சுவாதி கொலையில் வதந்திகளை பரப்பவேண்டாம் என்று காவல்துறை ஆணையர் வேண்டுகோள் விடுக்கிறார். வதந்திகளை வெளிப்படையாக பரப்புகிற பிரபல மனிதர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? சுவாதியின் கொலைக்கான காரணங்கள் வெளிப்படையாக விவாதிக்கப்படக்கூடாது என்று சிலர் எரிச்சலடைகின்றனர். அந்தரங்க காரணங்களுக்கான கொலைகளை காவல்துறை முறையாக விசாரிக்கவேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும். ஆனால் நம்பகத்தன்மையற்ற முரண்பாடான தகவல்களை, கதைகளை ஊடகங்களில் அவிழ்த்துவிடும்போது பொதுமக்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள்.
சுவாதியின் கொலை தொடர்பாக தமிழ்ச் செல்வன் என்பவர் தொலைக்காட்சி காமிராக்கள் முன்பு சாட்சியம் அளிக்கிறார். கொலைக்கு பல நாட்களுக்கு முன்பு ஒரு நபர் சுவாதியின் கன்னத்தில் அறைவதை தான் பார்த்ததாகவும் அந்தப் பெண் மெளனமாக அடியை வாங்கிக்கொண்டிருந்ததாகவும் கூறுகிறார். அதே நபர் கொலை நடந்த சமயத்தில் பிளாட்பாரத்தில் ஓடுவதைக் கண்டதாகவும் கூறுகிறார் ஒரு முக்கியமான சாட்சியம். அந்த சாட்சியம் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டாமா? அந்த சாட்சியத்தை பகிரங்கப்படுத்துவது குற்றவாளிக்கு உதவுவது போல ஆகாதா? அல்லது இது ஒரு திசை திருப்பலா?
சிசி டிவி கேமிரா பதிவில் வெளிட்ட உருவத்திற்கும் அதன் enhance செய்யப்பட்ட புகைப்படத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். சிசிடிவி கேமிரா பதிவு என்று அளிக்கப்படும் புகைப்படத்தின் நம்பகத்தன்மை இப்போது கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது.
சுவாதியின் குடும்பத்தினர் காவல்துறை தங்களை விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்வதாக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் செய்கின்றனர். இதைவிட அபத்தம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. குடும்பத்தினர் ஒத்துழைக்காவிட்டால் காவல்துறைனர் இந்த வழக்கை வேறு எப்படி விசாரிப்பார்கள். ?விசாரணையில் குடும்பத்தினர் போதுமான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற செய்தி தொடர்ந்து வெளிவருகிறது.
சுவாதியை கொன்றது மதுரை அரிவாள் என்று முதலில் சொல்லப்பட்டது, இப்போது பெங்களூர் அரிவாள் என்று சொல்லப்படுகிறது. தடய அறிவியல் துறையில் தமிழக காவல்துறை எவ்வளவு பின்தங்கியிருக்கிறது என்பது குறித்து அத்துறையின் முன்னால் இயக்குனர் பி. சந்திரசேகரன் கவலை தெரிவிக்கிறார்.
நீதிமன்றங்களோ ஊடகங்களோ இந்த வழக்கில் காவல்துறையின்மீது மிகையான அழுத்தத்தை கொடுப்பது எந்த வகையிலும் பயனற்ற ஒன்று. அது கடைசியில் சம்பந்தமில்லாத யாரையாவது என்கவுண்டர் செய்வதில் போய் முடியலாம்.
சந்தேகங்கள் தொடரும்வரை அது குறித்த கேள்விகள் தவிர்க்க இயலாதவை.
மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர்.