’ஒடியன்’ லட்சுமணன்
பழங்குடிகளின் பல்வேறு்கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுதும் தனது போர்முழக்கத்தை தொடங்குகிறது தமிழ்நாடு் பழங்குடி மக்கள் சங்கம். கடம்பூர் ராமசாமி அந்தப்போராட்ட நோட்டீசின் நகலை அனுப்பியிருந்தார்.
அதிலொரு கோரிக்கை
‘பழங்குடிகளுக்கு இனச்சன்று வழங்கும்போது மத அடையாளங்களை குறிப்பிடுவதை நிறுத்து’
2006வனச்சட்டத்தை அமுல் படுத்துதல், NTCA வை திரும்பப்பெறல் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகளோடு பண்பாட்டுக்கோரிக்கைகளையும் முன்னெடுப்பது உற்சாகமளிக்கிறது.
இது எனக்கு 1998 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை நினைவுக்கு கொண்டுவருகிறது
காரமடை வனச்சரகத்தில், அடர்ந்த வனம் தாண்டிப்போனால் , அரக்கடவு என்னும் இருளர் பதிக்கு போகமுடியும்.அந்த பதியில் வசித்தவேட்டைமூப்பன், தன் மகன் சொடங்கனுக்கு இனச்சன்று (Community certificate) கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
நமக்கு கொடுப்பதுபோல் அவ்வளவு எளிதில் கம்யூனிட்டி சர்ட்டிபிக்கேட் பழங்குடிகளுக்கு கிடைத்துவிடாது. அந்த அப்ளிகேசனே 30 பக்கத்தில் ஒரு புக்லெட் போல இருக்கும். பல கட்ட விசாரணை நடக்கும்.
ஒரு வெள்ளிக்கிழமை மதியம் என நினைக்கிறேன். தாசில்தார்அலுவலகத்திலிருந்து ஊழியர் ஒருவர் அந்த விசாரணைக்காக அரக்கடவுக்கு வந்திருந்தார். வந்தவர் வேட்டையின் வீட்டை கண்டுபிடித்து சேரைக் கொண்டுவரச்சொல்லி வாசலில் இருந்த ஊஞ்சமரத்தின்கீழ் அமர்ந்துகொண்டார்.
நின்னே காங்காக்கு ஆப்பீசர் வந்திருக்கான் என்ற தகவல்போனதால் வேட்டை
அடித்துப்பிடித்து வனத்துக்குள்ளிருந்து களாக்காய் மூட்டையோடு வந்து நின்றார்.
கேள்விகளை, கேட்டுக்கேட்டு ஓப்பன் பேடில் வைத்திருந்த தாளில் டிக் அடிக்கத் தொடங்கினார் ஆபீசர். அதில் ஒரு கேள்வி மதம் குறித்தது…
‘நீ கிருஷ்டீனா’ என்று கேட்டார்
வேட்டை குழப்பமாகி என்னைப்பார்த்தார். நீங்க பேசக்கூடாது என்று ஆஃபீசர் ஏற்கனவே கட்டளை போட்டிருந்ததால் நான் முகத்தை திருப்பிக்கொண்டேன்.
‘கிருஷ்டீனா? இல்ல இந்துவா? ரெண்டில் எதுன்னு கேக்கேன்.. எதுக்கு இப்புடி திருதிருன்னு முழிக்கறே’ அதட்டிக் கேட்டார்
“நான் கிருச்சுடீனும் இல்லே… இந்துவும் இல்லே”
“அப்புறோ..?” நக்கலாகக்கேட்டார்.
‘வெறும்இருளந்தான்’ பளிச்சென்று சொன்னார் வேட்டை.
வந்தவர் குழப்பத்தின் உச்சத்துக்கே போய்விட்டார்.
“அய்யோ.. நீ என்ன சாமீப்பா கும்படறே..
ஏசுவையா.. பெருமாளையா?”
“பானையக் கும்படறேன்… பாட்டன் பூட்டன் முண்டும். எலும்பும் வெச்சிருக்கும் பானையக்கும்படறேன்..”
