இறைவி திரைப்படம் வெளியான நாளில் இருந்தே சர்ச்சைகள் மொய்க்கத் தொடங்கிவிட்டன. அது பெண்ணிய படமா என்பதிலிருந்து தொடங்கி தற்போது ஈழத் தமிழ் ஆதரவாளர்களை விமர்சிக்கும் படமா ஆதரிக்கும் படமா என்பது வரை வந்து நிற்கிறது.
திரை திறனாய்வாளர் Saraa Subramaniam தனது முகநூல் பதிவில்…
#இறைவி படத்தின் ஆரம்ப காட்சி ஒன்றில் இயக்குநர் அருள் (எஸ்.ஜே.சூர்யா) பார் ஒன்றில் மது அருந்திக்கொண்டிருப்பார். அப்போது, அவரிடம் உறுதுணைக் கதாபாத்திரத்தில் நடித்தவர், “தமிழன் தமிழன்னு உணர்வை தூண்டிவிட்டு பைசா பண்ணுற பிராடுகளுக்கு செருப்படி…” என்று அருள் எடுத்து வெளியாகாத படத்தைப் பற்றி சிலாகித்துக்கொண்டிருப்பார். அப்புறம்தான் பார்வையாளருக்குத் தெரியும், அவர் எடுத்து முடங்கியுள்ள அந்தத் திரைப்படத்தின் தலைப்பு ’17-05′. அதாவது ‘மே 17’. ஆக, அதை ஒரு தீவிரமான Satire படம் என்றோ, சம்பந்தப்பட்டவர்களை கடுமையாக சாடும் படமாகவோ எடுத்துக்கொள்ளலாம்.
இந்த நிலையில், அந்தக் குறிப்பிட்ட டயலாக்கை கவனிக்காமலோ அல்லது கண்டுகொள்ளாமலோ அல்லது புறக்கணித்துவிட்டோ அந்தத் திரைப்படத்தின் தலைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு பாசிட்டிவாக அணுகலாம்.
மே 17 இயக்கத்தைச் சேர்ந்த Thirumurugan Gandhi தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது கீழே…
’இறைவி’
இதற்கு முந்தைய திரு. கார்த்திக் சுப்புராஜின் படங்களை பார்த்ததில்லை. திட்டமிடப்படாத ஒரு பின்னிரவில் படத்திற்கு சென்றோம். எனக்கு படம் பிடித்திருக்கிறது.
‘பெண்ணியம்’, ‘மாற்று’, என்றெல்லாம் இப்படத்தின் மீது எனது கருத்தினை வைக்க விரும்பவில்லை. தைரியமான சில முயற்சிகளை வரவேற்பதில் என்ன குறை வந்துவிடப் போகிறது. அனைத்தையும் வணிக சந்தையாக மாற்றி இருக்கும் தமிழகத்தில் , சில அச்சமற்ற முயற்சிகள் வாழ்த்துகளைப் பெறுவது முக்கியம் என்றே நினைக்கிறேன்.
ஆண்-பெண் உறவுகள் கருப்பு-வெள்ளையாக மட்டுமே இருப்பதில்லை. ’ஆண்’ எனும் ஆணின் எதேச்சதிகாரப் போக்கு காலத்திற்கேற்ப பலவடிவங்களை மாற்றிக்கொள்வதும், அதற்கு எதிரான பெண்ணின் எதிர்வினைகளையும் பதிவு செய்ய முயன்றிருக்கிறார். ஆணுடனான பெண்ணின் போராட்டங்கள் நேற்றோடு, இன்றொடு முடிந்து போய்விடுவதில்லை. சமபலமற்ற நிலையை ஆண்கள் ஏற்படுத்துவதும், அதை உடைப்பதற்கான இடவெளிகளை உருவாக்குவதுமான பெண்களின் போராட்டங்களும் பல கதைகளையும், கதை சொல்லிகளையும் திரும்ப திரும்ப உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
காதலை புனிதமாகவும், காமத்தினை பாவமாகவும் காட்டிய சினிமாவில், காமத்தினை சராசரித் தேவையாக போகிற போக்கில் ஒரு பெண் கதா பாத்திரம் பேசிச் செல்வதை புரட்சிகரமான செயலாக காட்டாமல் இயல்பான ஒரு காட்சியில், ஒரு வசனத்தில் கடந்து பதிவு செய்வதை காண முடிகிறது.
17-05ன்னு ஒரு படம், தமிழருக்கு முக்கியமானப் படம் , இப்படத்தினை வெளியிட இயக்குனராக சூர்யா நடத்தும் போராட்டம் என விரியும் கதையில், மே17 எனும் தமிழினப்படுகொலையின் தினத்தினை இயக்குனர் பதிவு செய்திருப்பதை கவனத்தில் எடுக்காமல் கடந்து சென்றுவிட முடியாது. சொல்லாமல் சில செய்திகளையும் இயக்குனர் சொல்லி இருப்பதாக உணர்கிறேன். வலி மிக்க தினத்தினை வெளியிடப்பட முடியாத ஒரு திரைப்படத்தின் தலைப்பாக வைப்பதும், அப்படத்தினை வெளியிட மறுக்கும் தயாரிப்பாளராக காட்டும் ஒரு லும்பனையும் நிகழ்கால அரசியலில் எளிதில் பொறுத்தி பார்த்துவிட இயலும். மே17 எனும் தினம் தமிழர்களின் வாழ்வியலில் மறக்க இயலாத ஒரு வலிமிகுந்த தினம் என்பதை வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் தமிழகம் பதிவு செய்கிறது என்பது வரவேற்கப் பட வேண்டிய ஒன்று.
இதை முன்னனி படைப்பாளிகள் தங்களது பதிவுகளில் வைத்துச் செல்வது மிக ஆரோக்கியமானது.
இனத்தின் வலியை வெளிக்கொணரும் ஆற்றலை ஒரு இனம் தனது ஊதாரித்தனத்தில் அழித்துக் கொண்டிருக்கிறது என்பதாகவும், அந்த வலிக்கான தீர்வினை குறுக்கு வழியில் சாதித்து விட முடியுமென்கிற அரசியல் அரைகுறைதனத்தினை, குறியீடாக கண்ணகி சிலை திருட்டின் ஊடாக குறுக்கு வழியில் செய்வதாகவும் புரிந்து கொள்ளவும் முடியும். தனக்கு கீழாக ஒருவரை அடக்கி வைத்து சுரண்டிக் கொண்டே தனது விடுதலையை கனவு காண்பதும், அடைவதும் இயலாது என்பதாகவும் நீங்கள் புரிந்து கொள்ளவும் இயலும். அடக்கி வைக்கப்படுவதை பெண்ணாகவோ, தலித்தாகவோ நீங்கள் புரிந்து கொள்வது உங்கள் தேர்வு.
.
நம் இளைஞர்களின் முயற்சிகளை வரவேற்போம், அவர்களை உற்சாகப்படுத்துவோம். உலகம் போற்றும் படைப்புகளை, அவர்கள் வருங்காலத்தில் உருவாக்க நம் வாழ்த்துகளும், ஆதரவும் அவர்களுக்கு தேவை. இப்படத்தினை அவசியம் பாருங்கள்.