
ஜடையாம்பாளையம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சின்னஞ்சிறு கிராமம்
கனகராஜ்.
8 வயதுகூட நிரம்பாத சிறுவன்
தந்தை மாற்றுத்திறனாளி
தாய் விவசாயிக்கூலி
தாயின் வருமானம் குடும்பத்துக்கு போதுமானதாக இருக்கவில்லை மூன்றாம் வகுப்பில் இருந்தே பள்ளியில் பாதி நேரம்தான் இருப்பான் மதியஉணவுக்குப்பிறகு ஏதாவது ஒரு வேலைக்கு சென்றுவிடுவான் .
தந்தையின் உடல் நிலை மோசமானதை ஒட்டி தனது 11 ஆம் வயதில் படிப்பை முற்றாகக் கைவிட்டுவிட்டு வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறான்
கம்பனி அவனுக்கு பிடித்துவிடுகிறது காசும் கிடைக்கிறது
இப்படிப் போய்க் கொண்டிருந்தவேளையில்
ஒரு நாள்…..
’திடீர் ஆய்வு’க்காக தொழிற்துறை அலுவலர்கள் அந்த கம்பனிக்கு வருகிறார்கள், கனகராஜை பார்க்கிறார்கள் குழந்தைய வேலைக்கு வெச்சுக்ககூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா? தேவையான அளவுக்கு டோஷ் தேவையான அளவுக்கு சட்டம் விட்டு ,உரிமையாளருக்கு மொய்த்தொகையை எழுதுகிறார்கள்
ஆய்வுக்குவந்த டீமில் இருந்த ஒருவர் சிறுவனிடம்,அவனது குடும்பம் வேலைக்கு வந்த பின்னணிஎல்லாவற்றையும் கேட்டு குறிக்கத்தொடங்குகிறார் அவனது துடுக்கும் துணிவான பதிலும் அவரை ஈர்க்கிறது . ஒரு அலுவலர் என்ற நிலையில் இருந்து இறங்கி, அவனை தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் இயங்கிவந்த முறைசாரா பள்ளியில் சேர்க்கமுயற்சிக்கிறார்
அந்த அலுவலரின் வேண்டுகோளின்படி அப்பள்ளியின் ஆசிரியர் சிறுவனின் பெற்றோரை சந்தித்து மனதை மாற்றதொடர்சியாக முயற்சி செய்கிறார். மாதாமாதம்100 ரூபாய் வழங்க அத்திட்டம் முன்வந்தது என்பது ஓரளவுக்கு சிறுவனின் குடும்பத்தை திருப்திகரமாக்குகிறது. அவர்கள் சம்மதிக்கிறார்கள் பள்ளிக்கு குதூகலமாக செல்ல தொடங்குகிறான் அந்தப்பள்ளி வாழ்க்கை அவனுக்கு ஏனோ பிடித்துப்போகிறது
முறைசாரா பள்ளியில் கிடைத்த ஒருவருடப் பயிற்சி அவனுக்குள் கல்விகுறித்த நம்பிக்கையை ஊட்டுகிறது அதன் பின் அவனை அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்த்துவிடுகிறார்கள்
தொடர்ந்து படிக்கிறான்
பள்ளியில் அவன் சிறந்த மாணவனாக ஜொலிக்கிறான். 10 வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்ணோடு தேர்வாகிறான். அதன் பின் மேல்நிலைப்பள்ளியில் 85 சதவீத மதிப்பெண் பெற்று தேர்வாகிறான். தேர்வான கையோடு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் சேர்கிறான்.
குடும்பம் குதூகலிக்கிறது
குறிப்பிட்ட வருடங்களில் படிப்பை வெற்றிகரமாக முடித்துவிடுகிறான் . ஆனால் அதுமட்டுமே அவனுக்கு போதுமானதாக இல்லை .
இங்கே ஒரு இடைவெளிவிடுவோம்
வருடாவருடம் தொடர்ந்து நடைபெறும் கல்விவிழா மேட்டுப்பாளையத்தில் நடந்தது. இது கல்விவிழா 2016
வாழ்த்துரைக்காக கனகும் அவர் சக தோழர்களும் என்னை அழைத்திருந்தார்கள். போகமுடியாத சூழல்தான் ஆனால் கலந்துகொள்வதென்று முடிவு செய்திருந்தேன்.
இந்த கல்விமையத்தின் மீது எனக்கு பெருங்காதலுண்டு
இந்தக்கல்விமையம்தான் அங்கே பழங்குடிமாணவர்களுக்கும் தலித் மாணவ்ர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இயங்கிக்கொண்டிருக்கிறது TNPSC/banking/rrb/TET போன்ற போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சியளித்து தயார்படுத்தி அவர்களை வருடந்தோறும் அனுப்பிவைக்கிறது. .
