பெரியாரிஸ்ட்டாக வாழும் க. பொன்முடி குறித்த செய்திக்கு சில விளக்கங்களும் சில கேள்விகளும்!

திமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி  “ஓட்டு போடும் போது சாதி பார்க்கக்கூடாது. திருமணம் செய்யும் போது சாதி பார்க்க வேண்டும், வாக்களிக்க சாதி பார்த்தால் அப்புறம் வருஷம் முழுதும் கஷ்டம்தான்” என விழுப்புரம் திமுக கூட்டத்தில் பேசியதாக  ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. அதை ஒட்டியும் நாளிதழில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டும் தி டைம்ஸ் தமிழ் செய்தி வெளியிட்டது.

க. பொன்முடியின் சம்பந்தியும் ஆய்வாளருமான சுபகுணராஜன், இந்தச் செய்தியைப் பகிர்ந்திருந்த ஃபிரண்ட்லைன் ஆசிரியர் விஜயசங்கர் மற்றும் தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு கருணா ஆகியோரது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

கருப்பு கருணாவின் முகநூல் பக்கத்தில் அளித்திருக்கும் விளக்கம் அல்லது மறுப்பு:

“வணக்கம் தோழர்! ஒரு பத்திரிக்கைச் செய்தியின் அடிப்படையில்( பல வேளைகளில் தவிர்க்க முடியாததுதான்) திரு.க .பொன்முடி அவர்களை சாதி வெறியராக்கி மகிழ்ந்திருக்கிறீர்கள். ஒருவர் சாதி சார்பற்றவர் என்பதை எதை வைத்துத் நீங்கள் தீர்மானிப்பீர்கள் எனத் தெரியவில்லை. சொந்த வாழ்வு அதற்குத் தகுதியானது என்பது என் துணிபு. திரு.க பொன்முடி அவர்களின் வாழ்வு இதற்கு சரியான உதாரணம். அவரது குடும்பத்தில், அவரது இரண்டு மகன்கள் உட்பட , தம்பிகள், தங்கைகள் பிள்ளைகளில் ஒருவர் கூட சொந்த சாதியில் திருமணம் செய்து கொள்ளவில்லை. அனைத்தும் காதல் திருமணங்கள். அவரது குடும்பத்தில் கள்ளர்,பிள்ளை,வன்னியர், தலித்( மைத்துனர் மகன்) நாயுடு, என அனைத்து சாதியிலும் உண்டு. சொந்த குடும்ப மண உறவுகளிலேயே சாதி பார்க்காத பெரியார் தொண்டருக்கு இதைவிட பெரும் அவமதிப்பு இருக்க முடியாது. பேச்சின் போக்கில் ‘ கல்யாணத்துக்கு வேணுனா சாதி பாருங்கய்யா. ஓட்டுப் போடும்போது வேண்டாம் ‘ என்று சொன்னது இவ்வளவு பெரிய அவப் பெயருக்கு காரணமாகி விட்டிருக்கிறது. இதையும் மீறிதான் பெரியாரின் தொண்டர்கள் மீது அவதூறு செய்வோம் என்றால் தொடருங்கள் உங்கள் கருத்துப் பரப்புரையை.சொந்த வாழ்க்கை ‘ மாதிரி’ ஆகாது , சொன்னதாக புனையப்பட்ட செய்திதான் முன்னுரிமை பெறும் என்பது விபரீதம். அதிலும் அகமண முறை தவிர்த்த ஒன்றை தன் குடும்பத்தில் அனுமதிக்காத வைகோவுக்கு கொடியேந்தும் தோழர்கள் நீங்கள் என்பதுதான் வேதனை. இந்தப் பதிலை பதிவு செய்யும் நான் அவரது பெரிய மகனுக்குப் பெண் கொடுத்த சம்மந்தி.”

இதற்கு கருப்பு கருணாவின் பதில்,

“1. பத்திரிகை செய்தியின் அடிப்படையில் என்பது தவிர்க்க இய்லாதது.உங்களுக்கு புரியும்.

