ML Update May 16-22
முழுமையாக மூன்று ஆண்டுகளாக நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருக்கிறார். இந்த மூன்று ஆண்டுகளில் பாஜக பல சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது ஆட்சியில் இருக்கிறது. தேர்தல்களில் தோல்வியடைந்த இடங்களில் கட்சி தாவல்கள் மூலம் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆட்சியை கைப்பற்றுவது என்ற பொருளில் கடந்த காலங்களில் பாஜகவின் ஆதிக்கம் இப்போது கூடுதலாக போல் இருந்ததில்லை. தனது பாசிச நிகழ்ச்சி நிரலை கட்டவிழ்த்து விட, அதை மக்கள் மீது செலுத்த சங்பரிவார் இந்த தருணத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறது.
வெறுப்புப் பேச்சு பேசுவதை வழக்கமாக கொண்ட, உத்தரபிரதேசத்தில் பல மத வன்முறை வழக்குகளில் முதன்மை குற்றவாளியான, குண்டர்களை கொண்டு தனிப்படை அமைக்கும் சிற்பியான யோகி ஆதித்யநாத் போன்ற ஒருவர் நாட்டின் மக்கள் தொகை அதிகமான ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக்கப்படுகிறார். நாடு முழுவதும் பாஜக தலைவர்களும் ஆதரவாளர்களும் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை தாக்குகிறார்கள். படுகொலை செய்கிறார்கள்.
அதிகார மமதை கொண்ட ஆட்சியாளர்களுக்கு இது நிச்சயம் கொண்டாட்ட நேரம்தான். ‘புதிய இந்தியாவின்’ அடித்தளம் என்று மோடி இதை அழைக்கிறார். ஆனால் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நிலைமைகள் படுமோசமாக இருக்கின்றன. இந்திய மக்களின் அரசியல்சாசன உரிமைகள் அதிகரித்த அளவில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன, நமது சமூக இருத்தலை மதவெறி துருவச்சேர்க்கையும் வெறுப்பும் சூழ்ந்துகொண்டுள்ளது என்பதனால் மட்டுமல்ல; பொருளாதார பாதுகாப்பின்மை, நிச்சயமின்மை என்ற பூதம், நகர்ப்புற இந்தியாவை விரட்டத் துவங்கியுள்ளது என்பதாலும்தான்.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக நாட்டுப்புற இந்தியாவை விவசாய நெருக்கடி அழிவில் தள்ளியுள்ளதற்கு அக்கம்பக்கமாக, நாடெங்கும் வேலையின்மை மிகப் பெரிய அளவுக்கு அதிகரித்து வருகிறது. இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டில், இந்திய பொருளாதாரம் ஒட்டுமொத்த விதத்தில் வளர்ச்சியை பதிவு செய்தபோதும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. இப்போது வளர்ச்சி விகிதமே பெருமளவு சரிந்துள்ள நிலையில், வேலை வாய்ப்பின்மை மேலும் அதிகரித்துள்ளது. பணமதிப்பகற்றுதலின் ஆறு மாத காலம் பல தொழில்களிலும் அளிப்பு – உற்பத்தி சங்கிலியை அறுத்து விட்டதால் பிரச்சனை மேலும் தீவிரமடைந்துள்ளது.
வேலைவாய்ப்பின்மை விவசாயம், உற்பத்தித் துறைகளுடன் நின்றுவிடவில்லை. தகவல் தொழில்நுட்பத்தால் பொருளாதாரம் முன்செலுத்தப்படும் சேவைத் துறையிலும் – இந்தத் துறையில் பெருமளவு வேலை வாய்ப்புகள் இருந்தன – இதுதான் யதார்த்தம். அய்டி + அய்டி = அய்டி (தகவல் தொழில்நுட்பம் + இந்திய திறமை = நாளைய இந்தியா) என்ற வாய்ச்சவடால் மூலம் மோடி தனது பார்வையாளர்களைக் கவர முயற்சி செய்துகொண்டிருந்தபோது, இந்தியாவின் முக்கியமான அய்டி நிறுவனங்களில் இருந்து வந்து கெட்ட செய்தியை வர்த்தக நாளேடுகள் பின்னுக்குத் தள்ள முடியவில்லை.
கிட்டத்தட்ட ஒரு வெளியேற்ற அறிவிப்பு புரட்சி அய்டி துறையை தாக்கியிருக்கிறது; பெரிய அய்டி நிறுவனங்கள் பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்யவுள்ளன. இது ஒரே ஒரு முறை நடக்கப் போவதல்ல. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 2 லட்சம் அய்டி ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதிகரித்து வருகிற தானியங்கிமயம் ஆளெடுப்பை குறைக்கும்போது, இந்த வெளியேற்றுதல்களுக்கு தொழில்நுட்பம் ஒரு காரணம் என்றால், குறை சம்பள வேலைகளை இந்திய அய்டி நிறுவனங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்யும் அய்க்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் காணப்படுகிற பாதுகாப்பு அலை மிகவும் முக்கிய காரணமாக இருக்கும்.
