அ. குமரேசன்

முகத்தைத் துப்பட்டாவால் மூடியபடி தனது டூவீலரில் வருகிற பெண்ணைப் பார்த்து வழிகிறான் அவன். அவள் முக்காட்டை விலக்கிக் காட்ட, ஒடுங்கிய முகத்தில் பற்கள் துருத்திக்கொண்டிருக்கும். அவன் அலறுவான். “இதை மறைக்கிறதுக்காகத்தான் முகத்தை மூடிக்கிட்டு போறீங்களாடீ” என்று சாடுவான்… இது ஒரு தரமான நகைச்சுவையா என்ற உறுத்தலே இல்லாமல் திரையரங்கில் இருந்தோர் சிரித்தார்கள்; அவ்வப்போது தொலைக்காட்சிகளின் சினிமா காமெடி நிகழ்ச்சிகளைப் பார்க்கிறவர்களும் சிரிக்கிறார்கள். பெண்களை ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் பரிகசிப்பதற்கு ஊக்குவிக்கிற சந்தானம் படங்களில் ஒன்று என அதை விட்டுவிட்டோம்.
இப்போது ஹரியானா அரசு செய்திருப்பதை அந்த மாநிலப் பெண்கள் விட்டுவிடத் தயாராக இல்லை.
“பெண்கள் தங்கள் முகத்தை முக்காடிட்டு மூடிக்கொள்கிற பெருமை ஹரியானாவின் அடையாளம்.”
-இது அங்கே யாரோ ஒரு மடாதிபதியின் உபதேசமோ பேட்டியோ அல்ல. மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிற ‘ஹரியானா சம்வாத்’ என்ற பத்திரிகையில் வந்துள்ள படக்குறிப்பு.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட மகளிர் அமைப்புகள் இதைக் கடுமையாகச் சாடியிருக்கின்றன. பெண்களை ஏன் முக்காட்டுப் பெருமைக்குள்ளேயே மூடி முடக்குகிறீர்கள் என்று ஆவேசத்துடன் கேட்டுள்ளன. பெண்ணுரிமைக்கு எதிரான மாநில பாஜக அரசின் மனநிலையைத்தான் இது காட்டுகிறது என்று விமர்சித்துள்ளன.
இப்போது அமைச்சர் ஒருவர் “எல்லாப் பெண்களும் முக்காடு போட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தவில்லை. அது ஹரியானாவின் பாரம்பரியம் என்ற அர்த்தத்தில்தான் அந்தப் படம் அரசுப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது,” என்று “விளக்கம்” அளித்திருக்கிறார்.
பெருமை, அடையாளம், பாரம்பரியம் என்ற சொற்களின் அர்த்தம் என்னவோ? அந்தப் பெருமையையும் அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் பெண்கள் காப்பாற்ற வேண்டும் என்று மறைமுகமாகக் கட்டாயப்படுத்துவதுதானே? அதை மீறுகிற பெண்கள் அந்தப் பெருமையையும் அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் கெடுக்கிறார்கள் என்று சித்தரிப்பதுதானே?
(“இஸ்லாமியப் பெண்கள் பர்தா போடுவதை மட்டும் ஏன் சொல்ல மாட்டேனென்கிறீர்கள்” என்று சிலர் கிளம்புவார்கள் பாருங்களேன். அவர்களுக்கு நாம் சொல்லிக்கொள்வது: ஹரியானாவில் இதைச் சொன்னது ஒரு மத நிறுவனமோ அதன் பத்திரிகையோ அல்ல. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் இப்படி வந்திருக்கிறது. அடுத்து, பர்தா போடுவது குறித்து இஸ்லாமிய நண்பர்களிடமும் கேள்வி எழுப்பி வெளிப்படையாக விவாதித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.)
அ. குமரேசன், பத்திரிகையாளர்; எழுத்தாளர். சமீபத்தில் வெளியான இவருடைய நூல் நந்தனின் பிள்ளைகள் (பறையர் வரலாறு 1950-1956