வெளியானது. மீண்டும் ஒரு முறை அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது அவருடைய மகள் அங்கே பார்த்த நினைவு. பேட்டி வெளியான சில மாதங்கள் கழித்து அதைப் படித்த ஒருவர் பரந்தாமனின் கண்சிகிச்சைக்காக உதவுவதாகச் சொல்லி இதழுக்கு எழுதியிருந்தார். அத்தோடு பரந்தாமன் – சத்யாவுடனான தொடர்ந்து முடிந்தது. சத்யா நினைவில் வந்துபோவார். ரெண்டு வருடங்களுக்கு முன் சத்யா இறந்துவிட்டதாகவும் பரந்தாமன் ஒரு இல்லத்தில் இருப்பதாகவும் முகநூலில் படித்தேன்.
வாழ்ந்து கெட்டவர்களின் கதைகளை எழுதுபவர்களுக்கு பொதுவாக இந்தச் சிக்கல் இருக்குமா என்று தெரியவில்லை… அவர்களுடைய துன்பங்களை, வறுமையை, தோல்வியை நமக்குள்ளே தேக்கிக்கொள்கிற நிலை. சில சமயம் சிக்கலான மனப்பிரச்னைகளைக்கூட இது ஏற்படுத்துவதுண்டு.
பரந்தாமன், தன்னை ஒரு கவிஞராக, ஓவியராக, பத்திரிகையாளராக, சினிமாக்காரராக சொல்லிக்கொண்டார். தான் ஒரு உலக சினிமாவை இயக்க வேண்டும் என விரும்பினார். உலகத் தரத்தோடு ‘அஃக்’ இதழை கொண்டு வர வேண்டும் என சொன்னார். சத்யாவுக்கு தன்னுடைய இறுதிகாலமாவது வறுமையில்லாமல் இருந்திருக்குமா? அவர்களுடைய மகள் என்ன ஆனார்? உதவி இயக்குநராக இருந்த அவர்களுடைய மகனின் நிலை என்ன? கனவுகளை சுமந்தபடியே வாழ்ந்த பரந்தாமனின் இறுதி கணத்தில் என்ன நினைத்திருப்பார்? என் மனம் கணத்துக்கிடக்கிறது…
படம்: புதூர் சரவணன்
நன்றி: குங்குமம்.