திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்து எழுதும் ஒரு முகநூல் பக்கத்தின் பெயர் கிளிமூக்கு அரக்கன். இந்தப் பக்கத்தில் பாஜக மூத்தத் தலைவர் சுப்பரமணியம் சுவாமியை பேராசான் என்றும் ஈழத்தை வைத்து சிலர் வியாபாரம் செய்வதாகவும் அதில் திருமுருகன் காந்தி முக்கியமானவர் என்றும் ஒரு பதிவு வெளியாகியுள்ளது. முதலில் கிளிமூக்கு அரக்கனின் பதிவு:
“வசூல் சக்கரவர்த்தியும் பேராசானும்
சில நேரங்களில் தம் மீதான குற்றங்களை துகிலுரிக்கின்றவர்களை எப்படியாவது சமூகத்தின் முன்பு குற்றவாளிகளாக காட்டவேண்டுமே என்ற பதட்டத்தில் இன்னும் மோசமாக செயல்பட்டு தனது சுயரூபத்தை வெளிப்படுத்திவிடும் முட்டாள்கள் உண்டு. பங்குனி17 சமூகவிரோத இயக்கத்தின் திருமுருகன் காந்தி இந்த வகைதான். பேராசான் சுப்பிரமணியஸ்வாமியை எப்போதுமே நான் வெளிப்படையாக பேராசான் என அழைப்பவன். வேதவிற்பன்னர்களின் அரசியல் சாணக்கியத்தனம் தமிழர்களுக்கு தேவை என்பதை ஆரம்பகாலம்தொட்டே நான் பரப்புரை செய்கிறேன். நிற்க. இப்போது திடீரென திருமுருகன் காந்தி பேராசான் சுப்பிரமணிய ஸ்வாமியை ஏதேதோ திட்டி ஒரு பதிவு போட்டிருக்கிறார். பேரறிவாளனின் விடுதலைக்காக மத்திய அரசையும், மாநில அரசையும் இரைஞ்சிக் கொண்டிருக்கும் இந்த முக்கியமான தருணத்தில் மத்திய அரசில் மோடிக்கே சவாலாக, முக்கியமான ஆளாக இருக்கும் சுஸ்வாமியை இப்போது சந்திக்கு இழுக்கும் இந்த பதிவால் அவர் சாதிக்க விரும்புவதென்ன? ரிசர்வ் வங்கி கவர்னர் வரை போட்டுப்பார்க்கும் சு.ஸ்வாமியை மிகவும் தவறான நேரத்தில் சுரண்டிப் பார்ப்பதன்மூலம் பேரறிவாளனின் விடுதலையை இன்னும் சிக்கலில் தள்ளவே திருமுருகன்காந்தி போன்றவர்கள் இப்படியான செயல்களைச் செய்கிறார்கள். பேரணியில் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்து கோஷம் போடவில்லை எனக் கேட்டால், இப்போது பேரறிவாளனின் விடுதலைதான் முக்கியம் எனவே ஜெவின் கோபத்துக்கு ஆளாகவேண்டாம் என பெரிய சூத்திரதாரிகள்போல பதில் வருகிறது. ஆனால் மத்திய அரசின் கோபத்துக்கு ஆளானால் மட்டும் பரவாயில்லையா? உளவுத்துறையின் எரிச்சலுக்கும், சு.ஸ்வாமியின் கோபத்துக்கும் ஆளானால் பரவாயில்லையா? எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம் பாருங்கள்?
ஈழம் பிசினஸ் இப்போது படுத்துவிட்டது. ஆனானப்பட்ட சீமானே நோட்டாவிடம் பரிதாபமாக தோற்றுவிட்டார். அதனால் திருமுருகன் போன்ற உண்டியல் ஒட்டுன்னிகளுக்கு பேரறிவாளனின் தலை தூக்குக்கயிற்றுக்கு கீழே தள்ளாடும் வரைதான் போனியாகும். அதற்காகத்தான் அற்புதம் அம்மாளை ஒருபுறம் நம்பவைத்துக் கொண்டே, ஏழு பேரும் நிரபராதிகள் என கோசமிடுவது, சுப்பிரமணியசாமியை வம்பிலுப்பது, இந்திய அரசை விமர்சனம் செய்வது என பேரறிவாளன் விடுதலையை காலவரையறையின்றி தள்ளிப்போடும் எல்லாம் நாசவேலைகளையும் செய்துவருகிறார். அதில் ஒன்றுதான் ஏதோ பழைய பதிவொன்றை தேடி எடுத்து சு.ஸ்வாமியை திட்டியதும். என்னையும், முரசொலி நாயகன் டான் அசோக்கையும் சு.ஸ்வாமியுடன் இணைத்து எழுதுவதால் எங்களுக்கு எந்த நட்டமும் இல்லை, நன்மைதான். ஆனால் இழப்பு பேரறிவாளனுக்கும், ஆறு பேருக்கும் தான். அதைத்தான் திருமுருகன் காந்தி போன்ற பிண வியாபாரிகள் விரும்புகிறார்கள்.
