சிறு – குறுநகரங்களில் இளிக்கும் பள்ளிகள்!

கே. ஏ. பத்மஜா

கே. ஏ. பத்மஜா

கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவின் பெருநகரங்கள் எல்லாம் உலக நாடுகளின் கல்வி முறையை இறக்குமதி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. சிறு, குறு நகரங்களோ பெருநகரங்களைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டிருப்பதுதான் இன்றைய கல்விச் சந்தையின் நிலை. இந்தக் கல்வி வியாபாரத்தில் அதிக விலை கொடுத்து தங்கள் பிள்ளைகளை தாங்களே விற்கும் அவல நிலையை கெளரவம் என நினைக்கிறார்கள் பெற்றோர்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை கல்விக் கூடங்கள் கிடையாது. அங்கு புத்தகக் கல்வியுடன், வாழ்க்கைக் கல்வியும் முறையை பிள்ளைகள் கற்றனர். அரசுப் பள்ளிகளை புறக்கணிக்க தொடங்கிய பெற்றோர்கள் மெட்ரிக் மற்றும் ஆங்கில வழிக்கல்வி என்ற தனியார் தூண்டிலுக்கு இரையாக்கினர்.

தனியார் பள்ளி மூலம் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என தெரிந்த பல தொழிலதிபர்கள் பள்ளிக்கூடங்களை வியாபார நோக்குடன் பார்க்க ஆரம்பித்தனர். தெருவிற்கு தெரு ஒரு பள்ளி என்ற அளவிற்கு தனியார் பள்ளிகள் பெருக ஆரம்பித்தது. ஓர் அரசு பள்ளி இருக்கும்போது அடுத்த அரசு பள்ளி ஒரு குறிப்பிட்ட போதுமான இடைவெளி விட்டுதான் ஆரம்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உண்டு. ஆனால் இதுபோன்ற விதிமுறை தனியார் பள்ளிகளுக்கு இருப்பதாக தெரியவில்லை.

புற்றீசல் போல் பெருகிவரும் தனியார் பள்ளிகள் தங்களை அடையாளப்படுத்தவும் பிரபலப்படுத்தவும் சமீபத்தில் எடுக்கும் ஆயுதம் சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.சி. கல்வி முறை. பெற்றோரை கவர்வதற்கு அவர்களிடம் இருக்கும் பணத்தை கரக்க நாடும் புது யுக்திதான் இந்த உயர்தர கல்வி முறை என்ற விளம்பரம்.

தாங்கள் வசிக்கும் குறுநகரங்களில், பெரும்பாலான பெற்றோர் கொஞ்சமும் யோசிக்காமல் தங்கள் பிள்ளைகளுக்கு நல்லது செய்வதாய் நினைத்து, பள்ளியில் மொத்தம் பத்து பிள்ளைகள்தான் இருக்கின்றன என்றாலும், நல்ல கண்கவர் கட்டிடம், வசதியான வகுப்பறை போன்றவற்றால் மயங்கி பிள்ளையின் அறிவை மழுங்கடிக்கின்றனர்.

பொதுவாக இந்த உயர்தர பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர் பெரும்பாலும் அதே பகுதியில் ஆங்கில வழிக் கல்வி முறை கற்றவர்கள் அல்லது ஆங்கில வழி கல்விமுறை என்று பெயரளவில் பலகை கொண்ட பள்ளியில் பணியாற்றி இருப்பவர்கள்தான். இவர்களால் இந்த உயர்தர கல்வி முறை பாடத்திட்டத்தை நிச்சயம் செம்மையாய் நடத்த இயலாது. இவர்களுக்கு நிர்வாகமும் எந்த விதத்திலும் பயிற்சி கொடுக்க முன்வந்ததும் இல்லை. எனவே, இவர்கள் அந்தப் பாடப் புத்தகத்தில் தங்களுக்கு தெரிந்த அளவில் மட்டுமே பிள்ளைகளுக்கு நடத்துகின்றனர். அதில் மட்டுமே கேள்விகள் கேட்டு பிள்ளைகளின் தேர்ச்சி விகிதத்தை சரிகட்டிவிடுகின்றனர்.

உண்மையில் இந்த உயர்தர கல்விமுறையின் நோக்கம் நுண்ணிய சிந்தனை, கற்கும் திறனை மேம்படுத்துதல், கற்பனை வளத்தை செம்மைப்படுத்துதல் போன்றவை. ஆனால், இவை எதும் நடக்காமல் மாணவர்கள் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பத்திரமாய் வைத்து பாதுகாக்கப்படுவதன் விளைவு பனிரெண்டாம் வகுப்பை உயர்தர கல்விமுறையில் முடித்து இருந்தாலும்கூட எளிய போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியாமல் பிள்ளைகள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

எனவே, சிறு – குறுநகரங்களில் வசிக்கும் பெற்றோர்கள், முந்தைய நாள் மழைக்கு முளைத்த காளானாய் பல பல பளப்பள கட்டிடங்கள், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் முதல்வர், லட்சங்களைத் தொடும் பள்ளி கட்டணம் மட்டும் தரமான கல்வியை கொடுத்துவிட முடியும் என்ற மூடநம்பிக்கையை கைவிடவேண்டும். கொஞ்சம் சிரத்தை எடுத்து தங்கள் பிள்ளைகளுக்கான கல்விக்கூடத்தை தேர்வு செய்வது பெற்றோரின் கடமை.

 

One thought on “சிறு – குறுநகரங்களில் இளிக்கும் பள்ளிகள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.