ஆபீசர் டென்சாகி தலையில் கைவைத்துக்கொண்டார்.
‘பெசாது கூரே’ எம்த்து கூரையில கெடக்கு வேணுமின்னா வந்து பாத்துக்க’என்று சடசடவென்று சொல்லிவிட்டு அவர் கையைப்பிடித்து இழுத்தார்.
அவருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது
“ஏப்பா இவுரு என்னசாமிய கும்பிடுறார்?” அங்கே வந்த பீட் வாட்சரிடம் கேட்டார்.
“நீங்க சொன்ன ரெண்டையும் கும்பிடமாட்டாங்க பூட்டன் பாட்டன்தா சாமி”
“சரி இந்துன்னு போட்டுக்கலாமா.. இந்துன்னே போட்டுக்கறேன்” ஜீப்பை கிளப்பிப் போயேவிட்டார்.
இந்த சம்பவத்தைத்தான் ஒடியன் இரண்டாம் பதிப்பில் ஒரு கவிதையாக சேர்த்திருந்தேன்.
என்னாக்கு எத்து பேரே
இச்சா லெதுகே ஆப்பீசா
இந்து இருளங்கெ
இலேந்தே கிருத்துவ இருளங்கே
நேமு ரெண்டாலும் இல்லே
வெறூம் இருளந்தே
நீ .. காங்கே
எமக்குந்து பெசாது கூரே கெடாக்கு
பெசாதுகூரை: ஒரு சின்ன தடுப்பஅறை நம்ம சாமி ரூம்ன்னு சொல்லுவோமே அது மாதிரி. அங்கே இருக்கும் ஒரு பானையில் மூத்தவர்களின் சில எலும்புகளும் ஆடைகளும் சேர்த்துவைத்திருப்பார்கள். எங்கே வெளியே போனாலும்.. விதைக்கத் தொடங்கினாலும் நல்லது கெட்டதுன்னாலும் பெசாதுகூரையில் இருக்கும் அந்த பானையை வணங்கிவிட்டுத்தான் செல்வார்கள்.
ஆமாம் அவர்கள் வெறும் இருளர்கள்தான். நாம்தான் நமக்கான மதத்துக்குள் அவர்களை கரைத்தோம் நமது கடவுளை அவர்களிடம் திணித்தோம். அவர்களின் வாழ்வை வனத்தை, பண்பாட்டை, மொழியை சூரையாடினோம்.
பழங்குடிகளோடும் அவர்களின் வாழ்வோடும் இரண்டறக்கலந்துவிட்ட தமிழ்நாடு பழங்குடிமக்கள் சங்கம் ஆதிவாசிகள் அரசியலின் அடிநாதத்தை ஆன்மாவைத் தொட்டு எழுவது உத்வேகமளிக்கிறது.
இதை அவர்கள் செய்யாமல் யார் செய்யமுடியும்?
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்னும் ஓயாமல் ஒதுங்காமல் பழங்குடிகளுக்கான உரிமைப்போரை தொடர்ந்து முன்னெடுக்கும் . PL Sundaram S MohankumarVpg Erode கடம்பூர் ராமசாமி.மற்றும். ஏனைய தோழர்களுக்கு என் அன்பும் நன்றியும்.
ஒடியன் லட்சுமணன், எழுத்தாளர்; செயற்பாட்டாளர்.
வீடியோ: மயிலாப்பூர், பெசண்ட்நகர் தெரியும் நாயடிச்சான் பறச்சேரி தெரியுமா? கறுப்பர் நகரம் நாவலாசிரியர் கரன் கார்க்கி அறியப்படாத சென்னையைப் பற்றி பேசுகிறார்…
அதையேதான் நாமும் சொல்கிறோம் நாங்கள் இந்துக்கள் அல்லர். இம்மண்ணின் பூர்வகுடிகள்
LikeLike
அதைத் தான் நாமும் சொல்கிறோம் நாங்கள் இந்துக்கள் அல்லர். இம்மண்ணின் பூர்வ குடிமக்கள்
LikeLike