எழுத்தாளரும் பத்திரிகையாளருமான க.சீ. சிவக்குமார், மாடியிலிருந்து தவறி விழுந்ததில் சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள், நண்பர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Aadhavan Dheetchanya
எங்கோ இருந்திருப்பாய், நன்றாக வாழவேண்டும் என்று நான் தானடா சிவா நீ பெங்களூரில் குடியேறக் காரணம். இப்படி அகாலத்தில் சாவதற்கா…?
எழுத்தாளர் க.சீ.சிவகுமார் மாடியிலிருந்து தவறி விழுந்து இன்று மாலை நம்மை விட்டுப் பிரிந்தேவிட்டான்.
கருப்பு கருணா
அண்ணே…அண்ணே..என மனம் நிறைந்தழைக்கும் அன்புத்தம்பி..தோழன்…எழுத்தாளன் க.சீ.சிவக்குமார்..இன்று மாலை பெங்களூரில் அகால மரணம்.
கன்னிவாடியின் சிவப்பு நிலா மறைந்தது…கொடுமையடா க.சீ…
Vaa Manikandan
எழுத்தாளர் க.சீ.சிவக்குமார் இன்று காலமாகிவிட்டார். அவரது உடல் பெங்களூரு பன்னர்கட்டா சாலையில் உள்ள ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு நாளை காலை கன்னிவாடிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
Yamuna Rajendran
எப்போதும் பால்கணியில் நிற்கும்போது பாதுகாப்பாக உணர்ந்ததில்லை. குழந்தைகளை ஒரு கையில் பிடித்துக் கொண்டு முடிந்தவரை வீட்டினுள் ஒரு காலை இழுத்து வைத்துக் கொண்டு எட்டிப் பார்க்க அனுமதிப்பேன். மாடியில் இருந்து விழுந்து மரணமடைந்திருக்கிறார் சிறுகதையாசிரியர் க.சீ.சிவக்குமார். குழந்தைகளுக்காகவாவது வாழ வேண்டும் எனும் ஆசை இப்போதெல்லாம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. விபத்தில் ஏற்படும் மரணம் கொடுமையானது. அதனை இரு முறை சொந்த வாழ்வில் அனுபவத்திருக்கிறேன். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பல தமிழக எழுத்தாளர்களை நேரில் அறிந்ததில்லை. அவரை நேசித்தவர்களுக்காக மனம் கலங்குகிறது..
யெஸ். பாலபாரதி
எழுத்தாளர் க.சீ.சிவக்குமாருக்கு அஞ்சலி
Saraa Subramaniam
எழுத்தாளர் க.சீ.சிவக்குமார்… விகடன் பிரசுரத்தில் இருந்தபோது ‘ஆதிமங்கலத்து விசேஷங்கள்’ புரட்டியவுடன், ‘யார் சார் இவரு… எனக்கே பார்க்கணும் போல இருக்கு’ எனும் ரேஞ்சில் கேட்டு, அடுத்த வாரமே அவருடன் தேநீர் அருந்தியது சட்டென நினைவுக்கு வருகிறது. மனதில் தோன்றியதை யோசிக்காமல் செய்து திகைக்கவைப்பதில் ஃபாரஸ்ட் கம்ப் ரகம். அவரது மறைவுச் செய்தி, அதிர்ச்சியையும் கவலையையும் கலந்த இனம்புரியாத மனநிலையைத் தருகிறது.
இந்த விரக்தியான சூழலிலும், க.சீ.சிவக்குமார் அவர்களின் எழுத்துகளையும் வாக்கியங்களையும் நினைவுகூர்ந்து அசைபோட்டால் எல்லாம் மறந்து சிரிப்பு பீறிட்டு வரும். அதுதான் அவரது எழுத்தின் வல்லமை.
வேறென்ன சொல்ல… இவ்ளோதான் வாழ்க்கையா?
Vijaianand Subbaraj
கரகப்பான குரல்
நலம் விசாரிக்குமுன்பே
சிரிக்கும் உன் முகம்
க.சீ.சிவக்குமார்.