2. அவரை சாதிவெறியர் என எங்கும் நான் குறிப்பிடவில்லை.அண்ணாவின் முழக்கத்தை மீறி பொது இடத்தில் பேசுகிறாரே என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.
3.அதுவும்கூட ஸ்டாலினின் சமீபத்திய அவதூறு வழக்கு போடும் நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கும் விதத்தில்தான் பதிவிட்டுள்ளேன்.
ஆனால் இதை விவாதிக்காமல் உடன்பிறப்புகள் எதெதையோ இங்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
5. அந்த கொடியேந்தும் என்பது அரசியல் நிலைபாடு.கலைஞருக்கும்தான் ஏந்தியிருக்கிறோம்.உங்களைப்போன்ற ஆய்வாளர்கள் இதை குறிப்பிடுவதை எப்படி புரிந்துகொள்ள?
6. இந்த பதிலை நான் தருவதுகூட அவருக்கு நீங்கள் சம்பந்தி என்பதால் அல்ல.தமிழின் போற்றத்தக்க ஆய்வாளர் என்பதால்தான். நன்றி தோழர்”.

இதேபோல சுபகுணராஜன் தன்னுடைய பக்கத்தில் அளித்திருக்கும் விளக்கம்:

“தி.மு.க வின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் திரு.க.பொன்முடி அவர்கள் பேசியதாக வெளியான செய்தியொன்றின் அடிப்படையில் அவரை சாதி வெறியராக்கி கொக்கரிக்கிறது இங்கொரு முற்போக்காளர் கூட்டம். அவர்கள் அனைவருக்கும் ஒரு சில தகவல்களைச் சொல்லி,அவர்களின் மனட்சாட்சியுடன் உரையாட விரும்புகிறேன். இவர்களில் நான் மிகவும் மதிக்கும் நண்பர்கள் அநேகம் பேர். குறிப்பாக விஜயசங்கர் ( பிரண்ட்லைன் ஆசிரியர்) கருப்பு கருணா, பிரபாகர் போன்றவர்கள். ஒருவர் தன் சொந்த வாழ்வில் சாதியைப் பேணானது உயர்ந்ததா? அல்லது துண்டை முறுக்கிக் குரல் உயர்த்திப் பொது மேடையில் பேசிவிட்டு, அக வாழ்வில் அச்சுப் பிசகாமல் அகமண முறையிலான திருமணங்கள் வழியாகத் தொடர்வது சிறப்பா? திரு.க.பொன்முடி அவர்கள் குடும்பத்தில் அவரது இரண்டு மகன்கள் இருவர் உட்பட அவரது சகோதரர்கள்,சகோதரிகள் பிள்ளைகளுக்கும் சாதிமறுப்புத் திருமணம் செய்து வைத்துள்ளார். அவரது குடும்ப உறவில் அனைத்து சாதிகளும் உண்டு. தலித் (சொந்தத் தம்பியின் மனைவி, மைத்துனர் மகனின் மனைவி), கள்ளர்,பிள்ளை வன்னியர்,செட்டியார், நாயுடு என நீழும் பட்டியல் அது. அனைத்தும் காதல், சாதி மறுப்புத் திருமணங்கள். அவற்றை முன்னின்று நடத்திய உண்மை பெரியார் தொண்டர் பொன்முடி.அவரை விமர்சிக்க தயை செய்து சாதியைக் காரணமாக்காதீர்கள். அவரை விமர்சிக்கும் உங்களில் ஒவ்வொருவரின் ‘மனசாட்சியைத்’ தொட்டுச் சொல்லுங்கள். அவர் சாதி வெறியரா? வெகுமக்கள் அரசியல் அரங்கின் ‘சமரசங்களுக்கு’ அப்பாற்பட்டு சொந்த வாழ்வை சாதிச்சிடுக்குகளுக்கு அப்பால் வைத்திருக்கும் ‘மிச்சமாயுள்ள’ பெரியார் தொண்டரை அவமதிக்காதீர்கள். அதிலும் தன் சொந்தக் குடும்பத்தில் அகமண முறை ஒன்றைத் தவிர வேறொன்றும் அனுமதிக்காத வைகோவுக்கு கொடி பிடித்துக் கொண்டு இந்த அவதூறைச் செய்ய வேண்டாம். இந்தப் பதிவைச் செய்யும் நான் அவரது சொந்தச் சம்மந்தி. ஒரு மனிதர் தன் வாழ்நாளில் ஒருபோதும் ‘ பொருட்படுத்தாத’ சாதியம் கொண்டு ஒருவரை வீழ்த்த முனைவது நீதியல்ல.”