இந்தப் பதிவிற்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் எதிர்வினை பதிவு:
அதிகப்பட்ச மரியாதையாக சு.சாமியை, நாம் ’சுப்பிரமணிய சாமி’ என்றுதான் சொல்வோம், ஆனால் பி-டீமோ ’பேராசான் ஸ்வாமி’ (சாமி, சுவாமி அல்ல- ஸ்வாமி) என்றே அன்போடு அழைக்கிறது…
சு. ஸ்வாமிக்கு பக்த கோடிகள் இன்னும் அதிகம் பணிவிடை செய்வதை பார்க்க முடிகிறது. விடுதலைப்புலிகள் சகோதர இயக்கத்தினை கொன்றார்கள், இசுலாமியரைக் கொன்றார்கள் என்று ஒப்பாறி வைக்கிறது ஒரு பக்த கோடி, பேரறிவாளனைப் பற்றி ஒரு புனைக்கதையை அளக்கிறது அடுத்த ஸ்வாமி பக்தர்… இவர்கள் தங்கள் சொந்த கட்சித் தலைவர் ’கலைஞரையே’ பேராசான் என்று சொல்லாத இந்த ரசிக-பக்த கோடிகள் சு.சாமி (ஸ்வாமியை) பேராசான் என்று விளிப்பதை கேட்க கோடி புண்ணியம் செய்திருக்கனும் …..
தாமிரபரணியில் 12 தலித்துகளை கொன்ற, கொலைகார ஆட்சி நடத்தியவர்களெல்லாம் விடுதலைப்புலிகளை கேள்வி கேட்க வந்திருக்கு…
175000 கோடி ரூபாய் அடிச்சதுல 101 ரூபாய் மட்டும் மொய் வச்சா எப்படி?.. மீதி எல்லாம் பேராசான் ’ஸ்வாமி’ மாமா ஸ்வாகா செஞ்சுட்டாரா? ஒரு வேளை பங்கு பிரிப்பதில் பிரச்சனை காரணமாகத் தான் வழக்கு தொடுத்து இருக்காரா ’பேராசான் ஸ்வாமி’?
உங்க ஞாநியை, பேராசான் ஸ்வாமியை நாங்க எப்ப சாகடிக்கவேண்டும்னு சொன்னோம்.. கரப்பான் பூச்சியையும், பெருச்சாலியையும் கொல்றதுக்கு நாங்க எதுக்கப்பா?…ஆனாலும் உங்க ’பேராசான் ஸ்வாமி ’ மீதான பாசத்தினைப் பார்த்தால் புல்லரிக்கத்தான் செய்கிறது” என தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.
பிரபல முகநூல் பதிவர் Kondal Samy பதிவு:
இந்து மகா சபாவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்து முன்னணியும் பேசும் அதே அரசியலைதான் கண்ணீர் துளிகள் திமுகவும் பேசுகிறது. என்னா மற்றவர்கள் நேரடியாக பேசுவார்கள் கண்ணீர் துளீகள் மறைமுகமாக இதுவரை பேசிவந்தார்கள். ஆனால் இப்போது நேரடியாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு உதாரணம் தான்
எங்கள் இயக்கத்தில் இருப்பவர்களில் 90% பேர் இந்துக்கள் என்று ஸ்டாலின் சொல்வதாகட்டும்,
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலையை கொச்சைப்படுத்துவதாகட்டும்,
ஈழத்தமிழர்களின் தனிநாடு கோரிக்கையை அழிக்க நினைப்பதாகட்டும்,
தலைவர் பிரபாகரனை இகழ்வதாகட்டும்,
பெரியாரை பெயருக்கு பயன்படுத்தி பார்ப்பனமயமாக்கலை ஆதரிப்பதாகட்டும்,
மீத்தேன், கூடங்குளம், நியுட்ரினோ, முல்லைபெரியாறு உள்ளிட்ட பிரச்சனைகளின் தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் துரோகமிழைப்பதாகட்டுமென்று தொடர்கிறது அவர்களின் துரோகம்.
நன்றாக கவனித்து பாருங்கள் மேற்சொன்ன அனைத்து அழிவுகளிலும் கண்ணீர் துளிகளின் நிலைப்பாடும் ஆர்.எஸ்.எஸின் நிலைப்பாடும் ஒரே மாதிரி இருக்கும். இது போதாக்குறைக்கு இப்போது இந்த ஆரியவெறியன் சுப்ரமணிய சாமியை பேராசான்னு வேற சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க.
ஆக மொத்தம் ஒன்னும் மட்டும் தெளிவாக தெரிகிறது கண்ணீர் துளிகள் கட்சியின் முடிவுரையை அக்கட்சியினரே எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று.
திறம்பட செய்யுங்கள் உங்கள் வேலையை முடியட்டும் கண்ணீர் துளிகள் கட்சி! விடியட்டும் தமிழகம்!” என எழுதியுள்ளார்.