ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் சிறப்பு நேர்காணலை வெளியிட்டுள்ளது  ‘தீக்கதிர்’(20-03-2016) நாளிதழ். அதனுடைய மறுபிரசுரம்…

சந்திப்பு : மதுக்கூர் ராமலிங்கம், சி. ஸ்ரீராமுலு

மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஏற்கெனவே பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்றிருந்தன. அதற்கும், தற்போது அமைந்துள்ள மக்கள் நலக் கூட்டணிக்கும் அடிப்படை வேறுபாடு என்ன? மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்திற்கு இந்தக் கூட்டணி எந்த வகையில் ஒத்திசைவாக உள்ளது?

திமுக,அதிமுக ஆகிய இரு கட்சிகளும் அடிப்படையில் கூட்டணி ஆட்சி என்கிற கருத்தை அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டார்கள். ஒரு கட்டாயத்தின்பேரில் வேண்டுமானால் ஏற்றுக்கொள்ள முன்வருவார்கள். ஆனால், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் இந்த நான்கு கட்சிகளும் விளிம்பு நிலை மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதில் முழுமையான உடன்பாடு கொண்டுள்ளன. நான்கு கட்சிகளுக்கும் இந்த விசயத்தில் ஒருமித்த கருத்து இருப்பதால் மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அது கூட்டணி ஆட்சியாக அமையும் என்பதை வெளிப்படையாக பிரகடனம் செய்திருக்கிறோம். ஆகவே, இந்த கூட்டணி மிக இலகுவாக அமைந்தது. இப்போது வலுவாக வளர்ச்சி பெற்று வருகிறது.

மக்கள் நலக் கூட்டணி அதிமுகவின் ‘பி’ டீம் என்று சிலர் விமர்சிக்கிறார்களே.

தங்களுடைய பலவீனத்தை சிலர் இத்தகைய விமர்சனங்கள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். அதிமுக அரசு ஒரு ‘கொலைகார’ அரசு என்றும் ‘கொள்ளைக்கார’ அரசு என்றும் மிக கடுமையாக மக்கள் நலக் கூட்டணி விமர்சித்து வருகிறது. திமுககூட இந்த அளவுக்கு அதிமுகவை விமர்சிக்கவில்லை. அதிமுகவால் உருவாக்கப்பட்ட அணியாக மக்கள் நலக் கூட்டணி இருக்குமேயானால் அதிமுகவே தன்னை இப்படி கடுமையாக விமர்சிக்க இந்த கூட்டணியை அனுமதிக்குமா? தனக்கு தானே சூனியம் வைத்துக்கொள்ளுமா?. இது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் திட்டமிட்ட பிரச்சாரமாகும்.

சமூகக் கொடுமைகளை கண்டுகொள்ளாமல் உள்ளது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் திமுகவும் அதிமுகவும் ஒரேமாதிரியாகத்தான் செயல்படுகின்றன என மக்கள் நலக்கூட்டணி விமர்சனம் செய்து வருகிறது. ஆனால், சிலர் திமுகவும் அதிமுகவும் ஒன்றல்ல என்று மறுக்கிறார்களே?

பதில்: 1967ஆம் ஆண்டு முதல் இந்த இரண்டு கட்சிகள்தான் தமிழகத்தை மாறிமாறி ஆண்டுவருகின்றன. ஆனால், சமூகத்தில் முற்போக்கான மாற்றங்கள் நிகழவில்லை. இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சி கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கிறது. ஆனால், கூட்டிக் கழித்துப் பார்க்கிறபோது ஊழல், மது மற்றும் சாதியவாத, மதவாத சக்திகளின் ஆதிக்கம் ஆகியவைதான் மிஞ்சுகின்றன.அதிமுகவை பாஜகவின் இன்னொரு பிரதி என்றே சொல்லலாம். ஆனால், திமுக சமூக நீதி, பெரியாரின் கருத்துக்களைப் பின்பற்றுவது ஆகியவற்றில் அதிமுகவிடமிருந்து ஓரளவுக்கு வேறுபட்டாலும் மற்ற பிரச்சனைகளில் வேறுபடவில்லை. அதிமுக முழுமையான மதவாத, சாதியவாத அடையாளத்தை கொண்டிருக்கிறது. ஆனால், ஊழல், மது வியாபாரம் உள்ளிட்ட மற்ற நடவடிக்கைகளில் அதிமுகவும் திமுகவும் ஒன்றுதான் என்பதை காணமுடிகிறது.

திமுக, அதிமுகவுக்கு தாங்கள்தான் மாற்று என்று பாமகவும் சொல்கிறது. மாற்றம் தேவை என்றும் அக்கட்சி கூறுகிறதே?

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தலித் வெறுப்பு அரசியலில் இருந்து வளர்ந்திருக்கிற ஒரு ஆபத்தான சக்தி. சிறுபான்மை முஸ்லீம் மக்கள் மீதான வெறுப்பை அடிப்படையாக கொண்டிருக்கிறது பாஜக என்றால் தலித் வெறுப்பை அடிப்படையாக கொண்டிருக்கிறது பாமக. பாஜக `இந்துத்துவா’ கோட்பாட்டை, கருத்தியலை வெளிப்படையாகச் செயல்படுத்தி வருகிறது. அதிமுக,திமுக போன்று பாமக மீதும் ஊழல் வழக்கு உள்ளது. சாதிய மதவாத முத்திரை உள்ளது. எந்த வகையிலும் திமுக-அதிமுகவுக்கு ஒரு முற்போக்கான, புரட்சிகரமான மாற்று சக்தியாக பாமகவை பார்க்கமுடியாது.