சென்ற ஆண்டு மட்டும் 34 தலித் மற்றும் பழங்குடி மாணவர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் (TNPSC) தேர்வுகளில் வெற்றிபெறவைத்தது
நேரம் பத்தை கடந்துவிட்டிருந்தது. உள்ளேபோகும்போது நிகழ்சி தொடங்கிவிட்டது
அரங்கம் வழக்கத்துக்கும் மாறாக இருந்தது
அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குத்தான் மரியாதை என்ற நிலையை மாற்றி சுற்றுவட்டப்பகுதியில் தேர்ச்சிபெற்ற தலித் பழங்குடி மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அத்தனை மாணவர்களையும் மாணவிகளையும் மேடையேற்றி நினைவுப்பரிசளித்து கெளரவப்படுத்தினார்கள்
பட்டியலின,பழங்குடியின மாணவர்கள் கல்லூரிகளில் கட்டணமில்லா கல்வியை பெற வழிவகுக்கும் அரசாணை :92 குறித்த விழிப்புணர்வை வழங்கினார்கள் .
அத்தோடு நில்லாமல் ஒவ்வொரு கல்விப்பிரிவிலும் நிபுணத்துவம் பெற்றவர்களைக்கொண்டு கலந்துரையாடலை நிகழ்த்தினார்கள்
அருந்ததிய சமூகத்திலிருந்து பல்வேறு தடைகளைத்தாண்டி 2016 ஆம் ஆண்டில் IAS தேர்வில் வெற்றிபெற்ற திரு.பா.பிரகாஷை பங்கேற்க வைத்து நம்பிக்கையூட்டினார்கள்
நிகழ்வு முடிந்து செல்லும் பழங்குடி மாணவி சுதாவை நிறுத்திக்கேட்டேன் .
பயிற்சி உபயோகமா இருந்ததா?
உங்களுக்கே தெரியும்சார் எங்க அப்பா அம்மால்லாம் படிக்கல , 12 க்கு பின்னால் என்ன படிக்கிறது எங்கபோறதுன்னுங்கூடத்தெரியாது இப்ப எங்களுக்கு ஒரு தெளிவு வந்திருக்கு .அம்மா அப்பா செய்யாதை சார்ங்க செய்யறாங்க வருகேம் பஸ் போயிறும் என்று அவசரமாக நகர்ந்தார்கள்
திரும்பி அரங்கைபார்த்தேன் கனகும் சக தோழர்களும் அரங்கத்தை சுத்தப்படுத்தும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள்
தனிப்பட்டமுறையில் கனகையும் சக தோழர்களையும் நன்கறிவேன் அவர்களின் குடும்பப் பின்னணிகளையும் அறிவேன்
வகுப்புகள் நடத்தவோ பயிற்சிக்கான மெட்டீரியல் வழங்கவோ இன்னும் திணறிக்கொண்டுதான் இருக்கிறார்கள் தேர்வாணைய பயிற்சிக்கு வரும் மாணவ்ர்களுக்கான தகவல்களை கல்வி சார்ந்த செய்திகளைத்தேடக்கூட ஒரு கணிணியோ இணைய வசதியோ அவர்களிடத்தில் இன்றும் இல்லை கிடைக்கும் இடத்திலும் நண்பர்களிடம் கேட்டுப் பெறுகிறார்கள்
வழியனுப்ப வாசலுக்கு வந்தார்
கனகு எப்படி சமாளிக்கறீங்க ?
படிப்பு ஒன்னுதான் எங்களுக்கு சொத்து அத எப்படியோ காப்பாத்தி இவுங்ககிட்ட கொடுக்கனும் அவ்வளவுதான் வரமாட்டீங்களோன்னு இருந்தேன் நல்லவேள வந்துட்டீங்க நன்றி .
கைகளைபிடித்துக்கொண்டார் …
பிரித்துக்கொள்ளவெகுநேரம் பிடித்தது
இந்த கனகு வேறுயாருமில்லை
வறுமையால் மூன்றாவதோடு படிப்பை கைவிட்டுவிட்டு குழந்தைத் தொழிலாளியாக ஒரு கம்பனியில் பணியாற்றியதாக மேலே படித்தோமே அதே கனகராஜ்தான் இந்தக்கனகு
தற்போது ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். முன்னணியில் இருந்து ஒரு முன்னுதரணமாக நின்று இந்த பூலே கல்வி மையத்தை இயக்குகிறார்
இந்த வருடத்திலிருந்து தொலைதூரத்திலிருக்கும் பணிரெண்டாவது மாணவ மாணவியர்களுக்கு கணித ஆங்கில பயிற்சிகளை துவக்க இருக்கிறார் மலைகளுக்குள் இருக்கும் கிராமங்களுக்கு போகவர வசதிகளில்லை. ஆனால் ஆசிரியர்களுக்கு பஞ்சமில்லை.அதற்க்கான திட்டமிடுதலில் இருக்கிறார் கணினியும் ஸ்டடி மெட்டிரியல்களும் உடனடித்தேவையாக இருக்கிறது
நீண்டகாலத்திட்டமாக சொந்த இடத்தில் அனைத்துவசதிகளுடனும் இயங்கவேண்டும் என விரும்புகிறார்
அவருக்கு பிடித்துக்கொள்ள இன்னும் கரங்கள் வேண்டும் யாரேனும் உதவிக்கரம் நீட்டினால் இன்னும் உற்சாகமாக களத்தில் இயங்குவார்
தொடர்பு எண். கனகராஜ் 9843962567
ஒடியன், எழுத்தாளர்; செயற்பாட்டாளர்.