பணப்பட்டுவாடா நடத்தப்பட்டதாக ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பாஜக, பாமக தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.கருணாநிதி மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது திமுகவுக்கு எதிரான சதி என்றும் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சி ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் தானே போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரித்தார்.
முன்னதாக தேர்தல் முடிவுகள் குறித்து வெளியிட்டிருந்த அறிக்கையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை வழங்கிய தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார் கருணாநிதி.
இந்த அறிக்கையில், தமிழகச் சட்டப் பேரவைக்கான 15வது பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்து 232 தொகுதிகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப் பட்டுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 232 தொகுதிகளிலும் தி.மு. கழகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு 1 கோடியே 71 இலட்சத்து 75 ஆயிரத்து 374 வாக்குகள் அதாவது 39.7 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன. அ.தி.மு.க. அணிக்கு 1 கோடியே 76 இலட்சத்து 17 ஆயிரத்து அறுபது வாக்குகள் அதாவது 40.8 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. அணிக்கும், தி.மு.கழக அணிக்கும் உள்ள வாக்குகள் வித்தியாசம் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 686 வாக்குகள் தான்; அதாவது 1.1 சதவிகிதம் வாக்குகள் தான் இரண்டு அணிகளுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். எப்படி என்றாலும் அவர்கள் ஆளும்கட்சி. நாம் எதிர்க் கட்சி. எதிர்க் கட்சி என்றால், தமிழகச் சட்டப் பேரவையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு 89 உறுப்பினர்களைக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் தான் பிரதான எதிர்க்கட்சி.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு, வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுபோலவே, திருவாரூர் தொகுதியில் கழக வேட்பாளராக இரண்டாவது முறையாக அந்த மண்ணின் மைந்தன் என்ற முறையில் போட்டியிட்ட நிலையில், 1 இலட்சத்து 21 ஆயிரத்து 473 வாக்குகளை அளித்து, தமிழ்நாட்டிலே மிக அதிக வித்தியாசமான 68 ஆயிரத்து 366 வாக்குகள் கூடுதலாக அளித்து வெற்றி பெறச் செய்த திருவாரூர் தொகுதி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைக் குவிக்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.