சி. மதிவாணன்

தமிழ்நாடு வரிசையாக சில எழுச்சிகளைக் கண்டு வருகிறது. பொதுவாக, திரளும் இளைஞர்கள், அவர்களைப் பின் தொடரும் பொது மக்கள் என்ற போக்குக் காணப்படுகிறது. நிகழ்ந்துகொண்டிருக்கும் நெடுவாசல் அதனை மற்றொரு முறை காட்டுகிறது.
இது புதிய நிகழ்வு என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். அதுமட்டும் போதாது… கற்றுக்கொள்ள வேண்டும். இப்படிச் சொல்வதற்கான காரணங்கள்…
- பன்னாட்டுக் கம்பெனிகளின் படையெடுப்பு, அவற்றின் கொள்ளை, இயற்கை வளத்தைச் சூறையாடல், அதனால் ஏற்படும் வாழ்வாதார இழப்பு கடந்த சில பத்தாண்டுகளில் வேகம் பிடித்துள்ளது.
-
மத்திய காவி ஆட்சி கல்வி பறிப்பு, மக்களின் கையில் உள்ள பணப் பறிப்பு, தமிழகத்தின் மரபான இயற்கை வள ஆதாரங்கள் -நீராதாரங்கள் பறிப்பு, விவசாய அழிப்பு என்பதில் எந்தத் தயக்கமும் இன்றி கடந்த சில ஆண்டுகளாகப் பயணப்படுகிறது.
-
கடந்த சில பத்தாண்டுகளின், குறிப்பாக அஇஅதிமுக ஆட்சி, இடைவெளியில் வந்த திமுக ஆட்சிகள் செய்த ஊழல், அதிகார துஷ்பிரயோகம், மன்னர் மனப்பான்மையிலான ஜனநாய மறுப்பு மக்களின் அதிருப்தியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக அஇஅதிமுகவின் மாஃபியா கொள்ளை மிகப் பெரும் மக்கள் பிரிவின் எதிர்ப்பைச் சந்திக்கிறது. அக்கட்சியின் பிற்போக்கு அடித்தளமே அதனை எதிர்க்கிறது.
-
கிராமப்புரங்களின் நடுத்தர மேல்-இடை- கீழ் தட்டு இளைஞர்கள் அறிவொளி பரப்புக்கு வர, வழக்கமான ஊடகங்கள் தாண்டி செய்திகளைக் கொண்டு போகும் சமூக ஊடகங்களின் பிறப்பும் சேர, புதிய வகையிலான அரசியல் தெளிவு பெற்ற பிரிவினர் உருவாகியிருக்கின்றனர்.
-
மக்கள் தொகையில் மிகப் பெரும்பகுதி இளைஞர்களாக இருக்க அவர்களின் அனைந்து கனவுகளும், படிப்பு- வேலை- காதல்- எதிர்காலம் நிச்சயமற்றுப் போயிருப்பது மிகப் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வழக்கமான கட்சிகள், திமுக- அஇஅதிமுக- காங்கிரஸ்- பயங்கர ஜனதா கட்சி உள்ளிட்ட வலதுசாரிக் கட்சிகள் இந்தப் பிரச்சனைகளைக் கையில் எடுக்கவில்லை. எடுக்க முடியாது. எனவே, இந்தப் பிரச்சனைகளில் மக்களுக்கு எதிராகச் செயல்பட்டன. அவற்றின் கட்டமைப்பே நிகழ்காலத்திற்குப் பொருந்தாதாக இருக்கிறது. உதாரணமாக, 40 வயது கடந்த தலைவரின் மகனே கட்சியின் மாநில/ மாவட்ட/ உள்ளூர் இளைய தலைவராக இருப்பது அனைத்து கட்சிகளிலும் நடக்கிறது. நிகழ்கால Political Class சமகால மக்களின் பிரதிநிதிகளாக இல்லை.
-
இடதுசாரிக் கட்சிகள் வழக்கமான தங்கள் அரசியலைச் செய்கிறார்கள். காலத்தின் மாற்றத்தைப் புரிந்துகொள்ளவில்லை. வலது சாரி அரசியலின் இடதுசாரி வாலாக இருந்தார்கள். இப்போது அந்த நோயிலிருந்து மீள முயற்சிக்கிறார்கள். ஆனால், காலத்தின் தேவைக்குப் போதவில்லை. வேறு சிலர், இடதுசாரி அரசியலின் அதி தீவிரப் பிரிவினராக முழங்குகிறார்கள். அல்லது/ அதனுடன், நடப்பது என்னவென்று தெரியாமல், ”போல செய்வதை” நிகழ்த்தி புதிய அரசியல் போக்கினரை ஈர்த்துவிடப் பார்க்கின்றனர். மக்களிடம் கற்பது- மக்களுக்குக் கற்பிப்பது- அமைப்பாக்குவது என்ற மார்க்சிய- லெனினிய வழியை மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
வரும் காலத்தில் புதிய வகை அரசியல் எழுச்சிகள் அணி வகுக்கும். அவற்றுக்கே உரிய வகையில் அவை பயணப்படும். ஆனால்.. சில வலுவான காரணங்கள் இருக்கின்றன. புதிய அரசியல் எழுச்சி அந்தக் காரணங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், அவை புதிய அரசியல் எழுச்சியைப் பின்னுக்குத் தள்ளும். அதன் பின் வரலாறு அதற்கே உரிய விதிகளின் படி பயணிக்கும்.
ஒருவேளை கம்யூனிஸ்டுகள் கற்பதற்குத் தயார் என்றால்…? மாற்றிக்கொள்ளத் தயார் என்றால்…..?
அடிப்பொடிகளை வைத்து கட்சி நடத்தி அடையாள அரசியல் செய்வதை விட்டு வெளியே வருவார்கள் என்றால்? இப்படி ஒரு அதிசயம் நடந்துவிட்டால்… தமிழகத்தின் எழுச்சி புதிய மாறுதலுக்கும், மாறுபட்ட இந்தியாவிற்கும் புதிய பாதையைப் படைக்கும்.
சி. மதிவாணன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.