இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை 15 லட்சமாக உயர்த்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஓ.பி.சி. என்னும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு ஓ.பி.சி. சான்றிதழ் பெறவேண்டுமானால், பெற்றோரின் ஆண்டு வருமானம் (கிரீமிலேயர்) ஆறு இலட்சம் ரூபாய்க்குள் தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், கடந்த 2013 ஆம் ஆண்டு, வருமான உச்ச வரம்பை நகர்ப்புறங்களில் 12 இலட்சம் ரூபாயாகவும், கிராமப்புறங்களில் 9 இலட்சம் ரூபாயாகவும் அதிகரிக்க வேண்டும் என்று வழங்கிய பரிந்துரையை மத்திய அரசு இதுவரை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் மண்டல்குழு பரிந்துரைத்தவாறு 27 விழுக்காடு இடங்களை ஓ.பி.சி. பிரிவினருக்கு நிரப்ப முடியாமல், பாதி அளவுதான் ஒதுக்கீடு செய்கின்ற நிலைமை இருப்பதால், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை அளித்தது.
தற்போதுள்ள நிலையில் (கிரீமிலேயர்) வருமான உச்ச வரம்பு 6 இலட்சம் என்பது நடைமுறை சாத்தியம் இல்லாத காரணத்தால் வருமான உச்ச வரம்பை ரூ.15 இலட்சமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.