மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதாக முதன் முதலில் செய்தி வெளியிட்டது தந்தி டிவி. இந்தச் செய்திக்கு அடுத்து அனைத்து ஊடகங்களும் அப்படியே வெளியிட்டன.
இதற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
தந்தி டிவி முழு பொறுப்பேற்க வேண்டும்
எந்த அடிப்படையில் ஊடகங்கள் ஜெயா மரணம் என அறிவித்தது ?
ஒரு மாநில முதல்வர் குறித்த செய்தியே இப்படி நம்பகத்தன்மை அற்றதாக இருக்கிறதே.
இவர்கள் சாமானியர்கள் குறித்துச் சொல்லும் செய்தியை எப்படி நம்புவது??
சுயபுத்தி இல்லாத கோமாளி ஊடகங்கள் …
மற்றவர்களின் மரணத்திலும், வீழ்ச்சியிலும் மகிழ்வது மனநோய்..தமிழ்நாட்டு ஊடகங்கள் மரணத்தை எதிர்நோக்கியே இருக்கிறது..ஒருவர் வாழவேண்டும் என்ற கருணையும் இவர்களுக்கு கிடையாது..எந்த விமர்சனங்கள், தம் கருத்துக்கு மாறுபட்டவராக இருந்தாலும்., ஒரு மனிதனை மனதளவில் சாகடித்து, செய்திகளை முந்தித்தரவேண்டும் என்ற வெறியில் ஊடகங்கள் ஊழித்தாண்டவம் ஆடுகிறது..தமிழ்நாட்டு (சில விதிவிலக்குகள் உண்டு) ஊடகங்கள் பல நடிகைகளின் தொடைக்கறி காட்சிகள், கேளிக்கைகள், மரண அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக மெரினா கடற்கரையில் பிச்சை எடுத்து கவுரமாக வாழலாம்…கேவலம்…
- எழுத்தாளர் வாசுதேவன்
என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே?
சற்று முன் ஜெயலலிதா மறைந்தார் என எல்லா தமிழ் தொலைகாட்சிகளும் சொல்லின.
அரைக்கம்பத்தில் பறக்கும் அதிமுக கொடியும் காட்டப்பட்டது.
இப்போது அப்போலோ அந்த செய்தியை மறுக்கிறது. இன்னும் சிகிட்சையில் இருக்கிறார் என்கிறது
கொடியும் மறுபடி ஏற்றப்பட்டுவிட்டது.
அப்படியெனில் ஊடகங்களுக்கு அந்த செய்தியை சொன்னது யார்?
வதந்தியை நம்பி ஒரு கட்சி தன் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமா?
யாரோ ஒரு சக்திவாய்ந்த நபர்தான் இந்த தகவலை சொல்லியிருக்க வேண்டும்.
யார் அது?
சற்று முன்பு தந்தி டிவி, புதிய தலைமுறை போன்றவை முதல்வர் குறித்த தவறான தகவலை வெளியிட்டன. கடும் அதிர்வை ஏற்படுத்தியது. அடுத்த சில நிமிடங்களில் அந்த செய்தியை நிறுத்திக்கொண்டன. ஆனால் தேசிய செய்தி சேனல்களான NDTV, CNN NEWS 18, India Today, Times Now போன்றவை அவசரப்படவில்லை.
தமிழக அரசு, மருத்துவமனை, காவல்துறை என எந்த தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை வராமல் முன்னணி ஊடகங்கள் இப்படி செய்தியை வெளியிட்டது என்ன மாதிரியான தர்மம்? முன்பு நாளிதழ்/ பத்திரிக்கைகளில் ஒரு செய்தியை தவறாக போட்டால் மறுநாள்/வாரம் மன்னிப்பு கேட்பார்கள்.
ஆனால் அதைக்கூட செய்யாமல் கமுக்கமாக பழைய செய்திக்கே மாறிவிட்டார்கள். இவர்கள் செய்த தவறுக்கு ஒரே ஆதாரம் சோசியல் மீடியா ஆட்கள் எடுத்து வைத்திருக்கும் ஸ்க்ரீன் ஷாட்கள் மட்டுமே. செய்திகளை முந்தித்தருவதில் இப்படி ஒரு ஆர்வக்கோளாறா? சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்பவர்கள் இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்? தவறான தகவல் சொன்ன தமிழக செய்தி சேனல்கள் குறைந்தபட்சம் மன்னிப்பாவது கேட்டாக வேண்டும்.
இனி சமூக வலைத்தளங்களை விமர்சிக்கும் தார்மீக உரிமை உங்களுக்கு உள்ளதா என்பதை 100 முறை சுயபரிசீலனை செய்து கொள்ளுங்கள்.