தேர்தலுக்கான உடன்பாடு என்பதை தாண்டி பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய தத்துவப் பின்புலத்துடன் மக்கள் நலக் கூட்டணி அமைந்துள்ளது என்று கூறலாமா?

கட்டாயமாக. அப்படித்தான் நான் இதைப் பார்க்கிறேன். தேர்தல்பாதைக்கு வந்ததில் இருந்தே இதுகுறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். இப்போது மக்கள் நலக் கூட்டணி பிரச்சாரக் கூட்டங்களில்கூட ஒரு தத்துவப் பின்புலத்தோடு இந்தக் கூட்டணி அமைந்துள்ளது என்பதைக் கூறி வருகிறேன்.மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகிய தத்துவங் களின் பிரதிநிதிகளாக முறையே இடதுசாரிகளும், மதிமுகவும், விடுதலைச் சிறுத்தைகளும் கைகோர்த்திருக்கிறோம். எனவே, இது ஒரு தத்துவப் பின்னணிக்கொண்ட கூட்டணி என்பதை மனப்பூர்வமாக நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். தேர்தல் திருவிழாவைத் தாண்டி இது தொடரும். தொடர வேண்டும்.

மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் நான்கு கட்ட பிரச்சாரத்தை முடித்து உள்ளீர்கள். அதில் உங்களுக்கு கிடைத்த அனுபவம் என்ன? மக்கள் நலக்கூட்டணிக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கிறது? அரசியல் சாராத புதிய வாக்காளர்கள் என்ன கருதுகிறார்கள்?

இந்த நான்கு கட்சிகளின் ஆதரவாளர்களும் தொண்டர்களும் மிகுந்த உற்சாகமடைந்திருக்கிறார்கள். மனப்பூர்வமாக களத்தில் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். சொல்லப் போனால் குற்ற உணர்வோ, எவ்வித கூச்சமோ இல்லாமல் பணியாற்றுகிறார்கள். அதிமுக, திமுக கூட்டணியில் இணைந்திருந்த போது கட்சித் தொண்டர்களுக்கும் முன்னணித் தலைவர்களுக்கும் ஒருவகை உறுத்தல் இருந்தது. மனதுக்குள் விமர்சனங்களை வைத்துக்கொண்டுதான் செயல்படவேண்டியிருந்தது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் ஊழல் மற்றும் ஆடம்பர அரசியல் ஆர்ப்பாட்டங்களை சகித்துக்கொண்டே தேர்தல் பணியாற்ற வேண்டியிருந்தது. தற்போது அத்தகைய குற்ற உணர்வுகள் ஏதும் இல்லாமல் மிகவும் சுதந்திரமாக மகிழ்ச்சியோடு கூட்டணியின் தொண்டர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதை இந்த சுற்றுப்பயணத்தில் என்னால் காண முடிந்தது.

அத்துடன் கட்சி சாராத பொது மக்களும் வெகுவாக கூட்டங்களில் பங்கேற்கிறார்கள் என்பது மாற்றத்திற்கான ஒரு அறிகுறியாகும்.

சாதிய ஆணவக் கொலைகளை படித்தவர்களே சமூக வலைத் தளங்களில் நியாயப்படுத்தி பழிவாங்கிவிட்டோம் என்கிற அடிப்படையில் கருத்துக்களை பரப்புகிறார்கள். சாதி என்பது கிராமப்புறங்களில் மட்டும்தான் இருப்பதாக கருதமுடியுமா?

சொல்லப்போனால் கிராமத்தில் உள்ள உழைக்கும் மக்களிடம் வெறித்தனமோ வெறுப்பு அரசியலோ கிடையாது. வேறு வேறு சாதியாக இருந்தாலும் உழைக்கும் இடத்தில் அண்ணன் தம்பியாக பழகவில்லை என்றாலும் ஒருதோழமை உணர்வு இருக்கிறது. வெறுப்பு அல்லது மோதல் என்பது அவர்களிடம் இயல்பாக வெடிக்கவில்லை. இதை விதைத்து தூவி விடுவது படித்தவர்களில் சிலரும் அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறவர்களும்தான். மக்களிடம் உள்ள இடைவெளியை தெரிந்து கொண்டு வாக்குவங்கியாக மாற்ற முடியும் என்று நம்பக்கூடியவர்கள்தான் உழைக்கும் மக்களிடத்திலேயே சாதி வெறியை பரப்புகிறார்கள்.படித்தவர்களில் சிலர்தான் மிகமோசமான தற்குறிகளாக சாதி, மத வெறியர்களாகவும் வளர்ந்திருக்கிறார்கள். நமது கல்வி மனிதநேயத்தை போதிக்கவில்லை. சமூக நல்லிணக்கத்தை போதிக்கவில்லை. ஒரு வகையான ஆதிக்க மனோபாவத்தையும் வெறுப்பு மற்றும் விரக்தி மனோநிலையையும் உருவாக்கியிருக்கிறது. அதுதான் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் வெளிப்படுகிறது.

மக்கள் நலக் கூட்டணி தமிழக மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதி என்ன?

ஆணவக் கொலையை தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டு வருவோம் என மக்கள் நலக் கூட்டணி வெளியிட்டிருக்கும் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சொல்லியிருக்கிறோம். ஊழலை ஒழிக்க ‘லோக் ஆயுக்தா’ சட்டம் கொண்டு வருவோம். கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம். ஐந்தாயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு சர்வசாதாரணமாக கொடூரமாகக் கொலை செய்யும் போக்கு தமிழகத்தில் அதிகரித்துவிட்டது. இதை ஒழிப்பதற்கு நிச்சயமாக மக்கள் நலக்கூட்டணி தீவிர முயற்சியில் ஈடுபடும்.

One thought on “ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.