சரவணன் சந்திரன்

தமிழக அரசியல் என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் பத்மவியூகத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறது. அவர்கள் வார்த்தைகளிலேயே சொல்வதென்றால் இன்னும் அவர்கள் பிரம்மாஸ்திரத்தை வீசவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உடல் மொழிகளிலே உணர்த்தி விடுகிறார்கள். சுவாரசியமாகச் சொல்ல வேண்டுமெனில், அவர்கள் சொல்லி அடிக்கிற கில்லிகள்.
அரசு எந்திரத்தை ஏற்கனவே கைக்குள் போட்டாகி விட்டது. ஒரு ஆயா ட்ரான்ஸ்பரைக்கூட அப்ரூவல் இல்லாமல், பண்ண முடியாது என்கிற போது தலைமைச் செயலகத்தில் ஆய்வு நடத்துவதெல்லாம் பெரிய விஷயமா என்ன? கொந்தளிப்பான கடலில் கப்பலின் ஹேண்டில் பாரை அரசியல் களம் பக்கமும் சீக்கிரமாகவே திருப்புவார்கள் பாருங்கள். இன்றைய தேதியில் ஒருசாரரால் அவர்கள் விரும்பப்படவும் துவங்கியிருக்கின்றனர். கோவையிலிருந்து அரசியல் ஆசையுடைய கிறிஸ்துவத் தம்பி அழைத்து, அவர்களுடைய கட்சியின் சிறுபான்மை பிரிவில் போஸ்டிங் வாங்கித்தர முடியுமா? என போன வாரம்தான் கேட்டான்.
தகவலுக்காகச் சொல்கிறேன். அவர் அரசியல் களத்தில் வீச நினைக்கிற பிரம்மாஸ்த்திரம், ரோலக்ஸ் வாட்ச் நாவல் நாயகனைப் போல ஒரு புரோக்கரின் டைரி. சேகர் ரெட்டி என்கிற குத்தகை மாபியாவின் டைரி. சகலத்தையும் குத்தகைக்கு எடுப்பார்கள் என்கிற நிலையில் மணலெல்லாம் ஒரு மேட்டரா என்ன? அதில் சற்றேறக்குறைய எல்லா கட்சிகளும் மாட்டிக் கொள்ளும். அவர்கள் பெரிய கட்சியாக இருந்தால் அவர்களும் மாட்டிக் கொண்டிருப்பார்கள். ஒருவேளை இருக்கக்கூடச் செய்யலாம் யார் கண்டது?
இந்த மாஃபியாக்களின் வலைப் பின்னல் அப்படி. ரெண்டாம் நம்பர் தொழில்தான் என்ற போதிலும் அதிலும் ஒரு நேர்மை உண்டு. சொன்னபடி கமிஷனை எந்த பார்மட்டிலும் தந்து விடுவார்கள். எல்லா கட்சிகளுக்கும் வஞ்சகம் இல்லாமல் தந்து விடுவார்கள். நாலு பேரை அழைத்துக் கொண்டு அவர்கள் தொழில் பார்க்கும் ஏரியாவில், சும்மா பீடி குடிக்க வந்தோம்ணே என்று சொன்னால்கூட தலைக்கு நூறு ரூபாயை பாக்கெட்டில் சொருகி அனுப்புவார்கள்.
காட்டுன்னு சொன்னால் நம்ம ஆட்கள்தான் காட்டு காட்டு என்று காட்டி விடுவார்களே? எல்லா கட்சிகளும் லிஸ்ட்டில் உண்டு. தட்டிக் கேட்க வேண்டிய பத்திரிகையாளர்கள் வாங்கியிருக்கிறார்கள். இதை எதிர்த்துப் போராடும் அமைப்புகள் சில ரகசியமாக வாங்கியிருக்கிறார்கள். மக்கள் சில இடங்களில் இன்னமும் மாதாமாதம் மணல் மாபியாக்களிடம் பணம் வாங்குகிறார்கள். கோவில் கும்பாபிஷேம் என தலையைச் சொறிந்து கொண்டு போய் நிற்பார்கள் நேர்மையின் சிகரங்கள்.
இங்கேதான் ட்விஸ்ட் இருக்கிறது. நாங்கள் மட்டும்தான் நேர்மையின் சிகரங்கள் என்று சொல்லி, அந்த டைரியை வைத்து ஒரு புயல் வீசக்கூடும். சாதாரணமாக நினைக்காதீர்கள். ஒரு அரசாங்க அமைப்பிடம் எழுத்துப் பூர்வமான ஆவணம் சிக்குவது சாதாரண காரியம் அல்ல. சிக்கிக் கொள்வார்கள் சிந்துபாத்கள். உன் கட்சி மாவட்டச் செயலாளர், என் கட்சி முதன்மைச் செயலாளர் என்று வந்தால் எந்த முகத்தைத் தூக்கிக் கொண்டு ஊளையிடுவோம் சொல்லுங்கள். ஏற்கனவே நீதித் துறை நிர்வாக விஷயங்களில் தலையிட ஆரம்பித்தாகி விட்டது.
அரசியல், சட்டம் என அந்த ஒரு விஷயத்தில் தமிழக கட்சிகளுக்கு எதிராகவே இருக்கப் போகிறது என்று தோன்றுகிறது. நான் சொல்லவில்லை. யதார்த்தம் அப்படித்தான் இருக்கிறது. ஏற்கனவே தாக்குதல் ஆட்டம் ஆட வேண்டிய பலமான எதிர்க்கட்சி தடுப்பு ஆட்டம் ஆடுகிறதா இல்லையா என்று நீங்களே சொல்லுங்கள். ஆக அவர்கள் காட்டில் அடை மழை.
இந்தக் குறிப்பிற்கு தலைப்பு வைத்தால் இப்படித்தான் வைப்பேன். பத்ம வியூகத்தில் பிரம்மாஸ்திரம்!
சரவணன் சந்திரன் எழுத்தாளர்; அரசியல் விமர்சகர். ரோலக்ஸ் வாட்ச்
, ஐந்து முதலைகளின் கதை
நாவல்களின் ஆசிரியர். சமீபத்தில் வெளியான நாவல் ‘அஜ்வா’.
வீடியோ : புதுக்கோட்டையில் சாதி கலவர சூழல்: பின்னணியில் அமைச்சர் விஜயபாஸ்கர்?