ஈரோடு மாவட்ட மலையாளி என்ற பழங்குடியின மக்களை ‘மலையாளி கவுண்டர்’’ என்ற புதுப் பெயரில் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து மத்திய-மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பெ.சண்முகம் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:
தமிழ்நாட்டில், பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரன், மலையாளி கவுண்டர் ஆகிய பிரிவினரை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன. தமிழக முதலமைச்சர் சார்பில் இதை வரவேற்று அறிக்கைகள் வெளிவந்தன.“மலையாளி” என்றபிரிவு தமிழக பழங்குடியினர் பட்டியலில் வரிசை எண் – 25ல் உள்ளது. 1950ம் ஆண்டிலிருந்து இந்த பெயரில்தான் இவ்வின மக்கள் சான்றிதழ் பெற்று வருகின்றனர்.
பெயரை மாற்ற வேண்டுமென்று யாரும் கோராத நிலையில்தன்னிச்சையாக மத்தியஅரசு இவ்வாறு அறிவித்திருக்கிறதா? அல்லது மாநில அரசு மக்களின் கருத்தை அறியாமலே இத்தகைய ஒரு பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியதா என்பதை தாங்கள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். கோவை மாவட்டத்திலிருந்து ஈரோடு மாவட்டம் பிரிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் 1990ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட மலையாளிகளை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று பரிந்துரை அனுப்பப்பட்டது. மீண்டும் இம்மக்களின் வாழ்வியல் சூழல் குறித்து ஆய்வு செய்து2006ம் ஆண்டு அனுப்பப்பட்டது. ஆனால் இதுகுறித்து மத்திய அமைச்சரவையின் நிலை என்ன என்பது தெரியவில்லை. எனவே, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் தொடர்பான மசோதா தயாரிக்கப்படுவதற்கு முன்பாக தாங்கள் அவசரமாக தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். “மலையாளி கவுண்டர்” என்பது புதிதாக ஒரு பிரிவினர் என்ற முறையில் சேர்ப்பதோ அல்லது ஏற்கனவே பட்டியலில் உள்ள “மலையாளி” என்பதை மலையாளி கவுண் டர் என்று பெயர் மாற்றுவதோ தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும்.
“மலையாளி கவுண்டர்” என்ற பிரிவை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். “ஈரோடு மாவட்ட மலையாளி” விசயத்தில் மேலும் காலதாமதம் செய்வதற்கான எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை. “ஈரோடு” என்று ஒரு வார்த்தை சேர்க்க 25 ஆண்டுகள் எடுத்துக்கொள் வதுயாராலும் நியாயப்படுத்த முடியாது என்பதை ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.மேற்குறித்து இரண்டுபிரச்சனைகளின் மீது தங்களின் மேலான தலையீட்டை வேண்டுகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பவானி சாகர் தொகுதி முன்னாள் எம் எல் ஏவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. எல். சுந்தரமும் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.