ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் முடிவு ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளதாக ஸ்டாண்டர்ட் & புவர் என்ற பன்னாட்டு கடன் அளகீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் பிரதமர் நரேந்திரமோடி கணக்கில் வராத பணத்தை ஒழிக்கும் நோக்கமாக ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்தார். 86 சதவீத மக்கள் பயன்படுத்து பணப்பறிமாற்றம் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது. முன்னாள் பிரதமரும் நிதியமைச்சருமான மன்மோகன் சிங், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்திய சென், மார்க்சிய பொருளாதார நிபுணர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த முடிவை கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் பன்னாடு கடன் அளகீட்டு நிறுவனம் எஸ் & பி நிறுவனத்தின் இயக்குநர் கைரன் கரி புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது, சார்பற்ற, சுதந்திர நிறுவனமாக விளங்கிய ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையை செலாவணி நீக்க முடிவு கடுமையாக பாதித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி கவர்னராக உர்ஜித் படேல், பொறுப்பேற்றபின் எதிர்கொள்ளும் இரண்டாவது குற்றச்சாட்டு இது. முன்னதாக வட்டி விகிதத்தை மாற்றியமைக்காததற்கு உர்ஜித் மீது விமர்சனம் எழுந்தது.