இதற்கு ஃபிரண்ட்லைன் ஆசிரியர், விஜயசங்கர் அளித்துள்ள விளக்கம்:

நான் மிகவும் மதிக்கும் நண்பர் சுபகுணராஜன் அவர்களுக்கு, அந்த செய்தியைக் கண்டவுடன் ஏற்பட்ட அதிர்ச்சியில் அதைப் பகிர்ந்துகொண்டேன். பொன்முடி அவர்கள் அதை மறுத்திருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும் நீங்கள் வேதனையுடன் இங்கு பகிர்ந்து கொண்ட உண்மைகளின் அடிப்படையில் அந்தப்பதிவை நீக்கிவிடுகிறேன். அவதூறு செய்வதிலோ “கொக்கரிப்பதிலோ” எனக்கு நம்பிக்கை இல்லை. முப்பது வருட பத்திரிக்கை அனுபவத்தில் மூன்று முறைதான் அவதூறுக்கான நோட்டிஸ் வந்திருக்கிறது. அதுவும் பதில் அனுப்பியவுடன் அடங்கிவிட்டது. இன்று வரை establishmentக்குஎதிராகத்தான் சமரசமின்றி இயங்கி வருகிறேன் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தனிப்பட்ட வாழ்க்கையிலும் சாதி மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட, அவற்றின் பெயரால் நடக்கும் அரசியலையும் அவலங்களையும் எதிர்த்து நிற்கும் ஒருவனாகத்தான் இருக்கிறேன். என்னைத் தெரிந்த எல்லோருக்கும் இது தெரியும். பிறப்பால் மலையாளியாக இருந்தாலும் நான் படித்ததும் பெரும்பாலும் எழுதுவதும் தமிழில்தான். எங்கள் வீட்டில் தமிழ் பேசித்தான் வளர்ந்தோம். சொல்லப்போனால் எனக்கு மலையாளம் பேச வராது. மொழி அடையாளத்தையும் கடந்து நிற்கிறேன் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன். பொன்முடி உங்களின் சம்பந்தி என்று எனக்கு தெரியும். ஆனால் அந்தப் பதிவை பகிரும்போது ஒரு கணம் கூட உங்களை நினைக்கவில்லை. யார் அப்படிச் சொல்லியிருந்தாலும் அதை நான் கண்டித்திருப்பேன். 

உங்களை நான் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். பதிவை உடனே நீக்கிவிடுகிறேன். நம் காலை நேர நடைப்பயிற்சியின் போது நடக்கும் கருத்துப் பரிமாற்றங்களை miss செய்கிறேன். காட்சிப் பிழை கிடைப்பதில்லை. கிடைத்தால் மகிழ்ச்சி! அன்புடன் விஜயசங்கர்”

மேற்கண்ட சம்பாஷணைகளில் பல தகவல்கள் கிடைக்கின்றன. சில கேள்விகள் எழுந்திருக்கின்றன. முதலாவதாக, தன்னுடைய நேரடி அனுபவத்தின் மூலம் க. பொன்முடி, சொந்த வாழ்க்கையில் சாதிமறுத்தவராக இருக்கிறார் என்கிறார் சுபகுணராஜன்.

சொந்த வாழ்க்கையில் சாதிமறுத்தவராக இருக்கும் க.பொன்முடி, பொது வாழ்க்கையில் அதுவும் பெரியாரிஸ்டாக இருக்கும் அவர், ஏன் சாதி பார்த்து கல்யாணம் பண்ணலாம்; சாதி பார்த்து ஓட்டளிக்கக் கூடாது என்கிறார்? அவர் இருப்பதுவும் பெரியார் வழிவந்த திராவிட முன்னேற்றக் கழகத்தில்தானே? எனில், அவர் பேசியது எவ்வகையான நிர்பந்தத்தில்? க. பொன்முடிக்கு க்ளீன் சிட் கொடுக்கும் சுபகுணராஜன், க. பொன்முடியை அந்த இடத்தில் எது அப்படி பேச வைத்தது என்பதையும் விளக்குவாரா?