திட்ட கமிசனுக்கு பதில் வந்திருக்கிற நிதி ஆயோக் நிர்வாகிகள், இந்த வேலைவாய்ப்பின்மை நெருக்கடியை குறைத்துக் காட்டப்பார்க்கிறார்கள். வேலைவாய்ப்பின்மை ‘தன்னார்வ’ இயல்பு கொண்டது என்று அவர்கள் சொல்கிறார்கள். வேறு விதமாகச் சொல்வதென்றால், வேலை வாய்ப்புகள் இருக்கின்றன, வேலை தேடும் இளைஞர்கள் கூலி, வேலை நிலைமைகள், பதவி உயர்வு போன்ற விசயங்கள் பற்றி அலட்டிக் கொள்வதால், கிடைத்த வேலையைச் செய்வதற்குப் பதிலாக, தாங்கள் விரும்பும் வேலைக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு விருப்பமான இந்த விளக்கமும் அய்டி நிறுவனங்களின் ஆட்குறைப்பும் பொருந்திப் போகவில்லை.
வேலை தேடுபவர்கள் தாங்கள் விரும்பும் வேலைக்காக காத்திருப்பதுதான் வேலைவாய்ப்பின்மைக்கு காரணம் என்று சொல்லி பிரச்சனையை மலினப்படுத்தாமல், அரசாங்கம் யதார்த்த நிலைமைகளை அங்கீகரித்து, இந்த நெருக்கடியில் இருந்து மீள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நாம் போதுமான அளவுக்கு வெற்று ஆரவாரங்களை கேட்டுவிட்டோம்; வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை, மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, துவங்கு இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற மோடியின் எல்லா ஆரவார திட்டங்களின் கூட்டு மதிப்பு மிகப்பெரிய பூஜ்ஜியம்தான்.
உண்மையில், இந்தியாவில் இன்று நாம் எதிர்கொள்வது, வேலை வாய்ப்பின்மையும், குறை வேலை வாய்ப்பும் மட்டுமல்ல, தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணி பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, பணியிட பாதுகாப்பு, கவுரவும், உரிமைகள் ஆகியவை இல்லாத வேலை வாய்ப்புகளும்தான்.
இந்திய அரசாங்கத்தின் 2013 – 2014 வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பின்மை ஆய்வின்படி, நாட்டில் உள்ள 47.5 கோடி தொழிலாளர்களில் 40 கோடிக்கும் மேற்பட்டோருக்கு பணிப் பாதுகாப்பு, சட்டப்பாதுகாப்பு இல்லை. ஒப்பந்த முறை பெருமளவில் நடைமுறையில் உள்ளது; ஆனால் நாட்டின் 66% ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எந்த எழுத்துபூர்வமான ஒப்பந்தமும் இல்லை. இந்தியத் தொழிலாளர்களில் 16.5% பேர் மட்டும்தான் தொடர்ச்சியான ஊதியம் பெறுகிறார்கள். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 78% குடும்பங்களில் முறையான தொடர்ச்சியான ஊதியம் பெறுபவர் யாருமில்லை.
இதுபோன்ற ஒரு நாட்டின் பிரதமர் வெற்று ஆரவாரத்தில் ஈடுபட்டிருக்கும்போது, அரசாங்கம் அமர்த்தியிருக்கிற பொருளாதார அறிஞர்கள் ‘தன்னார்வ வேலை வாய்ப்பின்மை’ என்று பேசுகின்றனர்.
வேலை வாய்ப்பின்மை ஆட்சியாளர்கள் கையில் இருக்கும் உள்ளாற்றல்மிக்க அரசியல் ஆயுதம்தான். வேலை வாய்ப்பு இல்லாதவர்களின் சீற்றத்தை, விரக்தியை, தங்கள் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு எரிபொருளாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள். வேலை வாய்ப்பின்மை பசு பாதுகாப்பாளர்களின் எண்ணிக்கையை, இந்திய தெருக்களை இன்று கண்காணிக்கும் அதுபோன்ற பல கும்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
எனவே, மக்கள் நலன், ஜனநாயகம் பற்றி அக்கறை கொண்டவர்களுக்கு வேலை வாய்ப்பின்மையும் உடனடி கவனம் கோரும் பிரச்சனையே. மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மோடி இன்று தனது எதிர்காலத் திட்டங்களாக ‘புதிய இந்தியா’, ‘நாளைய இந்தியா’ என்ற வெற்று ஆரவாரங்கள் கொண்டு நம்மை தாக்கும்போது, இதுபோன்ற வெற்று வாய்வீச்சுக்களின் காலம் முடிந்துவிட்டது என்று நாம் அவருக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
விளைவுகள் பற்றி பேச வேண்டிய நேரம் இது; விவசாய நெருக்கடி மற்றும் வேலையின்மை என்ற பேரழிவுமிக்க சேர்க்கையை நாடு இனியும் பொறுத்துக் கொள்ளாது.
ML Update May 16-22
வீடியோ: Country of crony capitalism: Vijay Mallaya and a farmer not equal in any way…