இளங்கோ கிருஷ்ணன்
கவிஞர் அப்துல் ரகுமான் மரணம். வானம்பாடி மரபில் தனித்துவமானவர் ரகுமான். அவரது இஸ்லாமிய பிண்ணனி இதற்கு ஒரு முக்கிய காரணம். தான் வானம்பாடியில் எழுதினேனே தவிரவும், வானம்பாடி கவிஞர் அல்ல என்பார். அதற்கு காரணங்களும் உள. வானம்பாடி மரபின் ரொமாண்டிசைஸ்டு மொழியைப் பயன்படுத்தினாலும் கவிதையை லெளகீக தளத்தில் அல்லாமல் ஆன்மிக தளத்தில் பயன்படுத்தியவர் ரகுமான். என் இளமைப் பருவத்தில் என்னை மிகவும் வசீகரித்த கவிஞர்.
இவரது பால்வீதி, ஆலாபனை, பித்தன் மூன்றும் முக்கியமானவை. இதில் ஆலாபனை, பித்தன் இரண்டும் எதிரெதிர் நூல்கள். அதாவது, ஆலாபனை மேதையின் பாவனையிலும் பித்தன் அதற்கு எதிரான பாவனையிலும் எழுதப்பட்டிருக்கும். இவ்விரண்டிமே சூஃபி மரபின் இயல்புகள். தமிழில் சூஃபி மரபை ரொமாண்டிசைஸ் செய்த கவிஞர் அப்துல் ரகுமான் என்பது என் மதிப்பீடு.
தொடக்க காலத்தில் கலீல் ஜிப்ரான் இவரின் ஆதர்சமாய் இருந்தார். பிறகு அரேபிய, பாரசீக, உருது மரபு இலக்கியங்களின் தாக்கத்துடன் எழுதினார். புதுக்கவிதை பற்றிய இவரது ஆய்வு நூல் முக்கியமானது. கவிதையியல் பற்றி பேச முற்பட்ட கவிஞர்களில் முக்கியமானவர்.
தமிழ் கவிதை… சங்க காலம், சுதந்திர இந்தியாவின் இரண்டாம், மூன்றாம் தசமங்கள், முகநூல் உள்ளிட்ட சமூக வளைதளங்களின் வருகையான தற்காலம் என மூன்று முறை பேரளவில் ஜனரஞ்சகமாகி இருக்கிறது.
இதில் எழுபது, எண்பதுகளில் ஜனரஞ்சகமானபோது அப்துல் ரகுமான் செய்த பங்களிப்புகள் முக்கியமானவை. கவியரங்களில் செவிநுகர் கனிகளான இவரது கவிதைகளும் சமத்காரமான பேச்சும் பெரிதும் கொண்டாடப்பட்டன. பெரியவருக்கு என் அஞ்சலிகள்.
இளங்கோ கிருஷ்ணன், கவிஞர்; ஊடகவியலாளர்.