ஒருவர் சொந்த வாழ்க்கையில் எப்படி வேண்டுமானாலும் கொள்கையோடு இருந்துகொள்ளலாம். சாதி பார்த்து தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்யலாம், அல்லது சாதியை மறுத்து திருமணம் செய்யலாம். ஆனால், அவர் பொதுவெளியில் சாதியற்றவராக  இருக்க வேண்டும் என்பதைத்தான் அரசியலமைப்பு சொல்கிறது. குறிப்பாக அரசியல் என்னும் பொதுவெளிக்கு வந்துவிட்ட ஒருவர், சாதியை முன்னிலைப்படுத்தி ஏன் பேச வேண்டும்?

விழுப்புரம் பகுதிகளில் நடக்கும் சாதிய மோதல்களையும் திமுக போன்ற சமூக நீதி பேசிய இயக்கங்கள் சாதியத்தைத் தூக்கிப் பிடித்துப் பேசுவதையும் தனித்தனியே பிரித்து பார்க்க முடியாது. ஒரு பெரியாரிஸ்டாக வாழும் க. பொன்முடி தன் சொந்த மாவட்டத்தில் சாதியை அழிக்க முற்பட்டரா? அல்லது சாதியைத்தை வளர்க்கும் விதமாக சாதி பார்த்து கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னாரா?

க. பொன்முடி என்ற பெரியாரிஸ்ட், ஒரு அரசு ஊழியராகவோ, சுபகுணராஜன் போன்று ஆய்வாளராகவோ இருந்து ‘சாதி பார்த்து கல்யாணம் செய்யுங்கள்; ஓட்டுப் போடும்போது சாதி பார்க்காதீர்கள்’ என்று சொல்லியிருந்தால் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. ஆனால், அவர் அரசியல்வாதியாக சொல்லும்போதுதான் பிரச்சினை. ஓட்டுப்போடும்போது சாதி பாருங்கள் என்று சாதி சங்கத் தலைவர் ஒருவரின் வாட்ஸப் பேச்சையும் இந்த சங்கிலியோடு இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

க. பொன்முடி ஒரு உதாரணம்தான், பெரியாரிஸ்ட் என்று சொல்லிக் கொண்டு சாதி அரசியலை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகளின் முகங்கள்தான் தெரிய ஆரம்பித்துள்ளன. சமூக ஊடக காலத்தில் அது வேகமாக நடக்கிறது. பொது வெளிக்கு வந்த ஒரு பேச்சு குறித்தும் அதன் பின்னணி குறித்தும் பேச வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகாவே நாங்கள் உணருகிறோம். தனிப்பட்ட ஒருவரை குற்றவாளி ஆக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல, மாறாக அவர் சார்ந்த இயக்கம், அதையும் தாண்டிய அரசியல் வெளி சாதியை எந்தவகையில் தக்க வைத்துக் கொள்ள உதவிக்கொண்டிருக்கிறது என்பதும் சாதியம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தாக்கத்தையும் நாம் பேசித்தான் ஆக வேண்டும்.

க. பொன்முடி பேசியதாக நாளிதழில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டுதான் தி டைம்ஸ் தமிழ் செய்தி வெளியிட்டது. செய்தியை மட்டும்தான் வெளியிட்டோம். க. பொன்முடி சாதி வெறியர் என்று எந்த இடத்திலும் நாங்கள் அவதூறு செய்யவில்லை.

நாங்கள் குறு ஊடகமாக இருந்தாலும் ஆதாரத்தின் அடிப்படையில் செய்திகளை வெளியிட வேண்டும் என்கிற ஊடக அறத்தை பின்பற்றித்தான் செய்திகளை வெளியிடுகிறோம். இந்துத்துவ எதிர்ப்பாக இருந்தாலும் சரி, சாதிய எதிர்ப்பாக இருந்தாலும் சரி, ஒரு குற்றச்சாட்டை சொல்லும் முன் இந்தக் குற்றச்சாட்டு சரியானதுதானா என்று சரிபார்த்தே செய்கிறோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.