எடப்பாடி அரசுக்கு ஆதரவளிக்க தனக்கு 10 கோடி ரூபாய் தரப்பட்டதாகக் கூறப்படும் புகாரை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூவத்தூரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகத் தொலைக்காட்சிகளில் வெளியான செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் கூவத்தூர் முகாமுக்கு போகவில்லை என்பது நாடறிந்த செய்தி. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கோரி அமைச்சர் செங்கோட்டையன் எங்கள் அலுவலகத்திற்கு வந்த போது, எங்களுக்கு கரன்சி பாலிடிக்ஸ் பிடிக்காது என்று கூறினேன். அவரும் உங்களைப் பற்றி எனக்கு தெரியும் என்றார். ’உங்களுக்கு ஆதரவு தருகிறோம், அதற்கு நன்றி கடனாக எதிர்காலத்தில் தங்கள் கட்சிக்கு 2 வாரியப் பதவிகளை தாருங்கள்’ என்றேன். அப்போது எங்கள் கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர். இப்படி நான் பேசியது இறைவன் மீது ஆணையாக உண்மை. சரவணன் எம்.எல்.ஏ எங்கள் மீது கூறிய குற்றச்சாட்டை 100 சதவிகிதம் நிராகரிக்கிறோம். சட்ட ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம்’ என்று கூறியுள்ளார்.