Thamizhnathy
எழுத்தாளர் க.சீ.சிவகுமார் மாடியிலிருந்து தவறுதலாக விழுந்து இறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இவருக்கு கோபமே வராதோ என்று எண்ணும்படியாக, எப்போதும் சிரிப்பில் மலர்ந்த முகம்….அவரது பேச்சும் எதிரிலிருப்பவரை மலர்த்துவதே. சேலத்தில் ‘முரண்களரி’யில் முதன்முதலில் கண்டேன். பெரிய பரிச்சயமில்லை. ஆனால், தெரியும்.
வாழ்வு குறித்து எத்தனை கனவுகளைக் காண்கிறோம்! திட்டங்களை வகுக்கிறோம்! எல்லாம் ஒரு நொடிப்பொழுதில் மணற்கோட்டைபோல சரிந்திடத்தானா?
வாழ்வின் அநிச்சயம் அச்சுறுத்துகிறது!
க.சீ.சிவகுமாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம்…
Krishna Prabhu
அடுத்தவர்கள் மனதைப் புண்படுத்தாத வகையில் நையாண்டியும் பகடியும் குசும்பும் செய்வதில் இவர் மிகுந்த திறமைசாலி. எப்பொழுதாவது தொலைபேசியில் அழைப்பார்.
‘சொல்லுங்க சிவா… என்ன ஸ்பெஷல்’ என்று கேட்டால், ‘உங்க குரல்தான் ஸ்பெஷல்… உங்கக் குரல கேக்கனும் போல இருந்தது. அதான் கூப்பிட்டேன்’ என்பார். மேலதிக நலம் விசாரித்துவிட்டு செல்பேசியைத் துண்டிப்பார்.
எங்கெங்கோ பயணிக்கிறோம். எங்கெங்கோ செல்கிறோம். ஒரு திருப்பம் வாழ்வையே புரட்டிவிடுகிறது. எனக்கான குரல்களில் ஒன்று இனிமேல் இல்லை என்றான கொடிய தினம் இன்று.
க. சீ. சிவகுமார்…
Hugs & love to you siva… Bye bye to you siva…
Lakshmi Saravanakumar
ப்ரியத்திற்குரியவர்கள் ஏன் இத்தனை சீக்கிரமாய் பிரிந்து போகிறார்கள்.
Jeevasundari Balan
புத்தகக் காட்சியில் கடைசியாகப் பார்த்தேன். இனி அப்படித்தான் சொல்ல வேண்டும். மகளின் புத்தகம் வந்திருப்பதாகப் பெருமை பொங்கச் சொன்னவனை இனி எப்போது பார்ப்பது? பெங்களூரில் செந்திலுக்கு போன் செய்து கேட்டால், அவனும் பேச முடியாமல் திணறுகிறான். இரண்டு நாட்களின் முன் கூட கேலி பேசிச் சிரித்தோமே….
சாந்தியும் குழந்தைகளும் நினைவில் நிழலாடுகிறார்கள்.
எவ்வளவு மென்மையானவன் நீ. அண்ணனையும் மதினியையும் இனி கனிவாக அழைப்பாயா? விடை பெறாமலே சென்று விட்ட மைத்துனனே…. கண்களில் கண்ணீர் திரையிடுகிறது.
சென்று வா தோழனே…..
Chandra Thangaraj
எவ்வளவு துயரத்தையும் நகைச்சுவையாக கடந்து செல்லும் மனிதன் எழுத்தாளர் க.சீ.சிவக்குமார். அவர் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி வேதனையாக இருக்கிறது. அவருக்கு என் ஆழ்ந்த அஞ்சலி.
Arul Ezhilan
வாழ்வின் எவ்விடத்திலும் வன்முறையற்று வாழ்ந்ததோடு, பிரத்தியார் மீது அதை பிரயோகிக்காமலும் வாழ்ந்த நண்பன் சிவக்குமார்.மிஸ் யூ சிவக்குமார்!